Friday, September 11, 2009

உன்னையே நீ அறிவாய் ! ('தேடலை' தொலைத்த சாதியம்) - பாகம் 14


தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் பொருள் இருக்கும்

சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும், அடிப்படை வாழ்க்கை அனுகுமுறையில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. சீனர்கள் தங்கள் வாழ்க்கை தம் கையில் தான் உள்ளது, தம் மேம்பாடு தம் சுய உழைப்பை பொருத்தது என்று ஆணித்தரமாக நம்புபவர்கள்.

ஆனால், தமிழர்களோ 'விதியைப் பொருத்து தான் வாழ்க்கை' என்ற ஆழமான எண்ணத்தை உடையவர்கள். இப்படி தமிழர்களிடையே பிற்போக்காக எண்ண ஓட்டம் அமைந்ததற்கு இரண்டு முக்கிய சரித்திர பூர்வ காரணங்கள் உள்ளன.

ஒன்று - காலங்காலமாக தமிழர்களிடையே மத வழிபாட்டின் வழி ஆழமாக வேர் ஊன்றிவிட்ட "எல்லாம் அவன் செயல்" என்று எடுத்தற்கெல்லாம் ஆண்டவனை / விதியை சுட்டி காட்டும் அடிப்படை சமய இயல்பு.

இரண்டு - பண்டைய கால இந்திய சமூகவியலில் ஒவ்வொரு மனிதனுக்கும் "இது, இது தான் உன் பொருப்பு. இது, இதைச் சுற்றித் தான் உன் நிலைப்பாடு, வாழ்க்கை எல்லாம் உள்ளது. இதைத் தாண்டி உனக்கு பிற எந்த சமூக ஈடுபாடும் கிடையாது" என்று சாதியத்தை வைத்து வரையருக்கப் பட்ட சமூக நிலை.

ஒரு சலவைத் தொழிலாளியின் மகன் சலவைத் தொழில் மட்டுமே செய்ய முடியும். ஒரு குயவன் மகன் குயவனாக மட்டுமே இருக்க முடியும், ஒரு சிகை அலங்காரரின் மகன் அதே குலத் தொழிலைத் தான் தொடர முடியும், ஒரு போர் வீரனின் மகனும் போர் வீரனாக தான் இருக்க வேண்டும் என்கிற சமூக நிலைப்பாடு ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மிடையே இருந்ததால், நம் பாட்டன் பூட்டன்களில் பெரும்பாலோர் வாழ்க்கையில் எந்த 'தேடலும்' இல்லாமலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடிந்து விட்டிருந்தனர்.

தன் நிலையை உயர்த்தி கொள்வதற்கான, அல்லது மாற்றிக் கொள்வதற்கான அடிப்படை 'வாய்ப்பு' என்பது ஒன்று இருப்பதாக ஒருவன் தன் அளவில் உணர்ந்தால் தானே, தன்னை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனும் 'தேடல் உணர்வு அவன் மனதில் எழும்பும் !! அப்படி ஒரு வாய்ப்பே இல்லா பட்ச்சத்தில், அவன் என்னத்தை 'தேடி' என்ன ஆக போகிறது !!!

"
என்னய்யா உளறுகிறீர்கள், நீங்கள் கூறும் இந்த நிலை சில நூறு வருடங்களுக்கு முன்பே நம் இனத்தவரிடையே மாறிவிட்டது. இன்றைய நிலையில் சீனர்களைப் போல் தமிழர்கள் இடையேயும் 'தேடல்' என்பது பேரளவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது" என்று கூறுகிறீர்களா? பொடலங்காய் !!! நம்மில் பாதி பேருக்கு மேல் 'தேடல்'' என்பதற்கான அர்த்தம் கூட தெரியாதவர்கள் தான்.

(
இதை தங்களுக்கு தெளிவு படுத்த கீழே சில பாராக்கள் தாண்டி பத்திரிக்கை படித்தல் குறித்தும், அஸ்ட்ரோ பார்த்தல் குறித்தும் சில குறிப்புகளை கொடுத்துள்ளேன். அவற்றை படித்து விட்டு சீனர்களுக்கு ஒப்ப தமிழர்களிடம் 'தேடல்' எனும் இயல்பு பரவலாக உள்ளதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)

என் சீன நண்பர்களோடு நான் சந்தித்து அலாவும் போதெல்லாம், அவர்கள் சிந்தனையில், பேச்சில் தங்கள் நிலையை மேம்படுத்தி கொள்ளூம் பொருட்டு, ஒரு 'தேடுதல்' கோடு எப்பவும் ஓடிக் கொண்டே இருக்கும். "புதிதாக ஒரு சாப்பிங் மால் வந்திருக்கிறதே பார்த்தாயா? அங்கு மூன்றாவது மாடியில் ஒரு உணவருந்தும் பகுதி திறக்க உள்ளார்கள். அதில் ஒரு ஸ்டாலின் வாடகை மூவாயிரமாம், அங்கு ஒரு பீசா ஸ்டாலைத் திறந்தால் லாபகரமாக ஓடும் என்று நினைக்கிறாயா?", "நான் வசிக்கும் இடத்தில், தங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் சிலர் தினமும் காலை ஏழு மணிக்கு குழுமி ஒன்றாக உடற்பயிற்சி செய்கிறார்கள். நானும் அதில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நீயும் வருகிறாயா?", "எனக்கு கணினியில் பவர்பாயிண்ட் எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. உனக்குதான் அது நன்றாக தெரியுமே, ஒரு இரண்டு மணி நேரம் ஒதுக்கி எனக்கு அதை சொல்லித் தருகிறாயா?", இப்படித்தான் சீனர்கள் ஒன்றாக குழுமும் போது தங்களுக்குள்ளே பேசிக் கொள்வார்கள்.

தமிழர்கள் ஒன்றாக குழுமும் போது குடும்ப விஷயங்களை பேசுவோம், அரசியலைப் பேசுவோம், சினிமாவைப் பற்றி பேசுவோம், கோவில் திருவிழாக்களைப் பற்றி பேசுவோம், அவன் இதைச் சொன்னான் இவன் அதைச் சொன்னான் என்று பேசுவோம். அனால், நாம் பேசும் எந்த பேச்சிலும் சீனர்களைப் போன்று மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான 'தேடல்' என்பது பெரும்பாலும் இருக்காது.

வாயளவில் நாம் "நம் வாழ்க்கை நம் கையில்" என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டாலும், அந்த கூற்றை நாம் ஆணித்தரமாக நம் மனதில் ஏற்றிக் கொள்வதில்லை. காரணம், காலங்காலமாக நாம் மதியை விட விதியைத் தான் அதிகம் நம்பி வந்துள்ளோம்.

சரி, இனி நான் மேற்கூறிய பத்திரிக்கை / அஸ்ட்ரோ குறிப்புக்களுக்கு வருவோம். இந்த நாட்டு ஜனத்தொகையில் இந்தியர்கள் 7.4 விழுக்காடு இருக்கிறோம். அதில் தமிழர்களின் விகிதாச்சாரம் ஒரு 6.0 விழுக்காடு இருக்கும். இதே போல் மொத்த ஜனத்தொகையில் சீனர்கள் 23.5 விழுக்காடும், பூமிபுத்ராக்கள் 65 விழுக்காடும் இருக்கிறார்கள். சரியா !!


தேடல் என்பதன் பொருள்

சரி, இப்போது 'தேடல்' என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
தேடல் என்பதை 'அறிய அல்லது, அடைய முயற்ச்சித்தல்' என்று கூறலாம். ஒரு மனிதன் எந்த ஒரு துறையிலும் தனது இன்றைய நிலையை மாற்றிக் கொள்ள விரும்பினால், விளைந்தால், அதற்காக அவன் எடுக்க கூடிய முதல் முயற்ச்சி அவன் விரும்பும் மாற்றத்தை எங்கனம் செயல் படுத்தலாம் என்று அறிந்து கொள்வதற்காக அவன் உள்ளும் புறமும் கேட்கும் கேள்விகளும், எடுக்கும் முயற்ச்சிகளும் தான். அதை தான் நான் 'தேடல்' என்று பொருள் கொள்கிறேன்.

சரி, நாம் இளகுவில் அடையாளம் கண்டுகொள்வதற்கு இந்த 'தேடல்' என்பதற்கு எதுவும் குறியீடு உள்ளதா? அதன் முக வெளிப்பாடு எப்படி இருக்கும்? ஒரு சமூகம் 'தேடல்' என்பதன் தன்மையில் ஆலமாக ஈடுபட்டிருக்கிறது என்பதை நாம் எங்கனம் அடையாளம் கண்டு கொள்வது? என்பன போன்ற கேள்விகளுக்கு என் பதில் இதுதான்.


பத்திரிக்கை, இணையம், தொலைக்காட்சி ஆகியவையும் 'தேடலும்'

ஒரு சமூகம் பத்திரிக்கை படிப்பதில், சஞ்சிகைகள் படிப்பதில், இணையத்தை உபயோகிப்பதில் எவ்வளவு சிறத்தை காண்பிக்கிறார்கள் என்பதை பொருத்து அவர்கள் மனதில் 'தேடல்' என்பதற்கு எவ்வளவு முன்னுறிமை கொடுக்கிறார்கள் என்று கண்டு பிடித்து விடலாம். காரணம் 'தகவல் சேகரித்தல்' தான் தேடல் என்பதற்கான முதற் கட்ட நடவடிக்கையே.

அந்த வகையில் நம் இனத்தவரிடம் உள்ள பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை முதலில் பார்ப்போம். மலேசியாவில் வெவ்வேறு மொழி தினப் பத்திரிக்கைகளின் விற்பனை நிலையை சிறிது ஆராய்ந்தாலேயே, மற்ற இனங்களோடு ஒப்பிடும் போது தமிழர்களின் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் என்ன என்பது தெள்ளத் தெளிவாகி விடும்.

அரசாங்க கணக்கீடுகளின் படி மலேசியாவில் நாள் ஒன்றுக்கு எத்தனை தமிழ் பத்திரிக்கைகள் விற்பனை ஆகின்றன என்று நினைக்கிறீர்கள்? வெறும் 28,000 ல் இருந்து 33,000 பிரதிகள் தான் நமது மூன்று தமிழ் தினப் பத்திரிக்கைகளுக்கும் ஆன மொத்த அன்றாட விற்பனை.

அதே நேரத்தில் நம்மை விட நான்கு மடங்கு ஜனத்தொகையை மட்டுமே கூடுதலாக கொண்ட சீனர்கள் மத்தியில் 760,000 சீன மொழிப் பத்திரிக்கைகள் சராசரியாக அன்றாடம் விற்பனை ஆகின்றன. ஆங்கிலம், மலாய் மொழிப் பத்திரிக்கைகள் சராசரி 1,200,000 பிரதிகளுக்கு குறையாமல் விற்பனை ஆகின்றன.

இதன் அர்த்தம் என்ன? தழிழர்களில் பலர் ஆங்கில, மலாய் மொழி பத்திரிக்கைகளைப் படிக்கிறார்கள், அதனால் தமிழ் பத்திரிக்கைகள் குறைவாக விற்பனை ஆகின்றன என்று பொருள் கொள்ளலாமா ?

ஹா..ஹா..ஹா..ஹா !! அதெல்லாம் ஒரு டுபுக்கும் கிடையாது. தமிழர்களில் ஒரு 10 விழுக்காட்டினரும், சீனர்களில் ஒரு 20 விழுக்காட்டினரும் ஆங்கில / மலாய் பத்திரிக்கை படிப்பவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான். உண்மை என்ன வென்றால், நம் தமிழ் மக்களில் முக்கால் வாசிக்கும் மேல் பட்டவர்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கமே கிடையாது.

சரி இனி இணையத்தை நம் மக்கள் எத்தனை பேர் உபயோகிப்பார்கள் என்பதை பார்ப்போம் - அரசாங்க கணக்கீட்டின் படி மலேசியாவில் சராசரி நான்கு குடும்பங்களுள் ஒரு குடும்பம் இணைய தொடர்பு உள்ளவர்களாக உள்ளார்கள். இதில் தமிழ் குடும்பங்களின் இணைய பயனீடு எத்தனை விழுக்காடு என்பது எங்குமே துள்ளிதமாக தெரிவிக்க பட்வில்லை. ஆனால், என் சுய சிந்தனைப் படி தமிழர்களில் பத்து குடும்பங்களுள் ஒரு குடும்பத்தில் மட்டும் தான் இணைய தொடர்பு இருக்கும் என்பது என் கணிப்பு.

ஆக இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள கூடியது என்னவென்றால், மலேசியாவில் உள்ள நம் மறத் தமிழர்கள் அவர்களின் முப்பாட்டன்களைப் போல் இன்னமும் 'தேடல்' எனும் இயல்பு குறைந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

'
இவன் என்னடா நம் இனத்தை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான்' - "குறைசொல்லி குறைசொல்லி தலைமுறை பல கழித்தோம்; குறை களைந்தோமில்லை" என்று பாரதிதாசன் பாட்டை யாரும் பின்னூட்டமாக கொடுத்து எனக்கு நினைவுறுத்தும் முன், நம் இனத்தின் அடிப்படை தன்மையை தாங்கள் முறையாக புரிந்து கொள்வதற்கு உகந்தவாறு மற்றுமொரு முக்கிய விஷயத்தை தங்கள் முன் உதாரணமாக வைக்கிறேன்.

அதையும் படித்து விட்டு 'நாம் யார்? நமது தன்மை என்ன? நாம் எவ்வளவு பின்னடைவில் இருக்கிறோம், இன்றைய உலகில் பிறருக்கு ஈடுகொடுத்து வாழ்வதற்கு நாம் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? அங்கு நாம் செல்ல முடியாது நம்மை தடுப்பது மற்றவர்களா? விதியா? நம் சோம்பேரித்தனமா? அலட்ச்சியமா? அல்லது வெற்றிக்கான அம்சங்கள் நம்மிடைய குறைவாக உள்ளனவா? அப்படியானால் அவற்றை நாம் பெருவது எப்படி? என்று யோசித்து பாருங்கள். அதன் பிறகு நான் இதுவரை கூறி வந்தவை சரியா, தவராக என்பதை கூறுங்கள். ஓ. கே. ..யா ?!

நம் மக்கள் பத்திரிக்கை படிக்காதவர்களாகவும், இணையத்தை பயன் படுத்தாதவர்களாகவும் இருந்தாலும், விகிதாச்சாரப் படி மலேசிய இனங்களுள் 'அஸ்ட்ரோ' தொடர்பு வைத்துள்ளவர்களில் நாம் தான் 'நம்பர் ஒன்'.

சென்ற வருடம் அஸ்ட்ரோ தலைமை அதிகாரி ஸ்டார் பத்திரிக்கைக்கு கொடுத்த நேர்காணலின் படி மலேசியாவில் உள்ள மலாய் இல்லங்களுள் 37 விழுக்காட்டினரும், சீன இல்லங்களுள் 48 விழுக்காட்டினரும், இந்திய இல்லங்களுள் 68 விழுக்காட்டினரும் அஸ்ட்ரோ சந்தாதாரர்களாக இருக்கிறார்கள்.

இதன் அர்த்தம் என்ன? நம் முப்பாட்டன்கள் காலத்தில் கோவில் திருவிளாக்களை ஒட்டி நம் கேளிக்கைகளுக்காக நடத்தப் பட்ட 'கூத்துக்களையும்', நாட்டியங்களையும், கச்சேரிகளையும் பார்த்து கொண்டு காலத்தை கடத்தினோம், அதன் பிறகு நம் பாட்டன்கள் காலத்தில் எஸ்டேட் நிர்வாகம் நமக்காக திரையில் போட்டு காட்டிய சினிமா படங்களையும், திருவிளாக்களின் போது நடந்த புலி ஆட்டம், மயில் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை பார்த்து பொழுதை கடத்தினோம், இப்போது நம் காலத்தில் சாவகாசமாக சோபாவில் உட்கார்ந்தவாரே அஸ்ட்ரோவில் சீரியல்களையும், சினிமாவையும் பார்த்து கொண்டு காலத்தை கடத்துகிறோம். நம் பேரன் பேத்தி காலத்தில் அவர்கள் எப்படி காலத்தை கடத்த இருக்கிறார்களோ?! ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.


ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், இன்றைய மலேசிய சீனர்களின் பேரன், பேத்திகள் இப்போதுள்ள தலைமுறையை விட தங்களை முன்னேற்றி கொள்ளும் பொருட்டு 'தேடல்' என்பதில் இன்னும் ஆக்ககரமாக ஈடுபடுவார்கள் என்பதை மட்டும் அடித்து சொல்லலாம். காரணம், அவர்களின் வம்ச இயல்பு அப்படி.

தன்னை தலைவன் என்று கூறி கொள்பவன் எல்லோரும் தலைவனா ?

நாம் எவ்வளவு குட்டிகரணம் அடித்தாலும் 'ஒட்டுர மண் தான் நம் மீது ஒட்டும்'. நம்மில் பலரிடம் என்ன சொன்னாலும் விழுப்புணர்ச்சி ஏற்பட்டு அவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. சிலருக்கு யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. உலக நடைமுறையைப் பார்த்து, பார்த்து தாங்களாகவே தங்களை மாற்றிக் கொண்டு, வாழ்க்கையில் பீடு நடை போடுவதற்கு வழிமுறைகளை கண்டு பிடித்து விடுவார்கள்.

சரி, இனி இன்றைய மலேசிய அரசியல் சூழ்நிலையில் எங்கனம் ஒரு தலைவனை நாம் தேர்ந்தெடுப்பது என்பதை பார்ப்போம்.
இதுவரை இந்த நாட்டில் நமக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவம் என்ன? ம.இ.கா. எனும் ஒரு கட்சி, ஐ.பீ.எப். எனும் ஒரு கட்சி, கிராக்கான் எனும் ஒரு கட்சி, பி.பி.பி. எனும் ஒரு கட்சி, பீ.கே.ஆர். எனும் ஒரு கட்சி, டி.ஏ.பீ. எனும் ஒரு கட்சி, அது போக முத்துகருப்பன் ஆரம்பித்த கட்சி, பிறகு இந்திராவ் காரர்கள் ஆரம்பித்த மூன்று கட்சிகள்.

ஏன்ய்யா, ஜனத்தொகையில் வெறும் 7.4 விழுக்காடு இருக்கும் இந்தியர்களுக்கு எத்தனை கட்சிகள் அய்யா !! சரி, இத்தனை கட்சிகளும் நமக்காக என்ன வெட்டி முறித்தார்கள்? இது வரையிலும் ஒரு மண்ணும் இல்லை. இனியும் ஒரு மண்ணும் முறிக்கப் போவதும் இல்லை. ஏன் இப்படி கூறுகிறேன் என்று கேட்கிறீர்களா?

அரசியல்வாதிகள் நமக்கு முறையாக எதுவும் செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு நம் மீது சிறிது பயம் இருக்க வேண்டும். அப்படி பிறர் மனதில் பயத்தை ஏற்படுத்துவதற்கு நாம் முதலில் ஒரு புத்திசாலி இனமாகவும், கருத்து ஒருமித்த ஒரு இனமாகவும் இருக்க வேண்டும். நாம் புத்திசாலிகளா? ஒருமித்தவர்களா? ஏன்ய்யா !!!!

மலையாளிகளைக் கண்டால் தமிழர்களுக்கு ஆகாது, தமிழர்களைக் கண்டால் யாழ்பாணத்தார்களுக்கு ஆகாது, யாழ்பாணத்தாரை கண்டால் தெலுங்கர்களுக்கு ஆகாது, இவர்கள் யாருக்கும் வட இந்தியர்களுக்கு ஆகாது, வட இந்தியர்களுக்கு இவர்கள் யாரையுமே ஆகாது. இந்திய முஸ்லீம்கள் நாங்கள் இந்தியர்களே இல்லை என்கிறார்கள். இதற்கு நடுவில் உலகில் வேறு எந்த இனத்திடமும் இல்லாத சாதியம் எனும் ஒரு சாபம் ஒவ்வொரு இந்தியர் முதுகிலும் வாழ்நாள் குத்தகை எடுத்து, ட்டெண்டு போட்டு உட்கார்ந்து இருக்கிறது.

அம்னோவைப் பொருத்தவரை, இன்னும் ஒரு பத்து இந்தியக் கட்சிகள் ஆரம்பிக்க பட்டாலும் நல்லது தான். கட்சிக்கு 3 - 4 விழுக்காடு ஒட்டுக்களை வாங்கி கொண்டார்களேயானால், இந்தியர்களின் ஒட்டுக்கள் ஒரு மண்ணுக்கும் ஆகாமல் போய்விடும் அல்லவா !!


10 comments:

sivanes said...

வணக்கம் சார், நம்மவர்களின் தேடல் குறித்த தங்களின் கருத்துக்களின் உண்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது! விரைவில் உங்கள் அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம்.(தங்களின் இந்த‌ப் பதிவு f/book க்கில் தெரியப்படுத்தப்பட்டு இருக்கிறது, நம்மவர்கள் படித்து பயன்காண வேண்டிய பதிவு தங்களின் பதிவு!) வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

சாமான்யன் said...

வாருங்கள் சிவனேசு,

எனது இந்த பதிவை facebook ஏற்றியதற்கு மிக்க நன்றி.

மற்ற இனங்களுக்கு இணையாக செயல் படுவதற்கு நாம் கடக்க வேண்டிய தூரம், மிக மிக அதிகம். ஆனால், அந்த தூரத்தை நம்மால் அடுத்த சில தலைமுறைகளில் கூட கடக்க முடியுமா என்று கேட்டால், 'முடியாது' என்று தான் சொல்ல தோன்றுகிறது.

நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையைப் பாருங்கள். நாமும் கூலிகளாகத் தான் இந்த நாட்டிற்கு வந்தோம். சீனர்களும் கூலிகளாகத் தான் இங்கு வந்தார்கள். இன்று தமிழ் இனம் இங்கு நலிந்து, மெலிந்து, கேட்பாரற்ற ஒரு பரிதாபக் கூட்டமாக காட்சி அளிக்கிறோம்.

ஆனால் சீனர்களோ, பறந்து விரிந்து, சிறந்து, 'நாங்கள் உலகில் உள்ள எவருக்கும் சலைத்தவர்கள் அல்ல' என்று மார் தட்டும் விதத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் ரீதியாக, இன ரீதியாக, விஷமம் செய்யாது, யாரும் அவர்களுக்கு அப்பட்டமாக குழி தோண்டாது, அவர்களை தடுத்து, இழுத்து, நிறுத்தாமல் விட்டால் இந்த நாட்டு சீனர்களால் எந்த அளவு சாதனைகள் புரிய முடியும் என்பதற்கான சான்று மலேசியாவில் இருந்து பிரிந்து சென்று இன்று அவர்கள் சிங்கப்பூரை ஆட்சி புரியும் முறைதான்.

நாமும் அவர்களைப் போல்தானே இங்கு வந்தோம். நமக்கு மட்டும் ஏன் இந்த அவலம் ??? காரணம், நாம் அடிப்படையிலேயே சிறிது தரம் குன்றிய 'ஸ்டாக்' தான்.

நாமாக என்னெவென்று வேண்டுமானாலும் சவுண்டு விட்டு கொள்ளலாம் - "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி நாங்கள்", "கற்று கொடுத்தது தமிழினம், அதற்கு முறனாக பிறர் கற்று கொடுக்க விழைவது அறிவீனம்" என்று என்ன வேண்டுமானாலும் நாம் நமக்குள் பேசி கொள்ளலாம்.

"யோவ், அப்படி பெரிய பருப்பா உள்ள நீர், பிறகு எதற்காக அய்யா இப்படி எல்லாவற்றிலும், எல்லோரிடமும் தோற்று, அரைப் பிச்சைக்காரர் நிலையில் இருக்கிறீர்?" என்று பிற இனத்தவன் நினைப்பான், கேட்பான் அல்லவா? அவனுக்கு என்ன பதில் சொல்வது?

சிவனேசு, வாழ்க்கையில் உயர வேண்டும் என்று யார் விளைந்தாலும், முதலில் அவர் தன் நிலை அறிய வேண்டும். "உன்னையே நீ அறிவாய் ! எதையும், எதற்காக, ஏன், எப்படி என்று கேள்" - 2,500 வருடங்களுக்கு முன்பு சாக்ரட்டீஸ் சொன்னதாக நமக்கு சிவாஜி சொன்னது. இன்றைக்கும் பொருந்தும், என்றைக்கும் பொருந்தும்.

Tamilvanan said...

சிந்தனையை தூண்டி விடும் பதிவு.

சாமான்யன் said...

வாருங்கள் தமிழ்வாணன்,

நன்றி!

படிப்பவரின் சிந்தனையை தூண்டி விட வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன் எழுதப் படுவதுதான் இந்த 'உன்னையே நீ அறிவாய்' தொடர். சில நேரங்களில், பின்னூட்டம் எதுவும் வராத பொழுது, 'நாம் எழுதுவதை யாராவது உண்மையிலேயே படிக்கிறார்களா?' என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வந்துவிடும்.

தங்களைப் போன்று, சிவனேசுவைப் போன்று, சிவகங்கையை போன்று அடிக்கடி இங்கு வந்து எட்டி பார்த்து ஏதாவது சொல்லி விட்டுச் செல்வோரால்தான் "சரி தொடர்ந்து எழுதி இந்த தொடரை முடித்து விடுவோம். நாம் எழுதுவதில் ஏதோ சமாச்சாரம் இருப்பதால் தானே இத்தனை பேரும் நம் எழுத்தை தொடர்ந்து படித்து வருகிறார்கள்" என்று என்னை நானே உற்சாகப் படுத்தி கொள்கிறேன்.

shivkanggai said...

சாமான்யரே,
தங்கள் மனதில் நானும் இடம் பிடிக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே . 18 .நவம்பர் எப்போதுமே எனக்கு நிறைவு தரும் நாள் .

சாமான்யன் said...

சிவகங்கையாரே,

அடுத்த பதிவோடு நான் எனது தமிழ் ஊடக எழுத்துக்களை நிறுத்தி கொள்ள இருக்கிறேன். நான் விடைபெற்று செல்லுமுன் தங்களுக்கு ஒரு யோசனை:-

தாங்களும் ஒரு ஊடகத்தை ஆரம்பித்து தங்கள் மனதில் உள்ள எண்ணங்களுக்கு எழுத்து வடிவு கொடுக்கலாம். 'நம்மால் முடியுமா? நமக்கு இருக்கும் அனுபவம் போதுமா? என்கிற எண்ண ஓட்டங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள். உங்களால் நன்றாக எழுத முடியும். அத்தோடு உங்களுக்கு இருக்கும் வாழ்க்கை அனுபவங்களை வைத்து நீங்கள் எவ்வளவோ எழுதலாம். சமுதாயத்தை பற்றி எழுதுவது கஷ்டமாக தெரிந்தால், தங்களின் தனி மனித அனுபவங்களை மையமாக வைத்து எதாவது எழுதுங்கள்.

காயத்திரி said...

வணக்கம் ஐயா. உங்களுடைய இந்த சமுதாய முயற்சி பாராட்டவல்லது. இந்தியர்களுக்கு இத்தணை கட்சிகள் தேவையா? மேலும் சில விவரமான விபரங்களை வேண்டுகிறேன்.

சாமான்யன் said...

வாருங்கள் காயத்திரி,

நான் இந்த ஊடகத்தை முடித்து, மூடி மூன்று மாதங்கள் ஆகின்றன. திடீர் என்று உங்களிடமிருந்து ஒரு மறுமொழி. இங்கு நான் எழுதியவற்றை இன்னமும் புதிது புதிதானோர் வந்து வாசிக்கிறார்கள் என்பதை அறியும் போது மனதுக்கு சற்று இதமாகத் தான் இருக்கிறது.

இதற்கு மேல் நான் என்ன எழுதுவது காயத்திரி? இந்த தொடரில் நான் 25,000 த்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளை 18 பதிவுகளாக எழுதியுள்ளேன். அவை அனைத்துமே மலேசிய இந்திய சமுதாயத்தின் அவல நிலையை ஆராய்ந்து எழுதப் பட்டதுதான்.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு பின்னூட்டம் வழி கேள்வி எழுப்புங்கள், நான் அவசியம் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.

Bullaans said...

en thedalai ninaithu ennai melum merugetrya Iyya. nanri.
mudium enbathe moolamanthiram
en adutha thalaimurai ennaium minjum.

சாமான்யன் said...

வாருங்கள் புல்லான்ஸ்,

"என் அடுத்த தலைமுறை என்னையும் மிஞ்சும்" என்று கூறுவதற்கே இப்போதைய நிலையில் நம் தமிழ் சமூகத்தில் பலருக்கு துணிவு இருக்காது. தாங்கள் அதை ஆணி அடித்தாற்ப் போல் அசால்ட்டாக சொல்கிறீர்கள். மிகுந்த சந்தோஷம். நம்மால் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை மனதில் ஆழமாக ஏற்றிக் கொண்ட பத்தில் ஒரு தமிழரால் தான் தங்களைப் போல் பேச முடியும்.

வந்ததற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

Post a Comment