Saturday, January 24, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சீனர்களும் உழைப்பும்) - பாகம் 5


மஞ்சள் நதிக் கரை கலாச்சாரம்

4,500 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த சீனர்களின் 'மஞ்சள் நதி கரையோர' கலாச்சாரத்தைப் பற்றி எடுத்துக் கூறும் அதே வேலை, சரித்திர ஆராச்சியாளர்கள் அந்த காலக் கட்டத்தில் அந்த பிரதேசங்களில் நடந்த பெரும் வெள்ளங்களைப் பற்றியும் எடுத்துறைகின்றனர்.

அன்றைய காலக் கட்டத்தில் இருந்து இன்றைய தேதி வரை சீன தேசத்தவர்கள் மஞ்சள் நதி பெருக்கெடுப்பால் மாறி, மாறி வந்த வெள்ளங்களினாலும், அவற்றை அடுத்து வந்த பஞ்சங்களினாலும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அந்த கரையோர பிரதேசங்களில் வாழ்ந்த சீனர்களின் வாழ்க்கை நிலை என்றுமே கடினமான ஒன்றாகத் தான் இருந்திருக்கின்றது.

பஞ்சங்கள் ஏற்படுத்திய கஷ்ட நிலையில் இருந்து விடுபடவும், விட்டு வந்த உறவினர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வேண்டி பல சீன இளைஞர்கள் தென் சீன பிரதேசங்களில் இருந்து வேலையும், நல்ல வாழ்வும் தேடி தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதற்கும் கூலி ஆட்களாகவும், வர்த்தகர்களாகவும் 19ஆம் நூற்றாண்டு கடைசியிலும், 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் பெரிய எண்ணிக்கையில் வர தொடங்கியுள்ளனர்.

இப்படி வந்த சீனர்கள் அன்றைய சீன நாட்டு சூழ்நிலை இயல்பாக அவர்களிடையே வளர்ந்திருந்த சில குணாதிசியங்களையும், சீன பின்னனியில் அவர்கள் கற்றுக் கொண்ட பல வாழ்க்கை அனுகு முறைகளையும் அவர்களோடு சேர்த்து தாங்கள் குடியேறிய நாடுகளுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர்கள் போக பிற மன்னர்களின் படையெடுப்பால் ஒய்வின்றி நடந்த போர்கள், வரி வசூலிப்பு என்கிற பேரில் சாதாரண மக்களின் ரத்தத்தை உறுஞ்சிய சிற்றரசர்கள், ஊழல் மிகுந்த அரசாங்க நிர்வாகஸ்தர்கள் என்று சராசரி சீனர்களின் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரும் பிரச்சனையானதாகவே இருந்திருக்கின்றது.

இப்படிப்பட்ட அன்றைய சீன நாட்டு சூழ்நிலையில் வாழ ஒருவருக்கு நல்ல உடல் வளமும், மன உரமும் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. அதையும் மிஞ்சி சிற்றசர்களையும், அதிகாரிகளையும் எப்படி சமாளிப்பது, அவர்களை கவர்ந்து, தங்களுக்கு தீங்கு நேராமல் எங்கனம் பாதுகாத்து கொள்வது, என்பன போன்ற வித்தைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தால்தான் ஒரு மனிதன் அவன் குடும்பத்துடன் அன்றைய சீன நாட்டில் ஒரளவுக்காவது நிம்மதியாக வாழலாம் என்ற நிலைமை இருந்திருக்கின்றது.

இப்படி அன்றைய அன்றாட வாழ்க்கைக்காக சீனர்கள் தங்கள் சொந்த நாட்டில் கற்றுக்கொண்ட வித்தைகள் காலப் போக்கில் அவர்கள் குடியேறிய பிற நாடுகளில் தொழில் புரிவதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. இதனால்தான் இன்றும் சீனர்கள் விருந்துபசரிப்பிலும், கேளிக்கைகளை முக்கியஸ்தர்களுக்கு அறிமுக படுத்துவதிலும், பரிசுகள் கொடுத்து பிறரை கவர்வதிலும் பெரும் வித்தகர்களாக உள்ளனர்.




சீனர்கள் கடின உழைப்பாளிகள்

சீனர்கள் மிக மிக கடினமான உழைப்பாளிகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர் பள்ளியில் படிக்கும் மாணாக்கராக இருந்தாலும் சரி, கடையில் வேலை செய்யும் சிப்பந்தியாக இருந்தாலும் சரி, காரியாலயத்தில் பணிபுரியும் நிர்வாகியாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை வழிநடத்தும் தொழில் அதிபராக இருந்தாலும் சரி, சீனர்களில் பெரும்பாலோர் மிக கடின உழைப்பாளிகளாக தான் இருப்பார்கள்.

கடின உழைப்பு என்பது சீனர்களிடமுள்ள மிக மிக அடிப்படையான ஒரு கூறு. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 90 கோடி பல இன மக்களிடமும் சென்று, இங்கு அவர்களோடு வாழுந்து வரும் சீனர்களை ஒரே ஒரு வார்த்தையில் சித்தரிக்கும்படி கூறி ஒரு ஆய்வு நடத்தினால், அதற்கு கிடைக்கும் பதில் "உழைப்பாளிகள்" என்பதாக தான் இருக்கும்.

தமிழர்கள் பேச்சுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதை விட அதிக அளவு முக்கியத்துவம் சீனர்கள் உழைப்புக்கு கொடுக்கிறார்கள். தமிழர்கள் அதிகம் பேசுவது குறித்து ஒரு வயோதிக சீனர் ஒரு முறை என்னிடம் கூறியது: "பேச்சு என்பது விழை குறைந்த ஒன்று. யார் வேண்டுமானாலும் பேசலாம், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதற்கு அறிவும் தேவையில்லை, முதலும் தேவையில்லை. ஆனால் உன்னை உலகம் எடைபோடுவது உன் பேச்சை வைத்தல்ல. நீ இன்றுவரை என்ன செய்திருக்கிறாய், என்ன சாதித்திருக்கிறாய் எனப்தை வைத்து" என்றார்.

உண்மைதானே! நாம் சாதனையாளர்களா, இல்லையா என்பதற்கு அடையாளம் மற்றவரோடு ஒப்பிடும்போது நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்பதை பொருத்து தானே இருக்கிறது. வீட்டுக்குள்ளே நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு உட்காந்து இருக்கலாம், ஆனால் என்று கல்வி காரணமாக, வேலை சாரணமாக வீட்டை விட்டு வெளியே வருகிறோமோ அப்பொழுதே, நாம் மற்றவரின் பார்வைக்கும், எடைபோடலுக்கும் ஆளாகி விடுகிறோம் அள்ளவா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது - "You judge yourself by what you think you can do. Others judge you by what you have already done". அதாவது, "நீ உன்னை எடை போட்டுக் கொள்ளும் போது உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து எடை போட்டுக் கொள்வாய். ஆனால் உலகம் உன்னை எடைபோடும் போது, நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய் என்பதை வைத்தே எடை போடும்" என்பதுதான் அதன் தமிழாக்கம்.



வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார நிலைப் பாடு

சீனாவை விட்டு இதர நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறிய சீன வம்சாவளியினரின் ஒட்டு மொத்த பெயர் 'வெளிநாட்டுச் சீனர்கள்' (OVERSEAS CHINESE) என்பது.

இவர்கள் ஒரு அதி அட்டகாசமான, திறமைமிக்க வகுப்பினர். உலகம் முழுவதும் என்று பார்த்தால், சுமார் நான்கு கோடிப் பேர் இருப்பர். இந்த கூட்டத்தின் ஒட்டு மொத்த தனியார் பொருளாதார வளம் US$ 1,500 பில்லியன் (150,000 கோடி US$) என்று ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாரபூர்வ அமெரிகக ஆய்வு காட்டியது. ஆதாவது ஒவ்வொரு வெளிநாட்டு சீனருக்கு RM. 37,500 சராசரி வளம் உள்ளது. நம்ப முடியவில்லையா ? ஆனாலும் நம்பத்தான் வேண்டும் .

மாதிரிக்கு, கீழே தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் சீனர்களின் ஜனத்தொகை விழுக்காடும், அதை அடுத்து அந்தந்த நாடுகளில் சீனர்களின் பொருளாதார பங்கீட்டின் விழுக்காடும் கொடுத்திருக்கிறேன்:-

1. மலேசியா - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 24 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

2. இந்தோனீசியா - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 3 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

3. பிலிப்பீன்ஸ் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 2 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 40 %

4. வியட்நாம் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 2 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 40 %

5. தாய்லாந்து - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 12 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

6. சிங்கப்பூர் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 75 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 80 %




சீனர்களின் வியாபார இயல்புகள்


சீனர்கள் அந்தந்த நாள் வேலையை அந்தந்த நாளே முடிக்கும் இயல்பு உடையவர்கள். குறிப்பாக கடை வைத்திப்பவர்கள் மறுநாள் வந்து கடையை திறந்து வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது, முதல் நாள் வேலையில் தங்கி போன மீதி வேலை எதுவுமே இருக்க கூடாது என்கிற நடைமுறை பழக்கத்தை பின்பற்றுபவர்கள்.

உதாரணத்திற்க்கு இங்குள்ள சீன உணவகங்கள் இரவு 10.30 மணிக்கு ஆர்டர் எடுப்பதை நிறுத்தி கொண்டு, பாத்திரங்களை கழுவுவதும், சமையற்கட்டை சுத்தம் செய்வதுமாக இருப்பார்கள். பிறகு எல்லா வாடிக்கையாளர்களும் உணவகத்திலிருந்து கிழம்பிய பிறகு மேசை நாற்காலிகளை எல்லாம் ஓரமாக தள்ளி வைத்து விட்டு, உணவத்தை கூட்டி பெருக்கு, கழுவி சுத்தம் செய்துவிட்டு, மறுநாள் வந்தவுடன் வியாபாரத்தை ஆரம்பிக்க ஏதுவாக எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்து விட்டு அவரவர் வீடு திரும்புவதற்கு்வதற்கு 12.00, 12.30 மணியாகும்.

பிறகு மறுநாள் பார்த்தால் சுத்தமான உடை உடுத்தி, சவரம் செய்து, நன்றாக தலைவாறி, பார்ப்பதற்கு பலிச்சென்று வியாபார ஸ்தலத்தில் அன்றைய வியாபாரத்திற்கு தயாராக புன்முறுவலுடன் நிற்பர். இது பெரிய, சிறிய வியாபாரம் என்கிற வித்தியாசம் எல்லாம் இல்லாமல், அத்தனை சீன வியாபாரிகளாலும் கடை பிடிக்க படும் ஒரு சாதாரண தடைமுறை அம்சம்.

ஆனால் இவர்களின் இந்த கூறுகளை எல்லாம் நூறு வருடங்களுக்கு மேலாக தினமும் பார்த்து வளர்ந்த இந்த நாட்டிலுள்ள பிற இன வியாபாரிகள் இவற்றை இன்றைக்கும் கடை பிடிப்பது கிடையாது.

இதில் இந்தியர்கள் நடத்தும் உணவு விடுதிகளின் இயல்புதான் மிகவும் மோசமானதாக இருக்கும். இங்குள்ள பெரும்பாலான இந்திய உணவு விடுதிகளில் வேலை செய்வோர் இந்தியாவில் இருந்து வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு நம் மலேசிய இந்திய உணவு கடை முதலாளிகள் முறையான சம்பளம் கொடுக்காதது மட்டுமில்லை, அவர்கள் ஓய்வு எடுக்க போதுமான நேரமும் வழங்குவதில்லை.

நடைமுறையில் இதன் தாக்கம் என்னவென்றால், இந்திய உணவுக் கடை ஊழியர்கள் எப்பவும் வேர்வை நாற்றத்துடன், சவரம் செய்யப்படாத முகங்களுடன், முகத்தில் சிறிதுகூட கலை இல்லாது ஏதோ கடைமைக்கு பவனி வருபவர்கள் போல் காட்சி அளிப்பதுதான்.

(இங்கு சீனர்களைப் பற்றி பெருமையாக எழுதுவதும் , அதே நேரத்தில் தமிழர்களின் முட்டாள்தனத்தை அப்பட்டமாக விமர்சிப்பதும் பலருக்கு பிடிக்க வில்லை என்று எனக்கு தோன்றுவதால், நான் சொல்ல விரும்பும் பலவற்றை சுருக்கி கொண்டு வருகிறேன். அந்த வகையில், இந்த பகுதிக்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கொடுத்து விட்டு அடுத்த பகுதிக்கு செல்கிறேன்).




சீனர்கள் வியாபாரத்தில் கடுமையான போட்டியாளர்களும் கூட

சீனர்கள் வியாபாரத்தில் மிக கடினமான போட்டியாளர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது சீனாவில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள 'வெளிநாட்டு சீனர்களுக்கும்' பொருந்தும்.

போட்டி என்று வந்து விட்டால் அடுத்தவரை நிலைபெற சீனர்கள் விடவே மாட்டார்கள். அதற்கு இங்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கோடி காட்டிவிட்டு செல்கிறேன்.

இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெற்கு மாநிலங்களிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருடாவருடம் மலேசியாவினுல் எனக்கு தெரிய 40-50 வருடங்களாக இறக்குமதி ஆகிகொண்டு இருக்கின்றது. ஆனால் இதை இறக்குமதி செய்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஆம், சீன வியாபாரிகள்தான்.

இந்த வியாபார்த்தினுல் நுழைய எத்தனையோ மலேசிய இந்திய வணிகர்கள் முயன்றிருக்கின்றனர். அப்படி நுழைய முற்பட்ட எந்த இந்திய வியாபாரியையும் சீனர்கள் நிலை பெற விட்டதில்லை.

இந்திய வியாபாரி ஒருவர் வெங்காயத்தை இந்தியாவிலிருந்து தருவிக்க விளைகிறார் என்று தெரிந்த உடனேயே, சீன வியாபாரிகள் தங்களின் விலையை இங்கு குறைத்து விடுவார்கள்.

இறக்குமதி செய்ய முற்பட்ட இந்திய வியாபாரியும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், கடைசியாக வேறு வழி தெரியாமல், சீன வியாபாரிகளிடமே தாங்கள் கொண்டு வந்த சரக்கை கை மாற்றி விட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விடுவர்.

இது குறித்து மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. தங்களின் வெங்காய வியாபாரத்தை முறையாக, பல காலம் தொடந்து செய்ய வெண்டும் என்று நினைத்த ஒரு மலேசிய சீன வியாபார குடும்பம், தம் மகன்களில் ஒருவரை நிரந்தரமாக தென் இந்தியாவில் குடிபுக வைத்து, அவருக்கு ஒரு தென் இந்திய பெண்ணையும் கல்யாணம் செய்து வைத்துள்ளார்கள். அவர் குடும்பமும், குட்டியுமாக பல காலம் இந்தியாவில் வசித்தும் வருகிறார்.

(இத்தோடு சீனரக்ளை ஒப்பிட்டு எழுதுவதை நான் நிறுத்தி கொள்கிறேன். அடுத்து வரும் இரண்டு பாகங்களும் "என் பார்வையில் மலேசிய தமிழர்களின் பிர்ச்சனைக்கான தீர்வுகள்" என்பதை சாராம்சமாக கொண்டவையாக இருக்கும். அதற்கு பிறகு இந்த ஊடகத்தில் எதையும் எழுத நான் நினைக்க வில்லை. அத்தோடு வேலை நிமித்தமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு நான் வெளி நாடு போக வேண்டி இருப்பதால், என் அடுத்த பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி வாக்கில் தான் இருக்கும்).





Saturday, January 17, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சீனர்களும் தன்மான உணர்வும்) - பாகம் 4

"""
வாசகர்களுக்கு,

இந்த ஊடகத்தை நான் ஆரம்பித்த போது "நம் எழுத்தை படிப்பதற்கு இங்கு ஆள் இருக்கிறதா, இல்லையா ?" எனும் சந்தேகத் தோடே எழுத ஆரம்பித்தேன். ஆனால் இப்போது இந்த ஊடகத்தின் 'COUNTER' காட்டும் எண்ணிக்கையை பார்க்கும்போது, என் எழுத்திற்கும் இணையத்தில் சிறிது வரவேற்ப்பு இருக்கிறார் போல தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் பின்னூட்டம் இல்லாதது சிறிது குழப்பமாகவும் இருக்கிறது.

இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரை இன்னும் இரண்டு, அல்லது மூன்று பாகங்களோடு முடித்து விடுவேன். ஆனால் அதற்கு பிறகும் இணையத்தில் எழுதுவதா, வேண்டாமா என்பது தான் என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி.

இது குறித்து, வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான் விண்ணப்பம். இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரை படிக்க விரும்பி தாங்கள் இந்த ஊடகத்திற்கு இனி வந்து போகும் போதெல்லாம், பின்னூட்ட (மறுமொழி) பெட்டியில் 'வந்து சென்றேன்' என்றோ, 'படித்தேன்' என்றோ ஒரு வார்த்தை, இரு வார்த்தைகளில் பின்னூட்டம் விட்டுச் செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இங்கு எத்தனை பேர் ஒவ்வொரு பதிவையும் படிக்கிறீர்கள் என்பது தெரிந்தால் என் எழுத்தை தொடர்வதா, வேண்டாமா என்பதை நான் சிறிது இலகுவாக முடிவு செய்து கொள்வேன்.

நன்றி,
சாமான்யன்
"""




அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், ஜெர்மானியர்கள், வெளிநாட்டு சீனர்கள் போன்று உலகில் அதிக வளர்ச்சியுற்றிருக்கும் இனங்கள் அனைவரிடமும் ஒரு பொதுவான அம்சத்தை நாம் பார்க்க முடியும் - அவர்கள் அனைவரும் தம்மை உயர்வாகவே நினைத்து கொள்பவர்கள்.

மற்ற இனத்தாரோடு பலகும்போது இவர்களிடம் இருந்து எப்பவும் ஒரு 'சுப்பிரியாரிட்டி கொம்ப்லெக்ஸ்' எனும் தங்களைப் பற்றிய 'உயர்வு மனப்பான்மை' வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். (இதற்கு நேர்மாறாக நம்மவரிடம் எப்பவும் ஒரு 'தாழ்வு மனப்பான்மை' இருந்து கொண்டே இருக்கும். இதை இப்படி அப்பட்டமாக நான் கூறக் கேட்கும் போது கசப்பாக இருந்தாலும், அதுதான் உண்மை என்பது நம் அனைவருக்குமே தெரியும்).

இப்படி தங்களை பற்றி உயர்வாகவே நினைத்து கொள்ளும் இனங்களிடம் மற்றுமொரு பொதுவான அம்சம் என்னவென்றால் - இவர்கள் அனைவரிடமும் 'தன்மானம்' என்பது சற்று அதிகமாகத் தான் இருக்கும்.

அந்த வகையில் நம்மோடு அண்டை வீட்டுகாரர்களாக 150 வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கும் சீனர்களின் தன்மான உணர்வு எத்தனையோ வழிகளில் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அதில் என் கண்ணுக்கு பட்ட சில உதாரணங்களை இங்கு எடுத்து கூறுகிறேன். என் கூற்று உண்மையா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



நண்பர்களோடு குழுமும்போது சாப்பாட்டிதற்கு பணம் கட்டுவது

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல இன நண்பர்கள் ஒன்றாக உணவு உண்பதற்காகவோ, மது அருந்துவதற்காகவோ குழுமும் போதெல்லாம், சாப்பிட்டதற்கான மொத்த 'பில்லையும்' நான் கட்டுகிறேன், நான் கட்டுகிறேன் என்று அடிக்கடி போட்டா போட்டி வருவது சீனர்களுக்கு இடையேதான்.

சீனர்களும் உள்ளிட்ட பலதர பட்ட இனங்கள் குழுமும் சூழ்நிலையில், சீனர்கள் அல்லாதார் இப்படி முண்டி அடித்து கொண்டு பணம் கட்ட கிழம்புவதை நான் மிகவும் அறிதாகத்தான் பார்ததிருக்கிறேன். இது நான் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இன்று நேற்று பார்த்த விஷயமல்ல, எனக்கு விவரம் தெரிந்த நாளாய் இது நான் நன்கு பார்த்து பழக்கபட்ட ஒரு அன்றாட சமூக நிகழ்வு.
"நண்பர்களிடையே சாப்பிட்டதற்கான பணத்தை ஒருவர் கட்டுவதற்கும், தன்மான உணர்வுக்கும் என்ன தொடர்பு?", என்று சிலர் நினைக்கலாம். இந்த சிறிய விஷயத்திலும் ஒருவருக்கு தன்மான குணம் சிறிது மிகுதியாக இருந்தால் தான் அவர் முண்டி அடித்து கொண்டு தான் பணம் கட்டுவதாக கிழம்புவார் என்று நான் நினைக்கிறேன்.



கல்விக் கடனுதவி

மலேசியாவில் அரசாங்கம் மேற்கொள்ளும் சமூக சீரமைப்புகளும், திட்டங்களும் போக பெருவாரியான சமூக சேவைகள் இங்கு அரசாங்க சார்பற்ற இனவாரியான சமூக ஸ்தாபனங்களாலேயே மேற்கொள்ள பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாணாக்கர்களின் படிப்பு மேம்பாட்டிற்கென இங்கு பல ஸ்தாபனங்கள் இயங்குகின்றன. அவறறில் நம் இன மாணாக்கர்களுக்கு என்று சில ஸ்தாபனங்கள் நிதி திரட்டி கல்வி கடனுதவி செய்து வருகின்றன.

எனக்கு தெரிய \'ராம சுப்பையா எஜுக்கேஷன் ஃபண்ட்'\ , \'EWRF எஜுக்கேஷன் ஃபண்ட்'\, \'MIED எஜுக்கேஷன் ஃபண்ட்\' என்று சில கடனுதவி நிதிகள் இருந்தன. அவற்றில் 'ராம சுப்பையா ஃபண்ட்' இப்போது இல்லை. 'EWRF' இன்னமும் தொடர்ந்து கடனுதவி கொடுத்து வருகிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. 'MIED' ஆலும் அரசியல் கூட்டனியில் ஒரு உறுப்பினக் கட்சியின் கல்வி நிதி சாதனம் - அதனால் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தகைய ஃபண்டுகளின் குறிக்கோள் என்னவென்றால், வசதி குறைந்த இந்திய குழந்தைகள் பள்ளிகளில் படிப்பதற்கு உபகாரச் சம்பளமும், பிறகு பல்கலைகழகங்களில் படித்து பட்டம் பெற ஏதுவாக அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவியும் செய்து கொடுப்பது தான். இந்த ஃபண்டுகள் வழியாக எத்தனையோ ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள் பல்கலைகழக பட்டம் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல நிலைகளில் உள்ளனர்.

ஆனால் இவர்களில் பெரும்பாலோர் படிப்பிற்கென்று பெற்ற கடனை திருப்பி கொடுப்பது கிடையாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, கோர்ட்டுக்கு கொண்டு செல்வேன் என்று பயமுறுத்தி, அடித்து பிடித்து வாங்கினால் ஒழிய இவர்களில் பெரும்பாலோர் பெற்ற கடனை திரும்ப கொடுப்பதை பற்றி நினைத்து பார்க்ககூட பார்ப்பது கிடையாது.

அதே போல தான் மலாய்காரர்களும் - படிப்பிற்கென்று வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது. (கடனை திரும்ப பெற வேண்டி யாரும் அவர்களை முனைப்போடு விரட்டுவதும் இல்லை. அவர்களின் கதையே வேறு. அந்த கதையெல்லாம் இங்கு பேச இது தருணம் அல்ல. நேரம் வரும்போது, தேவை ஏற்பட்டால் பேசுவோம்).

ஆனால் சீனர்களின் நிலைமையே வேறு. இந்திய ஸ்தாபனங்கள் கொடுப்பதை காட்டிலும், சீன ஸ்தாபனங்கள் படிப்பிற்காக ஆணடுதோரும் வழங்கும் கடன் உதவிகள் பெரிதாகத் தான் இருக்கும். நம்மை காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில்தான் அவர்கள் தம் இன பிள்ளைகளுக்கு கடன் உதவி வழங்குவார்கள். ஆனால் அப்படி கடன் வாங்கி பட்டம் படித்து முடித்த அத்தனை சீன குழந்தைகளும், வேலை செய்ய ஆரம்பித்த உடனேயே கடனை திருப்பி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சீன ஸதாபனங்கள் வெளியிடும் கணக்குபடி இப்படி குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் சீன மாணாக்கர்களின் விகிதாச்சாரம் 95 விழுக்காடு.

நம் இந்திய ஸ்தாபனங்களில் வக்கில் நோட்டீஸ் அனுப்பி, அடித்து, பிடித்து திரும்ப பெரும் கடன்களின் விகிதாச்சாரம் 15 லிருந்து 20 விழுக்காடே. மீதிப் பேர் என்ன செய்தாலும் கல்வி கடனை திருப்பி கொடுப்பது கிடையாது.

இதனால் நடைமுறையில் என்ன ஆகிவிடுகின்றது என்றால், நம் இனத்தில் குருவி சேர்ப்பதுபோல் சேர்க்கப் பட்டு ஏற்படுத்தபடும் கல்விக் கடனுதவி பண்டுகள், கால ஓட்டத்தில் பண பற்றாக்குறையின் காரணமாக முற்றாக நிறுத்த பட வேண்டிய நிர்பந்தத்திற்கோ, சுருக்கபட வேண்டிய சூழ்நிலைக்கோ தள்ளப் பட்டு விடுகின்றன.

ஆனால் சீனர்கள் ஏற்படுத்தும் சமூக சீர் அமைப்பு / கடன் உதவி பண்டுகள் வருடா வருடம் திரும்ப வசூலிக்கபடும் பணத்தோடு, கடனுதவி பெற்ற பழைய மாணாக்கர்கள் அவ்வப்போது வளங்கும் நன்கொடைகளையும் சேர்த்து செழித்து ஓங்கி வளர்கின்றன.

உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது, வெளியில் இருந்து பார்ப்போருக்கு ஏதோ சீனர்கள் பணக்காரர்களாகவும், அதனால் அவர்கள் ஏற்படுத்தும் நிதிகள் யாவும் வெற்றி அடைவதாகவும், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிற படியால் தம் சொந்த சமூக நலனுக்காக அவர்களால் போதிய அளவு நிதி திரட்ட முடியாமல் போய்விடுகிறதென்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கும்.

ஓரளவுக்கு இந்த கூற்றில் உண்மை இருந்தாலும், நாம் ஏற்படுத்தும் கல்வி கடனுதவி நிதிகள் சுருக்கப் படவோ, நிறுத்தப் படவோ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் படுவதற்கான காரணம் வெளியில் இல்லை. அது நம்மிடைமே தான் இருக்கிறது. "நம் படிப்பிற்கென ஒரு இந்திய ஸ்தாபனம் நமக்கு செய்த உதவிக்கு நாம் ஒன்றும் பெரிதாக கைமாறு செய்யா விட்டாலும், அவர்கள் கொடுத்த பணத்தை நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்" எனும் 'தன்மான உருத்தல்' நம் இனத்தவரிடம் இல்லாம் போனதுதான் அதற்கான முக்கால்வாசி காரணம்.



'டிப்ஸ்' வாங்குதல்

சீனாவின் உட்புறங்களில் குறிப்பாக பெய்ஜிங், சாங்ஹாய் போன்ற மாநகரங்கள் அல்லாது உட்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், மது அருந்தும் பார்களிலும், கேளிக்கை மையங்களிலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ' டிப்ஸ்' வாங்க இன்றைக்கும் மறுத்து விடுவார்கள்.

இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் - " பெரிய மாநகரங்களில் வெளிநாட்டு தாக்கம் வந்து விட்டதால், அங்கு உள்ள சீனர்களின் இயல்பு சமீபமாக மேல்நாட்டு பாணியில் மாறியுள்ளது. ஆனால் சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. எங்களின் பாரம்பரிய முறைப்படி செய்யும் வேலைக்கு உள்ள ஊதியத்தில் யாவரும் குறியாக இருப்போம். அது அல்லாது, யாராவது 'சன்மானம்' எனறு கொடுப்பதை வாங்குவது எங்கள் கலாச்சாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப் பட்டு வந்திருக்கிறது.

ஆதலால் 'டிப்ஸ்' வாங்கும் பழக்கம் இங்கு பொதுவாக பழக்கத்தில் இல்லை. நீங்களும் யாருக்கும் 'டிப்ஸ்' கொடுக்காதீர்கள். அது அவமரியாதையான செயலாக கருதப் படும்" என்றார்கள்.

இதுகுறித்து நான் என் கண்ணால் நேரில் கண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறுகிறேன், கேளுங்கள். நான் ஒரு முறை சீனாவில் உள்ள 'ஹுனான்' மாநிலத்தில் தலைநகரமான 'சங்ஸா' என்கிற ஊருக்கு போயிருந்தேன். இது சீனாவின் 12 வது பெரிய நகரம். அங்கு ஒரு நாள் இரவு நானும் அங்கு வசித்து வரும் என் நண்பரும் அவரின் மனைவியும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டு இருந்தோம்.

அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து உள்ள மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதிகள் இருவர் உணவருந்தி கொண்டிருந்தனர். தங்களின் சாப்பாட்டிற்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையிலிருந்து 30 யுவானை ( 15 ரிங்கிட்) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பறிமாறின பணிப் பெண்ணிடம் 'டிப்ஸாக' நீட்டினார். அதை எப்போதும்போல அந்த சீன பணிப் பெண் வாங்க மறுத்து விட்டார்.

அந்த அமெரிக்க தம்பதிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அப் பெண் அந்த பணத்தை பிடிவாதமாக வாங்க மறுக்கவே, அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் , தோழ்களையும் 'சரணடைந்தேன' என்கிற பாணியில் உயர்த்தி காட்டிவிட்டு, அந்த பணத்தை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு மனைவியோடு உணவகத்தின் வாசல் வரை சென்றார். பிறகு மனைவியிடம் பேசி கொண்டே திரும்பி பார்க்கும் பொழுது, அப்பணி பெண் கையில் சில தட்டுக்களோடு உணவகத்தின் பின்புறமிருந்த கதவை தள்ளிக் கொண்டு சமையற்கட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

உடனே அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளைபோல் தன் சட்டை பையில் வைத்த அந்த 30 யுவானை எடுத்து கொண்டு கிடு கிடு என்று ஒடி வந்து அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது வைத்து விட்டு, கிடு கிடு என்று ஒடி மனைவியோடு வெளியில், வீதியில் சென்ற கூட்டத்தோடு கலந்து விட்டார்.

சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்த பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தை பார்த்ததும், பணத்தை சட்டென்று கையில் எடுத்து கொண்டு உணவகத்தின வெளியில் ஒடி வீதிக்கு வந்தார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும் என் நண்பரும் அவர் மனைவியும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்து விட்டோம்.

இது மற்ற இருவருக்கும் அன்றாட நிகழ்வு என்றாலும், எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால் "நீங்கள் இங்கேயே இருங்கள், நான் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறி அப் பெண்ணை நொடர்ந்து நானும் சென்றேன்.

அந்த பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதிகளை தேடியபடி ஒரு நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு் உணவகத்திலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்கு சாலையில் அவர்கள் ஒரு டாக்சியில் ஏறிகொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின் தொடர்ந்து சென்ற நான் டாக்சி நின்றிருந்த இடத்திற்கு ஒரு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக் கொண்டு, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி நின்றேன்.

டாக்ஸியை அணுகிய அப்பெண் ஓட்டுனரின் கதவை தட்டி டாக்சியை நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகள் முன் அந்த 30 யுவானை நீட்டியபடி, தான் வேண்டி கேட்டு கொள்வதற்கு அடையாளமாக முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார்.

வேறு வழியில்லாமல் அந்த அமெரிக்கர் அந்த பெண்ணின் கையிலிருந்த பணத்தை திரும்ப பெற்று கொண்ட பின்னரே, அப்பணிப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

நான் பல நாடுகள் போய் வந்த அநுபவம் உள்ளவன். இந்தகைய தன்மான உணர்வை வெளிக்காட்டும் ஒரு சம்பவத்திற்கு ஒப்பான ஒரு சுற்று பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது. (இந்தியாவில் நான் பார்த்தெல்லாம் .... எதுக்குங்க .... வேண்டாம் .... இந்திய அஙபவங்களை இங்கு பேச வேண்டாம் .... விட்டிடுவோம்..!!).

நான் மேற்கூறிய இந்த நிகழ்வின் அர்த்தம் என்ன என்று நினைக்கிறீர்கள் ? "நான் செய்யும் வேலைக்கான உண்மையான கூலியை கொடு. அதைவிடுத்து எனக்கு சன்மானமானமென்று நீ எதற்கு கொடுக்கிறாய் ? உன சன்மானமெல்லாம் எனக்கு தேவையில்லை" என்று கூறாமல் கூறும் ஒரு தன்மானமும், ரோஷமும் மிகுந்த இன வளர்ப்பின் வெளிப்பாடுதான் என் கண்ணுக்கும், புத்திக்கும் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

இப்படி ரோஷமும், தெனாவெட்டும் உள்ள இனத்தாரோடு தான் நாம் 150 வருடங்களாக் அண்டை வீட்டுகாரர்களாக பழகியும், வாழ்ந்தும் இருக்கிறோம். ஆனால் அவர்களிடமிருந்து நாம் எதாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா என்றால், இல்லை.

எவரிடமுமிருந்தும் எதையும் நாம் உறுப்படியாக கற்றுக் கொண்டதில்லை. அப்படி எதையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று நாம் நினைத்ததும் இல்லை. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, "எங்கள் பாட்டன் பூட்டன் காலத்திலெல்லாம், 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்" என்று வெத்து வேதாந்தம் பேசி கொண்டு இருந்து விட்டு, நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான எதையுமே நாம் கற்று கொள்ள வில்லை. அதன் விளைவு தான் நம்முடைய இன்றைய நிலை.

ஐயா, உண்மை பல நேரங்களில் கசக்கும். மேலும் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொளவதனால் அது காணாமலும் பொய்விடாது. உண்மை என்ன வென்று தெரிந்து, தெளிந்து, அதன் பிறகு நடமுறை நிலைப் பாட்டை ஒட்டி தான் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். நம் இனப் பிறச்சனையும் அப்படித் தான் என்பது என் கருத்து.

Sunday, January 11, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சீனர்களும் இன ஒற்றுமையும்) - பாகம் 3

காலனித்துவ ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் கூலி வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்று தென்னிந்திய தமிழர்களை தேர்வு செய்து இந்த நாட்டிற்கு கொண்டு வந்தற்கான காரணங்களை ஆராயும்போது, "தமிழர்களிடையே இருந்த இன வேறுபாடுகளும், அதன் காரணமாக அவர்களிடையே இயல்பாக இருந்த ஒற்றுமை இன்மையும், பிரித்தாலும் இயல்புடைய ஆங்கிலேயருக்கு மிகவும் சாதகமாக அமைந்தது" என்று மலாயாவில் ஆரம்ப கால தமிழர்களின் நிலையை ஆராய்ச்சி செய்திருக்கும் ஒரு சமூக ஆய்வுத்துறை பேராசிரியர் கூறுகிறார்.

சமீப காலமாக மலேசிய தமிழர்களிடையே சிறிதளவு இன ஒற்றுமை ஏற்பட்டிருப்பதை நாம் உணர்ந்தாலும், சரித்திர கோணத்தில் இருந்து பார்க்கும்போது அடிப்படையில் நாம் ஒரு ஒற்றுமையற்ற இனமாகத்தான் என்றும் இருந்து வந்திருக்கிறோம்.

அதே சமயம், நம் இனத்திற்கு நேர் மாறாக இங்கு வந்து சேர்ந்த சீனர்களிடம் ஒருமைப்பாடு என்பது மிக, மிக அதிகமாகவே இருந்து வந்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் - அது விளையாட்டானாலும் சரி, தருமகாரியங்கள் என்றாலும் சரி, தொழில் சார்ந்த விஷயங்கள் ஆனாலும் சரி, பேரிடர்களின்போது வெளிப்படும் தனி மனித சேவைக் குணமானாலும் சரி, தம் சொந்த இனத்தை குறித்த எந்த நிகழ்வென்றாலும் உடனே அரவணைக்க, தோள் கொடுக்க அனைத்து சீனர்களும் ஒன்று திரண்டு விடுகின்றனர்.

பிற சில இனங்களுக்கும் இந்த இயல்பு வெகுவாக பொருந்தும் என்றாலும் சீனர்களிடம் இன ஒற்றுமை என்பது சந்தேகமில்லாமல் சற்று அதிகமாகவே தான் உள்ளது. இதற்கு பல காரணங்களை கூறலாம். ஆனால் அவை அனைத்திற்கும் மூல காரணம் என்ன வென்றால் பிற இனங்களோடு ஒப்பிடுகையில் சீன கலாச்சார, சரித்திர பின்னணியில் மக்களை பிளவு படுத்தகூடிய அடிப்படை அம்சங்கள் மிக மிக குறைவு என்பதுதான.

இனத்தால் சீனர்களில் 95 விழுக்காட்டினர் 'ஹான்' என்று அழைக்க படும் ஒரே இன வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். மொழி என்பதும் அதே போலத்தான். பேச்சளவில் பிரதேசத்திற்கு பிரதேசம் பாசைகள் வித்தியாச பட்டாலும் சீன மக்கள் அனைவரும் எழுதுவது, படிப்பது எல்லாம் 'மாண்டரின்' என்கிற ஒரே மொழியில்தான்.

மற்ற இனங்களைப் போல் மதத்தின் தாக்கமும் சீனர்களிடையே அதிகம் கிடையாது. சிலர் கிருஸ்த்துவம், பொளத்தம், தொளயிசம் என வெவ்வேறு மதங்களை தழுவியிருந்தாலும், பெரும்பாலான சீனர்கள் அன்றாட அடிப்படை வாழ்க்கை நிலையில் எந்த மதத்தையும் தழுவாதவர்களாகத் தான் இருப்பார்கள். அதனால் மதத்தை மையமாக கொண்டு சீனர்களிடம் எந்த பிளவும் ஏற்படுவதில்லை.

ஆக உண்மை என்னவென்றால், வாழ்க்கை தர வித்தியாசங்களை தவிர சீனர்களிடம் வேறு எந்த ஏற்ற தாழ்வுகளையும் ஒருவர் நடைமுறையில் பார்க்க முடியாது என்பதுதான்.

இந்தியர்களைப் போல் அல்லாமல், சீனாவில் தென் துருவத்தின் கடைசியில் உள்ள ஒரு ஆண், நாட்டின் வட துருவத்திலோ, மேற்கு துருவத்திலோ, கிழக்கு துருவத்திலோ உள்ள ஒரு பெண்ணை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம எனும் நிலைதான் என்றும் இருந்து வந்துள்ளது. அதே நிலைப்பாடு தான் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும்.


ஒரு திருமணத்தால் மொழிப் பிரச்சனை, இனப் பிரச்சனை, மத பிரச்சனை என்று எந்த பிரச்சனையும் சீனர்கள் இடையில் நடந்ததாக சரித்திரம் இல்லை.


இதனால்தானோ என்னவோ சீன தாய்தகப்பனமார் தம் வயதுக்கு வந்த பிள்ளைகளின் காதல்களுக்கு என்றுமே தடையாக நிற்பதில்லை. சீன இனத்தில் 95 விழுக்காட்டு திருமணங்கள் காதல் திருமணங்களாகவே தான் இருக்கும்.


சீனப் பிள்ளைகள் 14, 15 வயது முதலேயே ஆண் பெண் இரு சாராரும் ஊரே அறிய காதல் வய பட்டு விடுவதை நாம் யாவரும் கண் கூடாக கண்டிருக்கோம். காரணம் காதல் என்பது சீன கலாச்சாரத்தில் இலகுவாக ஏற்று கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கை இயல்புகளில் ஒன்றாகத் தான் காலங்காலமாக கருத பட்டு வந்திருக்கிறது.


(காதல் குறித்த அனுகுமுறையில், சீனர்களுக்கு நேர் மாறாக தமிழ் இனம் இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆம்! மறுபடியும் சாதியம் எனும் சாபம் தான் முன் நிற்கின்றது - "யாரோ, என்ன குலமோ, என்ன ஜாதியோ ?" என்கிற பயம்தான் தமிழ் பெற்றோர்கள் காதல் என்பதற்கு பயந்து நடுங்குவதற்கான அடிப்படை காரணம்).


மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு. இன்றும் சீனருள் ஒரு கடையின் முதலாளியும் தொழிலாளியும் ஒரே மேஜயில், ஒன்றாக உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில் வைக்க பட்டிருக்கும் சாப்பாட்டை பகிர்ந்து உண்பதை மலேசியா, சிங்கப்பூர், ஹாங் காங், வியட்னாம், சீனா போன்ற சீனர்கள் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் பரவலாக நாம் பார்க்கலாம்.

சீனர்களிடம் உள்ள இன ஒற்றுமையையும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் எத்தனையோ உதாரணங்கள் மூலம் என்னால் எடுத்து காட்ட முடியும். ஆனால் அந்த அளவு யோசித்து, சிரமம் எடுத்து எழுதி என்ன ஆக போகிறது ? இஙகு சீரியஸாசான எழுத்துக்களை படிப்பதற்கும் ஆளும் இல்லை, துணிந்து பின்னூட்டம் இடுவதற்கும் யார் மனதிலும் தைரியமும் இல்லை. எதோ உதாரணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கொடுத்து இந்த பாகத்தை முடித்து கொள்கிறேன்.

தென் கிழக்கு ஆசியா முழுவதிலும் சீன காப்பி கடைகள் உள்ளன. இந்த காப்பி கடைகள் பல வற்றில், கடை ஒரு சீனருக்கு சொந்தமானதாக இருக்கும், அல்லது ஒருவர் அக் கடையை மொத்த வாடகைக்கு எடுத்திருப்பார். மொத்த வாடகைக்காரிடம் சில்லரை வாடகையை பேசி கொண்டு, கடையினுல், சுவர்களுக்கு ஓரமாக 3 அடிக்கு x 6 அடியில் அலுமீனியத்தால் செய்ய பட்ட கவுண்டர்களை போட்டு கொண்டு ஒரு 10, 15 சீன அங்காடிகாரர்கள் வெவ்வேறு விதமான சீன பதார்த்தங்களை விற்று கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனி அடுப்பு, தனி கல்லா, பாத்திரங்கள் வைப்பதற்கு இடம் என்று எல்லாம் அவரவரின் அலுமீனிய கவுண்டருக்குள்ளேயே இருக்கும்.

கடைக்கு நடுவிலும், வெளியிலும் வாடிக்கையாளர்கள் உட்கார்வதற்கு ஏதுவாக மேசை, நாற்காலிகள் போடப் பட்டிருக்கும். மதியத்திலும், இரவு நேரங்களிலும் பார்த்தால் திருவிளா கூட்டம் போல் வாடிக்கையாளர்களின் கூட்டம் இந்த இடங்களில் அலை மோதும். ஒவ்வொரு நாலும் நூற்று கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த கடைகளுக்கு் வந்து உணவு அருந்தி செல்வர். கடையிலுள்ள அத்தனை அங்காடிகாரர்களுக்கும் வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கும்.

இதில் ஆச்சரிய பட வைக்கும் அம்சம் என்ன வென்றால், இத்தனை அமளி துமளியிலும் எந்த இரண்டு அங்காடிகாரர்கள் இடையிலும் எந்த பிரச்சனையும் நிகழாது. அந்த சிறு இடத்திற்குள் அத்தனை அங்காடிகாரர்களும் ஒற்றுமையாக வருடக் கணக்கில் தொழில் செய்து கொண்டிருப்பார்கள்.

இதை மேலோட்டமாக பார்த்தால் இதில் பெரிய ஆச்சரியம் இல்லையே என்று சொல்லத் தோன்றும். ஆனால் நன்றாக யோசித்து பாருங்கள் வாடிக்கையாளர் ஒருவர், அங்காடிகாரர்கள் 15 பேர். வாடிக்கையாளர் நாற்காலியில் உட்கார்ந்த பிறகே என்ன சாப்பிடலாம் என்று யோசித்து முடிவு எடுப்பார். அந்த சிறிது நேரத்தில் வாடிக்கையாளரின் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டும். ஆனால், அது அப்பட்டமாகவும் தெரிய கூடாது, மற்ற அங்காடிகாரகளுக்கும் இடங் கொடுக்க வேண்டும், குரலை சற்று உயர்த்தினாலும் அநாகரீகமாக போய்விடும், இதற்கு நடுவில் வாடிக்கையாளரின் ஆர்டரைப் பிடிக்க வேண்டும்.

அனுசரித்து போகும் இயல்பு இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான சூழலில் ஒருவர் குப்பை கொட்ட முடியும். அது சீனர்களிடம் மிக அதிகமாகவே உள்ளது.

நம் இனத்தவரால் இந்த மாதிரி சூழ்நிலையில் வியாபாரம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? 15 தமிழ் அங்காடிகாரர்கள் ஒரே இடத்தில் வியாபாரம் செய்வதை விட்டுவிடுங்கள், அதெல்லாம் பகல் கனவு. இரண்டு தமிழர்களால் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில சண்டை சச்சரவு இல்லாமல் வியாபாரம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா ? முடியும் என்று நினைத்தால் பின்னூட்டம் வழி 'முடியும்' என்று சொல்லுங்கள்.

Tuesday, January 6, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சீனர்களும் கல்வியும்) - பாகம் 2

"தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" - பாரதி பாடிய பாட்டு, கேட்பதற்கு இனிமையாக தான் இருக்கிறது. ஆனால் இதை கூறிக்கொள்ளும் போது உண்மையிலேயே நெஞ்சு புடைத்து, நாம் தலை நிமிர்கிறோமா ?

வேறு ஆளே இல்லாது, மற்றம் சில இனங்களோடு தமிழர்கள் மட்டுமே வாழும் உலகம் என்று ஒன்று இருந்தால், தமிழனென்று சொல்லும் போதெல்லாம் நெஞ்சு புடைக்கலாம், தலை நிமிரலாம். ஆனால், தமிழோடு சேர்த்து பூமியில் சுமார் 6,000 மொழிகள் பேச படுவதாக மனித வர்க்க சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த உலக அளவிலான இன கும்பலில் முதலில் தமிழ் இனம் என்பது எந்த நிலையில் உள்ளது. அதில் மலேசியா வாழ் தமிழர்களான நாம் இன வளர்ச்சி பட்டியலில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சிறிது ஆராய்ந்து பார்த்தால் தான் உலக அளவில், நம் இனத்தின் உண்மையான வளர்ச்சி நிலை என்ன என்பதே புரியும்.

இந்த மாதிரியெல்லாம் ஏன் கேள்விகள் கேட்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? காரணமாக தான். நமது வீட்டில், சொந்த நான்கு சுவர்களுக்குள் மனைவி, மக்களோடு தனித்திருக்கும் போது நாம் என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கலாம். ஆனால் வேலை காரணமாக, தொழில் காரணமாக, கல்வி கற்க வேண்டி எப்போது வீட்டை வீட்டு வெளியே வருகிறோமோ, அப்பொழுதே அர்த்தமற்ற பந்தாக்களுக்கும், அதாரமற்ற பீத்தல்களுக்கும், வெத்து வேதாந்தங்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடுகின்றது.

தமிழ் மொழி என்பது ஒரு தொன்மையான மொழி. பல்வேறு சிறப்புக்களை பெற்ற செம்மொழி என அங்கீகாரம் பெற்றது. சரி.... ஒத்துகொண்டாகி விட்டது. அதன் பிறகு? அதற்கு அப்புறம்? அதற்கும் மேலே? மற்ற இனங்களிடம் இல்லாதது, அப்படி உங்களிடம் என்னய்யா இருக்கிறது ?

என்னய்யா முழிக்கிறீர்கள்? 5,000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய மூத்த மொழியின் சொந்தகாரர்கள் எனும் ஒரு அடையாளத்தை ஒதுக்கி விட்டு பார்த்தால் உங்களிடம் வேறு ஒன்றும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லையே !

இந்தியாவில் உள்ள தமிழர்கள் மலேசிய தமிழர்களை காட்டிலும் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், தமிழ்ச் சமுதாயத்தை மட்டும் சார்ந்தல்லவே இந்த இன்றைய முன்னேற்றம். உலகில் எத்தனையோ பிற இனங்களும் அதி வேக முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களே !

எனக்கு தெரிய 6 கோடி தமிழர்களில் இரண்டு பேர் இதுவரை 'நோபல் பரிசு' வாங்கியிருக்கிறார்கள். ஆனால், வெறும் 1 கோடியே 40 லட்சம் உலக ஜனத்தொகையை கொண்ட 'யூதர்கள்' சமூகத்தில் கிட்டதட்ட 100 பேர் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்களே!

அதே போல் வெறும் 120,000 பேரை மொத்த ஜனத்தொகையாக கொண்ட 'பார்சி' இனம், இந்திய பொருளாதாரத்தில் வியக்கதக்க அளவு பங்கு வகிக்கிறார்கள் (இந்தியாவில் உள்ள டாட்டா நிறுவனம் ஒரு பார்சி நிறுவனம்தான்)। ஆனால் "கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும்" எனும் நமது பாரம்பரிய பழமொழியை தலைமேல் கடமையாய் கொண்ட நமது தமிழ் இனம், பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டில் கூட ஒன்றும் பெரிதாக சாதித்து விட வில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெரிய தொழில் நிறுவனங்கள் தமிழர் அல்லாதாருக்கு சொந்தமானதாகத் தான் இன்றும் இருக்கின்றன.

சரி, நாம் வேறு எதில்தான் மற்றவரை விட சிறப்பானவர்களாக இருக்கிறோம் ? ஆ... ஆ.... நமக்கு சாதகமாக ஒரு விஷயம் உள்ளத! காரியம் ஆக வேண்டுமானால் அடுத்தவர் காலில் விழுவதில் நம்மை மிஞ்ச வேறு யாருமே இல்லை.

மந்திரியாக நியமிக்க பட்ட அன்றே, தம் பதவியை தற்காத்து கொள்ளும் பொருட்டு பதவி கொடுத்த பெண் முதல்வர் காலில் உலகறிய வரிசையாக 'பொத்து, பொத்தென்று' விழுந்து பாத பூஜை செய்த மந்திரிகள் எல்லாம் நம் இனத்தில்தான் இருக்கிறார்கள்.

இதை உலகில் வேறு எந்த இனத்திடமாவது பார்த்திருக்கிறீர்களா? எதற்கெடுத்தாலும் காலில் விழுவதில் நாம் தான் வல்லவர்கள். நம்மைபோல் அடுத்தவர் காலில் விழ வேறு யாராலும் முடியாது.

அண்மையில் நான் குடியிருக்கும் இடத்தில், தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்தியர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சண்டை வலுத்து ஒருவர் கொடாரியையும், மற்றொருவர் செடி வெட்டும் கத்திரியையும் தூக்கி கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த, தோட்ட வேலையை குத்தகைக்கு எடுத்திருந்த சீன முதலாளி அந்த இடத்திலேயே அந்த இரண்டு இந்தியர்களையும் வேலையில் இருந்து நீக்குவதாக கூறினார். சிறிது நேர கெஞ்சலுக்கு பிறகு, அந்த இரண்டு இந்திய வேலையாட்களும் நெடுஞ்சாங்கடையாக தரையில் விழுந்து அந்த சீனரின் காலை பிடித்து கொண்டு புழம்ப ஆரம்பித்தனர். பார்த்து கொண்டிருந்த எனக்கு உடம்பெல்லாம் அனலாகி, 'த்தூ' என்று காறி உமில வேண்டும் போல் தோன்றியது. அந்த சீனரை கண்ணுக்கு நேராக பார்க்க வெட்கப் பட்ட நிலையில் முகத்தை திருப்பி கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

இந்த காலில் விழும் கலாச்சாரம் நமக்கு எங்கிருந்து வந்தது ?? சாதியம்। ஆம் சாதியம் எனும் சாபம் நமக்கு கொடுத்திருக்கும் மற்றுமொரு பரிசுதான் இது। சிந்தித்து பாருங்கள் தன்னை உயர்வாக நினைக்கும், தன்மானம் உள்ள யாராவது ஒரு இரண்டு காசு காரணத்திற்காக ஒரு மூன்றாமவர் காலில் 'தடால்' என்று விழுவாரா ?

சரி..... ஒட்டு மொத்தமாக தமிழ் இனம் என்பதை பற்றி நாம் இங்கு பேச வேண்டாம். அது வம்பை வீணாக விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும். மேலும், எனது சிந்தனையின் அளவு 'மலேசிய தமிழர்' எனும் எல்லைகோட்டிற்கு மட்டுமே உட்பட்டது. அதனால் நான் பேசாமல் நம்மூர் மேட்டருக்கே வந்து விடுகிறேன்.

மலேசிய பொது பல்கலைக்கழகங்கள் "நாங்கள் பெரிய பருப்புக்களாக்கும், பிஸ்தாக்களாக்கும்... எங்கள் கல்வி தரம் அப்படியாக்கும், இப்படியாக்கும், ஆ..ஆகாவாக்கும்... ஓ..ஓகோவாக்கும்" என்று உள்ளூரில் பீத்திக்கொண்டு இருந்துவிட்டு, THES உலக பல்கலைக்கழக தேர்வு கணக்கீட்டில் வருடா வருடம் 350 ஆவது, 450 ஆவது இடங்களில் இடம் பெருவது வழக்கமான ஒன்று. அதுபோல் தான் மலேசிய தமிழர்களின் நிலை. உலகத்தில் உள்ள எல்லா இனங்களையும் வரிசைபடுத்தி அதில் ஒவ்வொரு இனமும் எந்த அளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன என்பதை கணக்கெடுத்தால், மலேசிய தமிழ் இனம் நிச்சயமாக முதல் 50 விழுக்காட்டுகளுக்குள் இருக்காது என்பது என் கருத்து.

இதற்கெல்லாம் காரணங்கள் என்ன? உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களோடும் ஒப்பிட்டு பார்த்து நமது சமுதாயத்தின் குறைந்த வளர்ச்சிக்கான காரணங்களை கண்டு பிடிப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அதை நம்மால் செய்யவும் முடியாது। ஆனால் 150 வருடங்களாக நம்மோடு அண்டை வீட்டாராக வாழ்ந்து வரும் சீனர்களோடு நமது நிலையை ஒப்பிட்டு பார்க்க நம்மால் முடியும். அப்படி செய்வதன் மூலம், நமக்கும் சுய முன்னேற்றத்திற்கான வழி வகைகள் ஏதாவது தென்படலாம்.


அத்தோடு சீனர்களோடு நூற்று ஐம்பது ஆண்டுகளாக நாம் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம் என்கிற நிலைபாட்டால், நம்மோடு அவர்களை ஒப்பிட்டு பார்த்து கொள்வது நமக்கு சுலபமாகவும், விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ள கூடிய நிலையிலும் இருக்கும்।

வாருங்கள், சீனர்களையும் நம்மையும் ஒப்பிட்டு சிறிது அலசிப் பார்ப்போம். காசா, பணமா .... மூலைக்கு சிறிது வேலை அவ்வளவுதானே !


சீனர்களும் கல்வியும்

கல்வியை எடுத்து கொள்வோம். தமிழர்கள் எப்போது பரவலாக அடிப்படை கல்வியை பெற்றனர் என்று நினைக்கின்றீர்கள் ? மிஞ்சி போனால் ஒரு 200 வருட இடைவழியில் தான் தமிழ் இனம் பரவலாக அடிப்படை கல்வியை கற்றிருக்கும். அதற்கு முன்னர், பிராமணருக்கும் பிற மேல் சாதி காரர்களுக்கும் மட்டும் தான் கல்வி எனும் நிலைதான் தமிழகத்தில் இருந்திருக்கின்றது.

ஆனால் கல்வி குறித்த சீனர்களின் நிலையே வேறு. சீனர்களின் கல்வி தறத்தை / நிலையை நம் இனத்தின் கல்வி நிலையோடு ஒப்பிட்டு பார்க்க நாம் விளங்கினால், முதலில் சீனர்களின் பாரம்பரிய சரித்திர பூர்வ உண்மைகள் சிலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சீனர்களின் பாரம்பரியத்தில் ( confucius ) /'கன்பியூசியஸ்'/ என்று அழைக்க படும் தத்தவ ஞானியினுடைய சிந்தனையின் தாக்கம் அளவிற்கறியது. இவர் கி.மு. 551 லிருந்து, கி.மு. 479 வரை சீனாவில் வாழ்ந்த ஒரு மாமேதை.

இவர் இறப்புக்கு பின்னர் இவரிடம் கல்வி கற்ற 3,000 மாணாக்கர்களில் பலர் சீன தேசத்தின் முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தப் பட்டனர். கால போக்கில் இப்படி அரசாங்க நிர்வாகஸ்த்தர்கள் ஆன சிஸியபாடிகள் தங்கள் குருவினுடைய போதனைகளை பரவலாக மக்கள் மத்தியில் பரப்ப, 'கன்பியூஷியனிஸம்' எனும் வாழ்க்கை வழிமுறைத் தத்துவம் சீன நாட்டில் மெது மெதுவாக வேர் ஊன்ற ஆரமிபித்தது.

கன்பியூஷியஸின் சிந்தனைகளில் படிப்பை பற்றின அடிப்படை கூறு என்ன வென்றால், "கல்வி கற்க உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். கல்வி கற்பதற்கு வேண்டிய திறமையும் மனிதருக்கு, மனிதர் பெரிதாக வித்தியாசப் படுவதுமில்லை. சிலர் சூழலின் காரணமாக கற்பது யாவற்றையும் சிறிது எழிதாக கற்ப்பர், வேறு சிலர் சிறிது தாமதமாக கற்ப்பர். அவ்வளவே. கல்வியை கொண்டுதான் மனிதனை பாதை தவறி போகாமல் நல் வழிப் படுத்த முடியும். ஆதலால் நாடாலும் அரசனின் பல கடமைகளுள், பொது மக்களுக்கு கல்வி புகட்டும் கடமை மிகப் பெரிய ஒன்று" என்பதுதான்.

காலப் போக்கில் கன்பியூஷியஸின் சிந்தனைகள் சீன மக்கள் மத்தியில் மிக ஆழமாக வேர் ஊன்றவே, கி.மு. 220 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவில் கன்பியூஷியஸின் காப்பியங்களையும், தத்துவங்களையும், இதர எழுத்துகளையும் மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச பாடசாலைகள் நிறுவப் பட்டன.

இந்த பாடசாலைகளில் படிப்பதற்கு பொதுமக்களிடம் எந்த நிபந்தனையும் விதிக்கப் படவில்லை। விருப்பப் பட்ட, திறமையுள்ள யார் வேண்டுமானாலும் அங்கு படிக்கலாம் என்ற நிலைதான் இருந்துள்ளது. (அன்றிலிருந்து தொடர்ந்து 2,000 வருடங்களுக்கு மேலாக இந்த கன்பியூஷியனிஸததை மையமாக கொண்ட பாட முறையே சீன நாட்டின் பாடசாலைகளில் அமுல் படுத்த பட்டு வந்துள்ளது. இந்த நிலை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் வேறு பாடத் திட்ட முறைக்கு மாற்ற பட்டுள்ளது).

மேலும் இந்த பாடசாலைகளில் படித்து கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள்தான் பறந்து கிடந்த சீன சாம்ராஸியத்தின் நான்கு திசைகளுக்கும் அரசரால் அனுப்ப பட்டு, அரசாங்க அதிகாரிகளாக நியமிக்க பட்டுள்ளார்கள்.

இப்படி படிப்பின் மூலமாக ஒரு ஏழையின் மகன் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்த பட்ட போது, அவனின் குடும்பம் மட்டுமின்றி அவனை சார்ந்த உறவினர் அனைவருடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கின்றது.

ஆதலால், அன்றைய சீன நாட்டு சூழ்நிலையில் ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு குழந்தை நன்றாக படிக்க கூடியவன் என்று பட்டால், அந்த கிராமமே ஒன்று சேர்ந்து அவன் அரசாங்க பாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கான எல்லா உதவிகளையும் செய்து அவனை படிக்க வைத்திருக்கின்றார்கள். காரணம், அவன் ஒருவன் மேல் எழும்போது அந்த கிராம மக்கள் அனைவருமே அவனால் பயன் அடைய வாய்ப்பு இருந்த படியால்.

சுருங்க சொன்னால், 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனர்களுக்கு படிப்பின் முக்கியத்துவம் மிக நன்றாக புரிந்திருக்கின்றது. மலேசிய தமிழர்களின் முன்னோர்கள் 'அ, ஆ...' என்று ஆரம்பிப்பிதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் பரவலாக கல்வியை கற்று, கரைத்து, குடித்து, ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

கேட்கிறது. "இப்படியெல்லாம் பேசி கொண்டு போனால், நம் இனம் முன்னேறவே முடியாது. இது நம் இனத்தை நாமே இழிவு படுத்திகிறார்போல் இருக்கிறது. நாம் முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்று வாசகர்கள் சிலர் சொல்கிற வசனம் நன்றாக கேட்கின்றது.

உண்மைதான். முயன்றால் முடியாதது எதுவுமில்லைதான். ஆனால், அந்த உண்மை நமக்கு மட்டும் பொருந்துகிற உண்மை அல்லவே. உலக மனிதர் அத்தனை பேருக்கும் அது பொருந்துமே. நம்மை விட பல படிகள் கீழே உள்ள சில ஆப்பிரிக்க இனத்தவருக்கும் அது பொருந்தும், நம்மைவிட பல படிகள் மேலே உள்ள சீனர்களுக்கும் அது பொருந்தும். இருந்தும் பொதுவாக சில சமூகங்கள் மட்டும்தானே உழைப்பின் மூலம் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொண்டிருக்கின்றனர்.

பிற எல்லோரும் "முயன்றால் முடியாதது எதுவுமில்லை", "நம் வாழ்க்கை நம் கையில்", "மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்று அவரவர் மொழிகளில் வாய் முழக்கம் மட்டும்தானே இட்டு கொண்டு இருக்கிறார்கள்.

ஐயா, அத்தைக்கு மீசை முலைத்த அன்னைக்கு சித்தப்பா என்று கூப்பிடுவோம். அது வரை அத்தை அத்தைதானே ! சரி.... காமடியை ஒதுக்கி விட்டு கையிலிருக்கும் மேட்டருக்கு வருவோம்.

ஏன் சில சமூகங்கள் மட்டும் காலத்திற்கு உகந்த வழியில் தங்களை மாற்றி கொண்டு, பக்குவ படுத்தி கொண்டு, எந்த முயற்ச்சியில் இறங்கினாலும் அதில் வெற்றியும், முன்னேற்றமும் அடைகின்றனர் ? மற்ற இனங்களுக்கும் அவர்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம் ?

அந்த 'ஏன்', 'எதனால்', 'எப்படி' என்கிற கேள்விகளுக்கான ஒட்டுமொத்த பதில்தான் பாரம்பரியம். நமது பாரம்பரியத்தின் உண்மைகளையும், அதனால் நமக்கு ஏற்பட்டிருக்கும் தாக்கங்களையும் நாம் சரிவர புரிந்து கொண்டால் ஒலிய நம் இனத்தை சுற்றி நடக்கிற பல விஷயங்களை நம்மால் சறியாக கிரகிக்க முடியாது. எதையும் முறையாக புரிந்து கொள்ளவும் முடியாது.

நம்மை சுற்றி நடப்பவற்றை புரிந்து கொள்ள முடியாத நிலையில், நம்மால் என்ன சமுதாய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் ?? ஒரு மண்ணும் செய்ய முடியாது !!

எப்போதும்போல "மறத் தமிழன் .... திருக்குறள் ..... ராமாயணம் .... சிலப்பதிகாரம் ... இதிகாசங்கள் .... 5,000 ஆண்டுகள்" என்று சிலர் பேசியும், எழுதியும் கொண்டிருப்பார்கள் .... எப்போதும்போல அரசியல்வாதிகள் 'நாங்கள் அதைச் செய்ய போகிறோம், இதைச் செய்ய போகிறோம், சமுதாயத்திற்கு அந்த திட்டம் வைத்திருக்கிறோம், இந்த திட்டம் வைத்திருக்கிறோம்' என்று ப்பிராடு பண்ணி கொண்டிருப்பார்கள் ...... எப்போதும்போல நம் இனம் குண்டர்கள் இனமாகவும், குடிகாரர்கள் இனமாகவும் பிச்சைகாரர்கள் அதிகம் உள்ள இனமாகவும் வெளி உலகிற்கு காட்சி அளித்து கொண்டிருக்கும் ... எப்போதும்போல பிற எல்லோரும் நம்மை தாண்டி ஓடிக் கொண்டே இருப்பார்கள். ...... எப்போதும்போல சூரியன் கிழக்கில் உதித்து, மேற்க்கில் அஸ்தமனமாகும் ... உலகம் சுற்றிக் கொண்டே இருக்கும் .... எப்போதும்போல நமது சமூகம் திசை தெரியாது, தலையை சொரிந்து கொண்டு நின்ற இடத்திலேயே நிற்போம்.

இன்னொரு 50 வருடங்கள் ஆகியிருக்கும. நாமெல்லாம் போய் சேர்ந்திருப்போம. புதிதாக என்னை போல், உங்களைப் போல் புதிய தமிழர் செட் "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று முலக்கமிட்டு பேசியும், எழுதியும் கொண்டிருக்கும். அப்பவும் நம் இனம் மட்டும் இப்போது உள்ளது போலவே மற்றவறை விட பின் தங்கியே இருக்கும்..... திக்கும் தெரியாமல், திசையும் தெரியாமல்.

இந்த பரிதாப நிலைக்கு, விமோசனம் இல்லையா ? ......... இருக்கிறது !

அதற்கு முதலில் நம்முடைய அடிப்படை சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும. ஆனால் அதைவிட முக்கியம் - 'ரோஷம்' என்பதை இப்போது உள்ளதை விட நாம் சிறிது கூடுதலாக வளர்த்து கொள்ள வேண்டும்.