Friday, March 27, 2009

உன்னையே நீ அறிவாய் ! (நான் யார்? நீ யார்? நாம் யார்?) - பாகம் 6

.

இந்த தொடரின் முதல் 5 பதிவுகளிலும் மலேசிய தமிழர்களான நாம் யார், எப்படி மலாயாவிற்கு வந்து சேர்ந்தோம், நமது குறிகிய கால சரித்திர பின்னனி என்ன, மற்ற இனங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நம்மிடையே எல்லா நிலைகளிலும் வளர்ச்சி குன்றியிருக்க காரணங்கள் என்ன, சாதியம் எனும் சாபம் நமது சமூகத்தை எப்படி பாதித்திருக்கின்றது, நமக்கும் மற்ற மலேசிய இனங்களுக்கும் (குறிப்பாக சீனர்களுக்கும்) இடையே உள்ள அடிப்படை கூறுகளின் வித்தியாசங்கள் என்னென்ன என்பதை எல்லாம் விரிவாக அலசி ஆராய்ந்து பார்த்தாகி விட்டது.


மேலும் விரிவாக நம் இனத்திடம் உள்ள நிலைப் பாடுகளையும், குறை பாடுகளையும் படம் போட்டு காட்ட நிறைய விஷயங்கள் இருந்த போதிலும், "இதற்கு மேல் இவர்களை தலையில் தட்டி எழுதுவதால் என்ன ஆகப் போகிறது? சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். குருடனை ராஜ முழி முழிக்கச் சொன்னால், அவன் எப்படி முழிப்பான்?" என்கிற சளிப்பு ஒரு புறம் என் மனதை ஆட் கொண்டு விட்டது.

அத்தோடு "மாற்றம் என்பது ஒரு மனிதனின் சுய சிந்தனையின் வெளிப் பாட்டாய் அமையும் போது தான் அது நிறந்தரமானதாக இருக்குமே ஒலிய, யாரோ பிற ஒருவர் சொல்லி மற்றொருவர் மாறுவது என்பது நடமுறையில் எடுபடாத ஒன்று. மிஞ்சிப் போனால் அப்படி ஏற்படும் மாற்றம் ஒரு பலமற்ற, தற்காலிக மாற்றமாகத் தான் இருக்க முடியும்" என்பது என்னுடைய ஆழமான கருத்தும் கூட.

ஆதலால், நம் சமூகத்தை பற்றிய என் அப்பட்ட விமர்சனங்களை இத்தோடு நிறுத்திக் கொண்டு, "மலேசிய தமிழ்ச் சமுதாயம் முன்னேற என்ன வழி?" என்கிற அடிப்படை கேள்விக்கு என் சுய புத்திக் கெட்டிய வழிவகைகளை இந்த பதிவில் இருந்து கொடுக்க நினைத்து எழுதத் துவங்குகிறேன். என் சிந்தனைகள் உங்களுக்கு பிரயோஜன படுகிறதா என்று படித்து பாருங்கள்.

நம்மை பிற்றி பிற இனங்களின் கண்ணோட்டம்

நாம் பிற எந்த ஆராய்ச்சியையும் ஆரம்பிப்பதற்கு முன்பு, முதல் வேலையாக மலேசியாவில் உள்ள பிற இனங்கள் 'மலேசிய இந்தியன்' என்பவனை என்ன கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறார்கள் என்பதை சற்று கவனித்தில் எடுத்து கொள்வோம். எனக்கு தெரிந்த வகையில் மலேசியாவில் உள்ள பிற இனத்தவர்கள் இங்குள்ள இந்தியர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்கிறார்கள்:-

""சீக்கியர்கள், வட இந்தியர்கள், மலையாளிகள் என்று சிறிது சிவப்பு நிறம் கொண்டவர்களோடு, யாழ்பானத்தினரையும் சேர்த்து இவர்களெல்லாம் முன்னேற்றமான இந்திய வகுப்பினர் என்றும், சிறிது கருமை நிறம் களந்த பிற யாவரையும் இந்தியர்களில் பிற்ப்போக்கானவர்கள்"" என்றும் தான் பார்க்கிறார்கள். இதுதான் நடைமுறையில் நான் அறிந்த உண்மை.

இப்படி பிற இனங்கள் நினைப்பதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தால். "ஆம், அவர்கள் நினைப்பது உண்மைதான்" என்றே சொல்ல தோன்றுகிறது. "ஏன்? எப்படி? எதை வைத்து சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறீர்களா?

சரி இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் ஆராய முற்படுமுன், மலேசிய இந்தியர்கள் என்பவர்களை உள்ளடக்கிய ஒவ்வொரு இனத்தின் தற்போதைய நிலைப் பாட்டையும் தனித் தனியாக பார்ப்போம்:-

1). சீக்கியர்கள்

மலேசியாவில் சீக்கிய இனத்தின் எண்ணிக்கை ஒரு 70,000 இருக்கும். இவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிட்டீஸ்காரர்களால், சிப்பாய்களாகவும், போலீஸ்காரர்களாகவும் மலாயாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள். உழைப்பிற்கும், ஒழுக்கத்திற்கும், மனத் திடத்திற்கும், வைராக்கியத்திற்கும் பேர் போனவர்கள்.

இனவாரியாக சீக்கியர்களின் சாதனைகளை எடை போட்டு பார்த்தால், இவர்கள் தான் மலேசியாவில் உள்ள இனங்களிலேயே அதி முன்னேற்றமான, பணக்கார இனமாக இருப்பார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? நீங்கள் எங்காவது ஒரு சீக்கியர் அடுத்தவருக்கு கூலி வேலை செய்து பார்த்து இருக்கிறீர்களா? இல்லை, எங்காவது ஒரு சீக்கிய பிச்சைக்காரரை பார்த்து இருக்கிறீர்களா? இல்லை, அன்றாட அலவல்களில் பலதரப் பட்ட இனாங்களோடு பலகும் போது எப்போதாவது ஒரு சீக்கியர் எந்த காரணத்திற்காகவும் அடுத்தவருக்கு பயந்து பின்வாங்குவதை பார்த்திருக்கிறீர்களா?

("இனவாரியாக பார்த்தால், சிங்கப்பூரில் அதிக சராசரி வருமான வரி கட்டுபவர்கள் சீக்கிய இனத்தவர்கள் தான்" என்று சிங்கப்பூரின் முன்னால் பிறதமர் திரு. லீ குவான் யூ ஒரு முறை தேர்தல் மேடையில் சொல்லியதை நானே கேட்டிருக்கிறேன்).

2). வட இந்தியர்கள்

மலேசியாவில் வட இந்திய இனங்களான குஜராத்தி, சிந்தி, பங்காளி பொன்ற இனங்களின் மொத்த ஜனத்தொகை ஒரு 10,000 இருக்கும். இவர்கள் வட இந்தியாவில் இருந்து வர்த்தகர்களாக அந்தக் கால மலாயாவிற்கு வந்தவர்கள். இன்றும் இவர்களின் சந்ததியினர் பெரும்பாலும் வர்த்தகர்களாக தான் இருந்து வருகிறார்கள். நிறுவையில் வைத்து எடை போட்டு பார்த்தால், இவர்களும் படிப்பாலும், பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கை தரத்தாலும் மிகவும் மேம்பட்ட, மலேசியாவின் பிற எல்லா இனங்களையும் தூக்கி விழுங்க கூடிய ஒரு சமூகத்தினர் தான்.

3). மலையாளிகள்

மலேசியாவில் மலையாளிகளின் ஜனத்தொகை ஒரு 120,000 இருக்கும் என்பது என்னுடைய பல மலையாள நண்பர்களின் மதிப்பீடு. அந்த கால மலாயாவிற்கு மலையாளிகள் பிரிட்டீஸ்காரர்களால் ரப்பர் தோட்ட நிர்வாகத்தினருக்கு குமாஸ்தாக்களாகவும், மண்டோர்களாகவும், மருத்துவ உதவியாளர்களாகவும் கொண்டு வரப் பட்டுள்ளாகள். இங்கு வந்த தமிழர்களைப் போல் அல்லாமல், மலையாளிகள் சுமார் எண்பது, தொன்னூறு வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டிற்கு வரும்போதே படித்தவர்களாகவும், நன்கு ஆங்கிலம் பேச, படிக்க, எழுதத் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

நாளடைவில், இவர்களின் சந்ததியினரும், நன்கு படித்து பட்டம் வாங்கியவர்களாக அமைந்ததால் இவர்களுக்கு மலேசிய தமிழரைப் போன்ற அடிப்படை பிர்ச்சனைகள் எல்லாம் என்றுமே இருந்ததில்லை. அத்தோடு, பிறரை கவரும் வகையில் இவர்களுடைய நிறமும் சிவப்பாக இருந்தது இவர்களுக்கு மற்றுமொரு பெரிய அனுகூலமாக என்றுமே இருந்துள்ளது.

மலையாளிகள் பொதுவாக வர்த்தகம், தொழில் என்பவையில் ஈடுபடாதவர்களாக இருந்துள்ள படியால், இந்த சமூகத்தில் குறிப்பிட தக்க அளவில் பெரும் பணக்காரர்கள் உருவாகமல் இருந்திருக்கிறார்கள் என்கிற உண்மை ஒரு புறம் இருந்தாலும், மலையாளிகள் காலங்காலமாக படிப்பிற்கு கொடுத்து வந்துள்ள முக்கியத்துவம் நாம் யாவரும் நன்கு அறிந்த ஒன்று. அந்த வகையில் படிப்பிற்கு முன்னுரிமை கொடுத்ததின் வழி, தங்கள் வாழ்க்கை தறத்தை மேம்படுத்தி கொண்ட இனங்களுல், மலையாளிகள் முதல் நிலை பெற்றவர்கள்.

4). யாழ்பானத் தமிழர்கள்

மலேசிய ஜனத்தொகையில் யாழ்பானத் தமிழர்கள் ஒரு 150,000 பேர் இருப்பார்கள் என்பது என்னுடைய மதிப்பீடு. இவர்களும் மலேசியாவில் உள்ள பிற எல்லா இனத்தையும் தூக்கி விழுங்க கூடிய ஒரு இனத்தவர்தான். மலேசியாவின் அதி பெரிய பணக்காரர்களில் திரு. ஆனந்த கிருஷ்ணன், டத்தோ ஞானலிங்கம், டான் ஸ்ரி ஆறுமுகம் போன்று எத்தனையோ யாழ்பானத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் எந்த இனத்திடம் சராசரி அதிக சொத்துக்கள் இருக்கின்றது என்பதை கணக்கெடுத்து பார்த்தால் அது நிச்சயமாக யாழ்பான தமிழர்கள் இனமாகத் தான் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மலாயாவைப் போல் 43 நாடுகளை தங்களின் காலனிகளாக கொண்ட பிரிட்டீஸ் அரசாங்கத்தினர், மலாயாவின் தட்ப்ப வெட்ப சூழ்நிலையில் ரப்பர் மரம் நன்றாக வளரும் என்பதை உணர்ந்த போது, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் மற்ற பல காலனித்துவ நாடுகளை விட மலாயாவின் பால் அதிக நாட்டம் காட்ட துவங்கினர்.

அந்த வகையில் மலாயாவில் காடுகளை அழித்து, ரப்பர் மரங்களை நட்டு வளர்க்க மிகவும் பொருத்தமானவர்கள் என்று படிப்பறிவு இல்லாத இந்திய தமிழர்களையும், அரசாங்க நிர்வாகத்திற்கு பொருத்தமானவர்களாக படித்த யாழ்பான தமிழர்களையும் அடையாளம் கண்டு, இந்த இரு தமிழ் பிரிவினரையும் மலாயாவிற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்தனர்.

இப்படி யாழ்பானத்தில் இருந்து வந்த தமிழர்கள் பெரும்பாலும் சாதியத்தில் மேம்பட்ட அள்ளது நடுத்தர இனங்களைச் சேர்ந்தவர்களாகவும், நன்கு படித்தவர்களாகவும், ஆங்கிலத்தை சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

அத்தோடு அந்த கால சூழ்நிலையில், ஒரு வளர்ந்து வரும் செழிப்பு நிரைந்த புது நாட்டில் ஆங்கில நிர்வாகிகளுக்கு துணையாளர்களாக, குமாஸ்தாக்களாக, சர்வேயர்களாக, மருத்துவ உதவியாளர்களாக, ஆசிரியர்களாக, தொழில் நுட்ப உதவியாளர்களாக அரசாங்க சேவையில் யாழ்பான தமிழர்கள் செயல்பட்ட போது, இயல்பாக அந்த பதவிகளில் யாருக்கும் கிடைக்க கூடிய பல அனுகூலங்கள் அவர்களுக்கும் கிடைத்துள்ளன. அப்படி கிடைத்த அனுகூலங்களை யால்பான தமிழர்கள் திறம்பட பயன்படுத்திக் கொண்டு, நன்மை அடைந்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தில் என்னென்ன வேலைகள் காலியாக உள்ளன, எப்போது அந்த இடங்கள் நிரப்ப பட உள்ளன, அதற்கான நேர்கானல், தேர்வு எல்லாம் எப்போது நடத்த பட உள்ளது, யாரால் நடத்தப் பட உள்ளது என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் முதலில் தெரிய வருவது அங்கு வேலை செய்யும் இவர்களுக்கு தான். அதை சாதகமாக பயன் படுத்தி, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என்று சங்கிலித் தொடர் போல் அவர்களுக்கு தெரிந்தவர்களாக அரசாங்க உத்தியோகத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். இப்படி அரசாங்கத்தில் யாழ்பான தமிழர்களுக்கு இருந்த சொகுசு நிலை, 1969 வருடம் நடந்த இனக் கலவரத்திற்கு பிறகு முன் வைக்க பட்ட புதிய பொருளாதார கொள்கையின் அமுலாக்கத்திற்கு பிறகே முற்றுக்கு வந்துள்ளது.

ஆனாலும் 1969 ஆம் ஆண்டிற்க்கு 100 வருடங்களுக்கு முன்பு வரை யாழ்பான தமிழர்களுக்கு அரசாங்கத்தில் இருந்த சலுகைகளின் மூலம் தங்கள் இனத்திற்க்கு ஏற்படுத்திக் கொண்ட பலம் (வலம்) மிகப் பெரியது. அந்த நிலைப் பாட்டின் தாக்கம் இன்றும் அவர்களுக்கு துணை நிற்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

யாழ்பானத்தாரின் பலத்தை, வளர்ச்சியை சரியாக புரிந்து கொள்ளும் முன், வாசகர்கள் அவர்களைப் பற்றிய மற்றொரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும். யாழ்பானத் தமிழர்களிடையே பெண் குழந்தைகளுக்கு அதிகமான வரதட்சனை கொடுத்து மணம் முடித்து வைப்பது என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டு வந்துள்ள ஒரு சமூக வளக்கம். அதனால், ஒவ்வொரு யாழ்பான தமிழரும் தம் பெண் பிள்ளைகளின் வரதட்சனைக்கு பிற்பாடு தேவைப் படும் என்பதற்காக தங்களின் சேமிப்புகளை அன்றைய மலாயாவில் 'நில பலங்களில்' முதலீடு செய்துள்ளார்கள். அன்று அப்படி வாங்க பட்ட நில பலங்கள்தான் பிற்பாடு யாழ்பான தமிழ் பிள்ளைகளின் வெளிநாட்டு படிப்பிற்கும், அவர்களின் தொழில் முயற்ச்சிகளுக்கும், பிற முக்கிய செலவுகளுக்கும் பயன் படுத்தப் பட்டுள்ளன.

இதன் தாக்கத்தை வாசகர்கள் முறையாக புரிந்து கொள்ளவதற்கு ஏதுவாக, உங்களுக்கு இங்கு ஒரு எடுத்து காட்டை முன் வைக்கிறேன். கோலாலம்பூரில் 'பங்சார்' என்று ஒரு இடம் உள்ளது. இந்த 'பங்சார்' எனும் பகுதிதான் மலேசியாவிலேயே அதிக விலையுள்ள நடுத்தர வீடுகளை கொண்ட இடம். இங்கு ஒரு ஒற்றை மாடி ட்டெரஸ் வீட்டின் இன்றைய விலை மலேசிய ரிங்கிட் 600,000 ஐ தாண்டி ஓடிக் கொண்டுள்ளது. இந்த பங்சாரில் உள்ள சுமார் 2,000 வீடுகளில் எப்படியும் ஒரு 30 விழுக்காடு வீடுகள் இன்றும் யாழ்பான தமிழர்களுடையதாக தான் இருக்கின்றன. 1970 ஆம் ஆண்டு இந்த வீடுகள் கட்டி முடிக்க பட்ட போது யாழ்பானத்தார்கள் தான் வலைத்து. வலைத்து இந்த வீடுகளை ஓரு வீடு மலேசிய ரிங்கிட் 14,000 என்ற விலைக்கு வாங்கினார்கள். இன்று அதே வீடுகளின் விலை மலேசிய ரிங்கிட் ஆறு லட்ச்சம். எனக்கு தெரிந்த பல யாழ்பானத் தமிழர்கள் பங்சாரில் இன்றும் இரண்டு, மூன்று வீடுகள் வைத்திருக்கின்றனர்.

இதே போல் வீடு, வாசல், நிலம் புலம், எஸ்டேட்டுகள் என்று மலேசியாவில் யாழ்பானத்தார்கள் வாழ்ந்த பல நகரங்களில் இன்றும் அவர்களுக்கு சொத்து சுகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

5). தெலுங்கர்கள்

மலேசியாவில் உள்ள தெலுங்கர்களை பற்றி எனக்கு தனி மனித அளவில் எந்த அநுபவமும் இருந்தது இல்லை. அதனால் அவர்களை பற்றி எதுவுமே தெரியாத நிலையில் இனையத்தில் மலேசிய தெலுங்கர்கள் குறித்து என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனப்தை கண்டு பிடிக்க பல இணைய தலங்களை எட்டி பார்த்தேன். மலேசிய ஆந்திரா அசோசியேஷனின் இணைய தலத்தில் மலேசியாவில் தெலுங்கர்களின் ஜனத்தொகை 300,000 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சரிதானா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சரி மலேசியாவில் தெலுங்கு இனத்தினரின் ஜனத்தொகை எவ்வளவு என்கிற கேள்வியை இங்கு விட்டு விடுவோம். நான் கண்டு பிடித்த வரை, தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழர்களைப் போல், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கர்களும் எந்த படிப்பறிவும் இல்லாத நிலையில் மலாயாவிற்கு கூலி வேலை செய்வதற்காக வந்தவர்கள் தான். ஆனால், தமிழர்களை விட மலேசியாவில் உள்ள தெலுங்கு இனத்தவர் மேம்பட்ட பொருளாதார நிலையிலும், கூடுதலான படிப்பறிவோடும் உள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

யாழ்பானத்து தமிழர்களை போல், தெலுங்கர்களும் 1960 - 1970 களில் நில பலங்களில் அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்கள். குறிப்பாக தோட்ட துண்டாடல் நடந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான தெலுங்கர்கள் அவர் அவர்களால் முடிந்த அளவு நிலங்களை வாங்கி போட்டிருக்கிறார்கள். அப்படி வாங்கி போடப் பட்ட நிலங்களின் விலை இன்று ஒன்றுக்கு, பத்து, இருபது என்கிற நிலையில் உள்ளன.

அப்படியானால் மலேசிய தெலுங்கர்களும் நம்மை விட (மலேசிய தமிழர்களான நம்மை விட) விவரமான, முன்னேற்றமான இனத்தினர் தானே.

6). இந்திய முஸ்லீம்கள்

மலேசியாவில் இந்திய முஸ்லீம்களின் ஜனத்தொகை ஒரு 150,000 இருக்கலாம் என்பது என் கணிப்பு. நாட்டுக் கோட்டை செட்டியார்கள் இனத்தை போல், வட இந்திய இனங்களைப் போல் தமிழ் நாடு, கேரளா ஆகிய இந்திய மாநிலங்களில் இருந்து மலாயாவிற்கு வணிகர்களாக வந்தவர்கள் தான் இன்றைய இந்திய முஸ்லீம்கள்.

பொதுவாக படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாத ஒன்றுதான், இந்த இனத்தவரை பற்றி யாரும் குறையாக சொல்லக் கூடிய ஒரே விஷயம். அதுவும் இப்போதைய நிலையில் மாறிக் கொண்டு வருகிறது. மற்ற வகையில் இந்திய முஸ்லீம்கள் வணிகத்திலும், வியாபாரத்திலும் அசாத்திய அசுரர்கள்.

சீனர்களை ஒத்த உழைக்கும் தன்மை இவர்களுக்கும் வெகுவாக உண்டு. பொருளாதார ரீதியாக மிகவும் மேம்பட்ட ஒரு வகுப்பினர். ஆனால், மற்றவரைப் போல இவர்களிடம் இருக்கும் பொருள் வலம் இலகுவில் வெளியில் தெரியாத வகையில் வாழ்க்கையை சாதாரணமாக நடத்திச் செல்லும் இயல்பு உள்ளவர்கள்.

7). இந்திய தமிழர்கள்

இந்திய தமிழர்கள் (ஆம்.... நாம்) இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து 150 வருடங்களுக்கு முன்பு ரப்பர் எஸ்டேட்டுகளில் வேலை செய்வதற்காக பிரிட்டீஸ்காரர்களால் கொத்தடிமைகளாக, கங்கானி ஏஜண்டுகள் மூலமாக மலாயாவிற்கு கொண்டு வரப் பட்டவர்கள்.

இவர்கள் மலேசிய இந்திய ஜனத்தொகையில் 75 விழுக்காடு இருப்பார்கள் என்பது பலரது கணிப்பு. படிப்பறிவு சிறிதும் இல்லாத நிலையில், கூலி வேலைக்கென்றே இந்த நாட்டுக்கு கொண்டு வரப் பட்ட இனத்தினர்.

மலேசிய இந்திய இனங்களிலேயே படிப்பு, பொருளாதாரம், சமூக இயல் என்று எல்லா வகையிலும் பிற எல்லா இனங்களையும் விட பொதுவாக பின் தங்கிய நிலையிலேயே இன்றும் இருந்து வரும் ஒரு சமூகத்தினர்.

ஆக இதுதான் மலேசிய இந்தியன் எனும் குழுமத்தின் உள்ள எல்லா இனங்களின் இன்றைய நிலைப் பாடு. இதில் எல்லா இனங்களையும் விட கடைசி வரிசையில் இருப்பது நாம் தான்.

சரி, இப்படி இனவாரியான ஆராய்ச்சி எதற்கு என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. அடுத்த பதிவில் காரணங்களை பார்ப்போம்.

Saturday, January 24, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சீனர்களும் உழைப்பும்) - பாகம் 5


மஞ்சள் நதிக் கரை கலாச்சாரம்

4,500 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த சீனர்களின் 'மஞ்சள் நதி கரையோர' கலாச்சாரத்தைப் பற்றி எடுத்துக் கூறும் அதே வேலை, சரித்திர ஆராச்சியாளர்கள் அந்த காலக் கட்டத்தில் அந்த பிரதேசங்களில் நடந்த பெரும் வெள்ளங்களைப் பற்றியும் எடுத்துறைகின்றனர்.

அன்றைய காலக் கட்டத்தில் இருந்து இன்றைய தேதி வரை சீன தேசத்தவர்கள் மஞ்சள் நதி பெருக்கெடுப்பால் மாறி, மாறி வந்த வெள்ளங்களினாலும், அவற்றை அடுத்து வந்த பஞ்சங்களினாலும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அந்த கரையோர பிரதேசங்களில் வாழ்ந்த சீனர்களின் வாழ்க்கை நிலை என்றுமே கடினமான ஒன்றாகத் தான் இருந்திருக்கின்றது.

பஞ்சங்கள் ஏற்படுத்திய கஷ்ட நிலையில் இருந்து விடுபடவும், விட்டு வந்த உறவினர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வேண்டி பல சீன இளைஞர்கள் தென் சீன பிரதேசங்களில் இருந்து வேலையும், நல்ல வாழ்வும் தேடி தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதற்கும் கூலி ஆட்களாகவும், வர்த்தகர்களாகவும் 19ஆம் நூற்றாண்டு கடைசியிலும், 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் பெரிய எண்ணிக்கையில் வர தொடங்கியுள்ளனர்.

இப்படி வந்த சீனர்கள் அன்றைய சீன நாட்டு சூழ்நிலை இயல்பாக அவர்களிடையே வளர்ந்திருந்த சில குணாதிசியங்களையும், சீன பின்னனியில் அவர்கள் கற்றுக் கொண்ட பல வாழ்க்கை அனுகு முறைகளையும் அவர்களோடு சேர்த்து தாங்கள் குடியேறிய நாடுகளுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர்கள் போக பிற மன்னர்களின் படையெடுப்பால் ஒய்வின்றி நடந்த போர்கள், வரி வசூலிப்பு என்கிற பேரில் சாதாரண மக்களின் ரத்தத்தை உறுஞ்சிய சிற்றரசர்கள், ஊழல் மிகுந்த அரசாங்க நிர்வாகஸ்தர்கள் என்று சராசரி சீனர்களின் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரும் பிரச்சனையானதாகவே இருந்திருக்கின்றது.

இப்படிப்பட்ட அன்றைய சீன நாட்டு சூழ்நிலையில் வாழ ஒருவருக்கு நல்ல உடல் வளமும், மன உரமும் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. அதையும் மிஞ்சி சிற்றசர்களையும், அதிகாரிகளையும் எப்படி சமாளிப்பது, அவர்களை கவர்ந்து, தங்களுக்கு தீங்கு நேராமல் எங்கனம் பாதுகாத்து கொள்வது, என்பன போன்ற வித்தைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தால்தான் ஒரு மனிதன் அவன் குடும்பத்துடன் அன்றைய சீன நாட்டில் ஒரளவுக்காவது நிம்மதியாக வாழலாம் என்ற நிலைமை இருந்திருக்கின்றது.

இப்படி அன்றைய அன்றாட வாழ்க்கைக்காக சீனர்கள் தங்கள் சொந்த நாட்டில் கற்றுக்கொண்ட வித்தைகள் காலப் போக்கில் அவர்கள் குடியேறிய பிற நாடுகளில் தொழில் புரிவதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. இதனால்தான் இன்றும் சீனர்கள் விருந்துபசரிப்பிலும், கேளிக்கைகளை முக்கியஸ்தர்களுக்கு அறிமுக படுத்துவதிலும், பரிசுகள் கொடுத்து பிறரை கவர்வதிலும் பெரும் வித்தகர்களாக உள்ளனர்.




சீனர்கள் கடின உழைப்பாளிகள்

சீனர்கள் மிக மிக கடினமான உழைப்பாளிகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர் பள்ளியில் படிக்கும் மாணாக்கராக இருந்தாலும் சரி, கடையில் வேலை செய்யும் சிப்பந்தியாக இருந்தாலும் சரி, காரியாலயத்தில் பணிபுரியும் நிர்வாகியாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை வழிநடத்தும் தொழில் அதிபராக இருந்தாலும் சரி, சீனர்களில் பெரும்பாலோர் மிக கடின உழைப்பாளிகளாக தான் இருப்பார்கள்.

கடின உழைப்பு என்பது சீனர்களிடமுள்ள மிக மிக அடிப்படையான ஒரு கூறு. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 90 கோடி பல இன மக்களிடமும் சென்று, இங்கு அவர்களோடு வாழுந்து வரும் சீனர்களை ஒரே ஒரு வார்த்தையில் சித்தரிக்கும்படி கூறி ஒரு ஆய்வு நடத்தினால், அதற்கு கிடைக்கும் பதில் "உழைப்பாளிகள்" என்பதாக தான் இருக்கும்.

தமிழர்கள் பேச்சுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதை விட அதிக அளவு முக்கியத்துவம் சீனர்கள் உழைப்புக்கு கொடுக்கிறார்கள். தமிழர்கள் அதிகம் பேசுவது குறித்து ஒரு வயோதிக சீனர் ஒரு முறை என்னிடம் கூறியது: "பேச்சு என்பது விழை குறைந்த ஒன்று. யார் வேண்டுமானாலும் பேசலாம், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதற்கு அறிவும் தேவையில்லை, முதலும் தேவையில்லை. ஆனால் உன்னை உலகம் எடைபோடுவது உன் பேச்சை வைத்தல்ல. நீ இன்றுவரை என்ன செய்திருக்கிறாய், என்ன சாதித்திருக்கிறாய் எனப்தை வைத்து" என்றார்.

உண்மைதானே! நாம் சாதனையாளர்களா, இல்லையா என்பதற்கு அடையாளம் மற்றவரோடு ஒப்பிடும்போது நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்பதை பொருத்து தானே இருக்கிறது. வீட்டுக்குள்ளே நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு உட்காந்து இருக்கலாம், ஆனால் என்று கல்வி காரணமாக, வேலை சாரணமாக வீட்டை விட்டு வெளியே வருகிறோமோ அப்பொழுதே, நாம் மற்றவரின் பார்வைக்கும், எடைபோடலுக்கும் ஆளாகி விடுகிறோம் அள்ளவா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது - "You judge yourself by what you think you can do. Others judge you by what you have already done". அதாவது, "நீ உன்னை எடை போட்டுக் கொள்ளும் போது உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து எடை போட்டுக் கொள்வாய். ஆனால் உலகம் உன்னை எடைபோடும் போது, நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய் என்பதை வைத்தே எடை போடும்" என்பதுதான் அதன் தமிழாக்கம்.



வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார நிலைப் பாடு

சீனாவை விட்டு இதர நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறிய சீன வம்சாவளியினரின் ஒட்டு மொத்த பெயர் 'வெளிநாட்டுச் சீனர்கள்' (OVERSEAS CHINESE) என்பது.

இவர்கள் ஒரு அதி அட்டகாசமான, திறமைமிக்க வகுப்பினர். உலகம் முழுவதும் என்று பார்த்தால், சுமார் நான்கு கோடிப் பேர் இருப்பர். இந்த கூட்டத்தின் ஒட்டு மொத்த தனியார் பொருளாதார வளம் US$ 1,500 பில்லியன் (150,000 கோடி US$) என்று ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாரபூர்வ அமெரிகக ஆய்வு காட்டியது. ஆதாவது ஒவ்வொரு வெளிநாட்டு சீனருக்கு RM. 37,500 சராசரி வளம் உள்ளது. நம்ப முடியவில்லையா ? ஆனாலும் நம்பத்தான் வேண்டும் .

மாதிரிக்கு, கீழே தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் சீனர்களின் ஜனத்தொகை விழுக்காடும், அதை அடுத்து அந்தந்த நாடுகளில் சீனர்களின் பொருளாதார பங்கீட்டின் விழுக்காடும் கொடுத்திருக்கிறேன்:-

1. மலேசியா - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 24 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

2. இந்தோனீசியா - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 3 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

3. பிலிப்பீன்ஸ் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 2 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 40 %

4. வியட்நாம் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 2 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 40 %

5. தாய்லாந்து - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 12 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

6. சிங்கப்பூர் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 75 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 80 %




சீனர்களின் வியாபார இயல்புகள்


சீனர்கள் அந்தந்த நாள் வேலையை அந்தந்த நாளே முடிக்கும் இயல்பு உடையவர்கள். குறிப்பாக கடை வைத்திப்பவர்கள் மறுநாள் வந்து கடையை திறந்து வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது, முதல் நாள் வேலையில் தங்கி போன மீதி வேலை எதுவுமே இருக்க கூடாது என்கிற நடைமுறை பழக்கத்தை பின்பற்றுபவர்கள்.

உதாரணத்திற்க்கு இங்குள்ள சீன உணவகங்கள் இரவு 10.30 மணிக்கு ஆர்டர் எடுப்பதை நிறுத்தி கொண்டு, பாத்திரங்களை கழுவுவதும், சமையற்கட்டை சுத்தம் செய்வதுமாக இருப்பார்கள். பிறகு எல்லா வாடிக்கையாளர்களும் உணவகத்திலிருந்து கிழம்பிய பிறகு மேசை நாற்காலிகளை எல்லாம் ஓரமாக தள்ளி வைத்து விட்டு, உணவத்தை கூட்டி பெருக்கு, கழுவி சுத்தம் செய்துவிட்டு, மறுநாள் வந்தவுடன் வியாபாரத்தை ஆரம்பிக்க ஏதுவாக எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்து விட்டு அவரவர் வீடு திரும்புவதற்கு்வதற்கு 12.00, 12.30 மணியாகும்.

பிறகு மறுநாள் பார்த்தால் சுத்தமான உடை உடுத்தி, சவரம் செய்து, நன்றாக தலைவாறி, பார்ப்பதற்கு பலிச்சென்று வியாபார ஸ்தலத்தில் அன்றைய வியாபாரத்திற்கு தயாராக புன்முறுவலுடன் நிற்பர். இது பெரிய, சிறிய வியாபாரம் என்கிற வித்தியாசம் எல்லாம் இல்லாமல், அத்தனை சீன வியாபாரிகளாலும் கடை பிடிக்க படும் ஒரு சாதாரண தடைமுறை அம்சம்.

ஆனால் இவர்களின் இந்த கூறுகளை எல்லாம் நூறு வருடங்களுக்கு மேலாக தினமும் பார்த்து வளர்ந்த இந்த நாட்டிலுள்ள பிற இன வியாபாரிகள் இவற்றை இன்றைக்கும் கடை பிடிப்பது கிடையாது.

இதில் இந்தியர்கள் நடத்தும் உணவு விடுதிகளின் இயல்புதான் மிகவும் மோசமானதாக இருக்கும். இங்குள்ள பெரும்பாலான இந்திய உணவு விடுதிகளில் வேலை செய்வோர் இந்தியாவில் இருந்து வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு நம் மலேசிய இந்திய உணவு கடை முதலாளிகள் முறையான சம்பளம் கொடுக்காதது மட்டுமில்லை, அவர்கள் ஓய்வு எடுக்க போதுமான நேரமும் வழங்குவதில்லை.

நடைமுறையில் இதன் தாக்கம் என்னவென்றால், இந்திய உணவுக் கடை ஊழியர்கள் எப்பவும் வேர்வை நாற்றத்துடன், சவரம் செய்யப்படாத முகங்களுடன், முகத்தில் சிறிதுகூட கலை இல்லாது ஏதோ கடைமைக்கு பவனி வருபவர்கள் போல் காட்சி அளிப்பதுதான்.

(இங்கு சீனர்களைப் பற்றி பெருமையாக எழுதுவதும் , அதே நேரத்தில் தமிழர்களின் முட்டாள்தனத்தை அப்பட்டமாக விமர்சிப்பதும் பலருக்கு பிடிக்க வில்லை என்று எனக்கு தோன்றுவதால், நான் சொல்ல விரும்பும் பலவற்றை சுருக்கி கொண்டு வருகிறேன். அந்த வகையில், இந்த பகுதிக்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கொடுத்து விட்டு அடுத்த பகுதிக்கு செல்கிறேன்).




சீனர்கள் வியாபாரத்தில் கடுமையான போட்டியாளர்களும் கூட

சீனர்கள் வியாபாரத்தில் மிக கடினமான போட்டியாளர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது சீனாவில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள 'வெளிநாட்டு சீனர்களுக்கும்' பொருந்தும்.

போட்டி என்று வந்து விட்டால் அடுத்தவரை நிலைபெற சீனர்கள் விடவே மாட்டார்கள். அதற்கு இங்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கோடி காட்டிவிட்டு செல்கிறேன்.

இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெற்கு மாநிலங்களிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருடாவருடம் மலேசியாவினுல் எனக்கு தெரிய 40-50 வருடங்களாக இறக்குமதி ஆகிகொண்டு இருக்கின்றது. ஆனால் இதை இறக்குமதி செய்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஆம், சீன வியாபாரிகள்தான்.

இந்த வியாபார்த்தினுல் நுழைய எத்தனையோ மலேசிய இந்திய வணிகர்கள் முயன்றிருக்கின்றனர். அப்படி நுழைய முற்பட்ட எந்த இந்திய வியாபாரியையும் சீனர்கள் நிலை பெற விட்டதில்லை.

இந்திய வியாபாரி ஒருவர் வெங்காயத்தை இந்தியாவிலிருந்து தருவிக்க விளைகிறார் என்று தெரிந்த உடனேயே, சீன வியாபாரிகள் தங்களின் விலையை இங்கு குறைத்து விடுவார்கள்.

இறக்குமதி செய்ய முற்பட்ட இந்திய வியாபாரியும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், கடைசியாக வேறு வழி தெரியாமல், சீன வியாபாரிகளிடமே தாங்கள் கொண்டு வந்த சரக்கை கை மாற்றி விட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விடுவர்.

இது குறித்து மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. தங்களின் வெங்காய வியாபாரத்தை முறையாக, பல காலம் தொடந்து செய்ய வெண்டும் என்று நினைத்த ஒரு மலேசிய சீன வியாபார குடும்பம், தம் மகன்களில் ஒருவரை நிரந்தரமாக தென் இந்தியாவில் குடிபுக வைத்து, அவருக்கு ஒரு தென் இந்திய பெண்ணையும் கல்யாணம் செய்து வைத்துள்ளார்கள். அவர் குடும்பமும், குட்டியுமாக பல காலம் இந்தியாவில் வசித்தும் வருகிறார்.

(இத்தோடு சீனரக்ளை ஒப்பிட்டு எழுதுவதை நான் நிறுத்தி கொள்கிறேன். அடுத்து வரும் இரண்டு பாகங்களும் "என் பார்வையில் மலேசிய தமிழர்களின் பிர்ச்சனைக்கான தீர்வுகள்" என்பதை சாராம்சமாக கொண்டவையாக இருக்கும். அதற்கு பிறகு இந்த ஊடகத்தில் எதையும் எழுத நான் நினைக்க வில்லை. அத்தோடு வேலை நிமித்தமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு நான் வெளி நாடு போக வேண்டி இருப்பதால், என் அடுத்த பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி வாக்கில் தான் இருக்கும்).





Saturday, January 17, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சீனர்களும் தன்மான உணர்வும்) - பாகம் 4

"""
வாசகர்களுக்கு,

இந்த ஊடகத்தை நான் ஆரம்பித்த போது "நம் எழுத்தை படிப்பதற்கு இங்கு ஆள் இருக்கிறதா, இல்லையா ?" எனும் சந்தேகத் தோடே எழுத ஆரம்பித்தேன். ஆனால் இப்போது இந்த ஊடகத்தின் 'COUNTER' காட்டும் எண்ணிக்கையை பார்க்கும்போது, என் எழுத்திற்கும் இணையத்தில் சிறிது வரவேற்ப்பு இருக்கிறார் போல தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் பின்னூட்டம் இல்லாதது சிறிது குழப்பமாகவும் இருக்கிறது.

இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரை இன்னும் இரண்டு, அல்லது மூன்று பாகங்களோடு முடித்து விடுவேன். ஆனால் அதற்கு பிறகும் இணையத்தில் எழுதுவதா, வேண்டாமா என்பது தான் என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி.

இது குறித்து, வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான் விண்ணப்பம். இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரை படிக்க விரும்பி தாங்கள் இந்த ஊடகத்திற்கு இனி வந்து போகும் போதெல்லாம், பின்னூட்ட (மறுமொழி) பெட்டியில் 'வந்து சென்றேன்' என்றோ, 'படித்தேன்' என்றோ ஒரு வார்த்தை, இரு வார்த்தைகளில் பின்னூட்டம் விட்டுச் செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இங்கு எத்தனை பேர் ஒவ்வொரு பதிவையும் படிக்கிறீர்கள் என்பது தெரிந்தால் என் எழுத்தை தொடர்வதா, வேண்டாமா என்பதை நான் சிறிது இலகுவாக முடிவு செய்து கொள்வேன்.

நன்றி,
சாமான்யன்
"""




அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், ஜெர்மானியர்கள், வெளிநாட்டு சீனர்கள் போன்று உலகில் அதிக வளர்ச்சியுற்றிருக்கும் இனங்கள் அனைவரிடமும் ஒரு பொதுவான அம்சத்தை நாம் பார்க்க முடியும் - அவர்கள் அனைவரும் தம்மை உயர்வாகவே நினைத்து கொள்பவர்கள்.

மற்ற இனத்தாரோடு பலகும்போது இவர்களிடம் இருந்து எப்பவும் ஒரு 'சுப்பிரியாரிட்டி கொம்ப்லெக்ஸ்' எனும் தங்களைப் பற்றிய 'உயர்வு மனப்பான்மை' வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். (இதற்கு நேர்மாறாக நம்மவரிடம் எப்பவும் ஒரு 'தாழ்வு மனப்பான்மை' இருந்து கொண்டே இருக்கும். இதை இப்படி அப்பட்டமாக நான் கூறக் கேட்கும் போது கசப்பாக இருந்தாலும், அதுதான் உண்மை என்பது நம் அனைவருக்குமே தெரியும்).

இப்படி தங்களை பற்றி உயர்வாகவே நினைத்து கொள்ளும் இனங்களிடம் மற்றுமொரு பொதுவான அம்சம் என்னவென்றால் - இவர்கள் அனைவரிடமும் 'தன்மானம்' என்பது சற்று அதிகமாகத் தான் இருக்கும்.

அந்த வகையில் நம்மோடு அண்டை வீட்டுகாரர்களாக 150 வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கும் சீனர்களின் தன்மான உணர்வு எத்தனையோ வழிகளில் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அதில் என் கண்ணுக்கு பட்ட சில உதாரணங்களை இங்கு எடுத்து கூறுகிறேன். என் கூற்று உண்மையா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



நண்பர்களோடு குழுமும்போது சாப்பாட்டிதற்கு பணம் கட்டுவது

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல இன நண்பர்கள் ஒன்றாக உணவு உண்பதற்காகவோ, மது அருந்துவதற்காகவோ குழுமும் போதெல்லாம், சாப்பிட்டதற்கான மொத்த 'பில்லையும்' நான் கட்டுகிறேன், நான் கட்டுகிறேன் என்று அடிக்கடி போட்டா போட்டி வருவது சீனர்களுக்கு இடையேதான்.

சீனர்களும் உள்ளிட்ட பலதர பட்ட இனங்கள் குழுமும் சூழ்நிலையில், சீனர்கள் அல்லாதார் இப்படி முண்டி அடித்து கொண்டு பணம் கட்ட கிழம்புவதை நான் மிகவும் அறிதாகத்தான் பார்ததிருக்கிறேன். இது நான் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இன்று நேற்று பார்த்த விஷயமல்ல, எனக்கு விவரம் தெரிந்த நாளாய் இது நான் நன்கு பார்த்து பழக்கபட்ட ஒரு அன்றாட சமூக நிகழ்வு.
"நண்பர்களிடையே சாப்பிட்டதற்கான பணத்தை ஒருவர் கட்டுவதற்கும், தன்மான உணர்வுக்கும் என்ன தொடர்பு?", என்று சிலர் நினைக்கலாம். இந்த சிறிய விஷயத்திலும் ஒருவருக்கு தன்மான குணம் சிறிது மிகுதியாக இருந்தால் தான் அவர் முண்டி அடித்து கொண்டு தான் பணம் கட்டுவதாக கிழம்புவார் என்று நான் நினைக்கிறேன்.



கல்விக் கடனுதவி

மலேசியாவில் அரசாங்கம் மேற்கொள்ளும் சமூக சீரமைப்புகளும், திட்டங்களும் போக பெருவாரியான சமூக சேவைகள் இங்கு அரசாங்க சார்பற்ற இனவாரியான சமூக ஸ்தாபனங்களாலேயே மேற்கொள்ள பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாணாக்கர்களின் படிப்பு மேம்பாட்டிற்கென இங்கு பல ஸ்தாபனங்கள் இயங்குகின்றன. அவறறில் நம் இன மாணாக்கர்களுக்கு என்று சில ஸ்தாபனங்கள் நிதி திரட்டி கல்வி கடனுதவி செய்து வருகின்றன.

எனக்கு தெரிய \'ராம சுப்பையா எஜுக்கேஷன் ஃபண்ட்'\ , \'EWRF எஜுக்கேஷன் ஃபண்ட்'\, \'MIED எஜுக்கேஷன் ஃபண்ட்\' என்று சில கடனுதவி நிதிகள் இருந்தன. அவற்றில் 'ராம சுப்பையா ஃபண்ட்' இப்போது இல்லை. 'EWRF' இன்னமும் தொடர்ந்து கடனுதவி கொடுத்து வருகிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. 'MIED' ஆலும் அரசியல் கூட்டனியில் ஒரு உறுப்பினக் கட்சியின் கல்வி நிதி சாதனம் - அதனால் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தகைய ஃபண்டுகளின் குறிக்கோள் என்னவென்றால், வசதி குறைந்த இந்திய குழந்தைகள் பள்ளிகளில் படிப்பதற்கு உபகாரச் சம்பளமும், பிறகு பல்கலைகழகங்களில் படித்து பட்டம் பெற ஏதுவாக அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவியும் செய்து கொடுப்பது தான். இந்த ஃபண்டுகள் வழியாக எத்தனையோ ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள் பல்கலைகழக பட்டம் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல நிலைகளில் உள்ளனர்.

ஆனால் இவர்களில் பெரும்பாலோர் படிப்பிற்கென்று பெற்ற கடனை திருப்பி கொடுப்பது கிடையாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, கோர்ட்டுக்கு கொண்டு செல்வேன் என்று பயமுறுத்தி, அடித்து பிடித்து வாங்கினால் ஒழிய இவர்களில் பெரும்பாலோர் பெற்ற கடனை திரும்ப கொடுப்பதை பற்றி நினைத்து பார்க்ககூட பார்ப்பது கிடையாது.

அதே போல தான் மலாய்காரர்களும் - படிப்பிற்கென்று வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது. (கடனை திரும்ப பெற வேண்டி யாரும் அவர்களை முனைப்போடு விரட்டுவதும் இல்லை. அவர்களின் கதையே வேறு. அந்த கதையெல்லாம் இங்கு பேச இது தருணம் அல்ல. நேரம் வரும்போது, தேவை ஏற்பட்டால் பேசுவோம்).

ஆனால் சீனர்களின் நிலைமையே வேறு. இந்திய ஸ்தாபனங்கள் கொடுப்பதை காட்டிலும், சீன ஸ்தாபனங்கள் படிப்பிற்காக ஆணடுதோரும் வழங்கும் கடன் உதவிகள் பெரிதாகத் தான் இருக்கும். நம்மை காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில்தான் அவர்கள் தம் இன பிள்ளைகளுக்கு கடன் உதவி வழங்குவார்கள். ஆனால் அப்படி கடன் வாங்கி பட்டம் படித்து முடித்த அத்தனை சீன குழந்தைகளும், வேலை செய்ய ஆரம்பித்த உடனேயே கடனை திருப்பி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சீன ஸதாபனங்கள் வெளியிடும் கணக்குபடி இப்படி குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் சீன மாணாக்கர்களின் விகிதாச்சாரம் 95 விழுக்காடு.

நம் இந்திய ஸ்தாபனங்களில் வக்கில் நோட்டீஸ் அனுப்பி, அடித்து, பிடித்து திரும்ப பெரும் கடன்களின் விகிதாச்சாரம் 15 லிருந்து 20 விழுக்காடே. மீதிப் பேர் என்ன செய்தாலும் கல்வி கடனை திருப்பி கொடுப்பது கிடையாது.

இதனால் நடைமுறையில் என்ன ஆகிவிடுகின்றது என்றால், நம் இனத்தில் குருவி சேர்ப்பதுபோல் சேர்க்கப் பட்டு ஏற்படுத்தபடும் கல்விக் கடனுதவி பண்டுகள், கால ஓட்டத்தில் பண பற்றாக்குறையின் காரணமாக முற்றாக நிறுத்த பட வேண்டிய நிர்பந்தத்திற்கோ, சுருக்கபட வேண்டிய சூழ்நிலைக்கோ தள்ளப் பட்டு விடுகின்றன.

ஆனால் சீனர்கள் ஏற்படுத்தும் சமூக சீர் அமைப்பு / கடன் உதவி பண்டுகள் வருடா வருடம் திரும்ப வசூலிக்கபடும் பணத்தோடு, கடனுதவி பெற்ற பழைய மாணாக்கர்கள் அவ்வப்போது வளங்கும் நன்கொடைகளையும் சேர்த்து செழித்து ஓங்கி வளர்கின்றன.

உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது, வெளியில் இருந்து பார்ப்போருக்கு ஏதோ சீனர்கள் பணக்காரர்களாகவும், அதனால் அவர்கள் ஏற்படுத்தும் நிதிகள் யாவும் வெற்றி அடைவதாகவும், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிற படியால் தம் சொந்த சமூக நலனுக்காக அவர்களால் போதிய அளவு நிதி திரட்ட முடியாமல் போய்விடுகிறதென்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கும்.

ஓரளவுக்கு இந்த கூற்றில் உண்மை இருந்தாலும், நாம் ஏற்படுத்தும் கல்வி கடனுதவி நிதிகள் சுருக்கப் படவோ, நிறுத்தப் படவோ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் படுவதற்கான காரணம் வெளியில் இல்லை. அது நம்மிடைமே தான் இருக்கிறது. "நம் படிப்பிற்கென ஒரு இந்திய ஸ்தாபனம் நமக்கு செய்த உதவிக்கு நாம் ஒன்றும் பெரிதாக கைமாறு செய்யா விட்டாலும், அவர்கள் கொடுத்த பணத்தை நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்" எனும் 'தன்மான உருத்தல்' நம் இனத்தவரிடம் இல்லாம் போனதுதான் அதற்கான முக்கால்வாசி காரணம்.



'டிப்ஸ்' வாங்குதல்

சீனாவின் உட்புறங்களில் குறிப்பாக பெய்ஜிங், சாங்ஹாய் போன்ற மாநகரங்கள் அல்லாது உட்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், மது அருந்தும் பார்களிலும், கேளிக்கை மையங்களிலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ' டிப்ஸ்' வாங்க இன்றைக்கும் மறுத்து விடுவார்கள்.

இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் - " பெரிய மாநகரங்களில் வெளிநாட்டு தாக்கம் வந்து விட்டதால், அங்கு உள்ள சீனர்களின் இயல்பு சமீபமாக மேல்நாட்டு பாணியில் மாறியுள்ளது. ஆனால் சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. எங்களின் பாரம்பரிய முறைப்படி செய்யும் வேலைக்கு உள்ள ஊதியத்தில் யாவரும் குறியாக இருப்போம். அது அல்லாது, யாராவது 'சன்மானம்' எனறு கொடுப்பதை வாங்குவது எங்கள் கலாச்சாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப் பட்டு வந்திருக்கிறது.

ஆதலால் 'டிப்ஸ்' வாங்கும் பழக்கம் இங்கு பொதுவாக பழக்கத்தில் இல்லை. நீங்களும் யாருக்கும் 'டிப்ஸ்' கொடுக்காதீர்கள். அது அவமரியாதையான செயலாக கருதப் படும்" என்றார்கள்.

இதுகுறித்து நான் என் கண்ணால் நேரில் கண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறுகிறேன், கேளுங்கள். நான் ஒரு முறை சீனாவில் உள்ள 'ஹுனான்' மாநிலத்தில் தலைநகரமான 'சங்ஸா' என்கிற ஊருக்கு போயிருந்தேன். இது சீனாவின் 12 வது பெரிய நகரம். அங்கு ஒரு நாள் இரவு நானும் அங்கு வசித்து வரும் என் நண்பரும் அவரின் மனைவியும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டு இருந்தோம்.

அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து உள்ள மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதிகள் இருவர் உணவருந்தி கொண்டிருந்தனர். தங்களின் சாப்பாட்டிற்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையிலிருந்து 30 யுவானை ( 15 ரிங்கிட்) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பறிமாறின பணிப் பெண்ணிடம் 'டிப்ஸாக' நீட்டினார். அதை எப்போதும்போல அந்த சீன பணிப் பெண் வாங்க மறுத்து விட்டார்.

அந்த அமெரிக்க தம்பதிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அப் பெண் அந்த பணத்தை பிடிவாதமாக வாங்க மறுக்கவே, அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் , தோழ்களையும் 'சரணடைந்தேன' என்கிற பாணியில் உயர்த்தி காட்டிவிட்டு, அந்த பணத்தை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு மனைவியோடு உணவகத்தின் வாசல் வரை சென்றார். பிறகு மனைவியிடம் பேசி கொண்டே திரும்பி பார்க்கும் பொழுது, அப்பணி பெண் கையில் சில தட்டுக்களோடு உணவகத்தின் பின்புறமிருந்த கதவை தள்ளிக் கொண்டு சமையற்கட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

உடனே அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளைபோல் தன் சட்டை பையில் வைத்த அந்த 30 யுவானை எடுத்து கொண்டு கிடு கிடு என்று ஒடி வந்து அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது வைத்து விட்டு, கிடு கிடு என்று ஒடி மனைவியோடு வெளியில், வீதியில் சென்ற கூட்டத்தோடு கலந்து விட்டார்.

சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்த பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தை பார்த்ததும், பணத்தை சட்டென்று கையில் எடுத்து கொண்டு உணவகத்தின வெளியில் ஒடி வீதிக்கு வந்தார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும் என் நண்பரும் அவர் மனைவியும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்து விட்டோம்.

இது மற்ற இருவருக்கும் அன்றாட நிகழ்வு என்றாலும், எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால் "நீங்கள் இங்கேயே இருங்கள், நான் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறி அப் பெண்ணை நொடர்ந்து நானும் சென்றேன்.

அந்த பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதிகளை தேடியபடி ஒரு நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு் உணவகத்திலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்கு சாலையில் அவர்கள் ஒரு டாக்சியில் ஏறிகொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின் தொடர்ந்து சென்ற நான் டாக்சி நின்றிருந்த இடத்திற்கு ஒரு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக் கொண்டு, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி நின்றேன்.

டாக்ஸியை அணுகிய அப்பெண் ஓட்டுனரின் கதவை தட்டி டாக்சியை நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகள் முன் அந்த 30 யுவானை நீட்டியபடி, தான் வேண்டி கேட்டு கொள்வதற்கு அடையாளமாக முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார்.

வேறு வழியில்லாமல் அந்த அமெரிக்கர் அந்த பெண்ணின் கையிலிருந்த பணத்தை திரும்ப பெற்று கொண்ட பின்னரே, அப்பணிப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

நான் பல நாடுகள் போய் வந்த அநுபவம் உள்ளவன். இந்தகைய தன்மான உணர்வை வெளிக்காட்டும் ஒரு சம்பவத்திற்கு ஒப்பான ஒரு சுற்று பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது. (இந்தியாவில் நான் பார்த்தெல்லாம் .... எதுக்குங்க .... வேண்டாம் .... இந்திய அஙபவங்களை இங்கு பேச வேண்டாம் .... விட்டிடுவோம்..!!).

நான் மேற்கூறிய இந்த நிகழ்வின் அர்த்தம் என்ன என்று நினைக்கிறீர்கள் ? "நான் செய்யும் வேலைக்கான உண்மையான கூலியை கொடு. அதைவிடுத்து எனக்கு சன்மானமானமென்று நீ எதற்கு கொடுக்கிறாய் ? உன சன்மானமெல்லாம் எனக்கு தேவையில்லை" என்று கூறாமல் கூறும் ஒரு தன்மானமும், ரோஷமும் மிகுந்த இன வளர்ப்பின் வெளிப்பாடுதான் என் கண்ணுக்கும், புத்திக்கும் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

இப்படி ரோஷமும், தெனாவெட்டும் உள்ள இனத்தாரோடு தான் நாம் 150 வருடங்களாக் அண்டை வீட்டுகாரர்களாக பழகியும், வாழ்ந்தும் இருக்கிறோம். ஆனால் அவர்களிடமிருந்து நாம் எதாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா என்றால், இல்லை.

எவரிடமுமிருந்தும் எதையும் நாம் உறுப்படியாக கற்றுக் கொண்டதில்லை. அப்படி எதையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று நாம் நினைத்ததும் இல்லை. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, "எங்கள் பாட்டன் பூட்டன் காலத்திலெல்லாம், 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்" என்று வெத்து வேதாந்தம் பேசி கொண்டு இருந்து விட்டு, நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான எதையுமே நாம் கற்று கொள்ள வில்லை. அதன் விளைவு தான் நம்முடைய இன்றைய நிலை.

ஐயா, உண்மை பல நேரங்களில் கசக்கும். மேலும் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொளவதனால் அது காணாமலும் பொய்விடாது. உண்மை என்ன வென்று தெரிந்து, தெளிந்து, அதன் பிறகு நடமுறை நிலைப் பாட்டை ஒட்டி தான் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். நம் இனப் பிறச்சனையும் அப்படித் தான் என்பது என் கருத்து.