Wednesday, September 16, 2009

உன்னையே நீ அறிவாய் ! (வல்லவன்+ நல்லவன் = தலைவன்) - பாகம் 15


மலேசிய அரசியல்வாதிகள் அதுவும் மலாய் அரசியல்வாதிகள் பல இன சூழ்நிலைகளில் மேடையேறிப் பேசும் போது பலவற்றும் சொல்வார்கள் "நாங்கள் எல்லோருக்கும் முறையாக, சமமாகத் தான் வாய்ப்புகள் வழங்குகிறோம். இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனி இடம் உள்ளது. இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் பற்பல திட்டங்களை தீட்டியுள்ளது. இந்த செழிப்பான நாட்டில் நாம் யாவரும் சகோதரர்கள், சம பங்குதாரர்கள்" என்று ஏதேதோ கூறி விட்டு போவார்கள்.

ஆனால் தரை அளவில் நடந்தேறும் உண்மை நிலை என்ன? அத்தனை அரசாங்க நிர்வாகத் துறைகளிலும் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் மலாய்காரர்களாக உள்ளார்கள். இதனால் அரசாங்கம் சம்மந்தபட்ட அத்தனை நிகழ்வுகளிலும், திட்டங்களிலும், செலவுகளிலும், வாய்ப்புக்களிலும் அம்னோ அரசாங்கத்தின் தாரக மந்திரமான "மலாய்காரர்களின் முன்னேற்றம்" என்கிற ஒற்றை குறிக்கோள் மட்டும்தான் நடைமுறையில் செயலாக்கம் கண்டு வருகிறது.

அது போக மலாய்காரர்கள் தங்களுக்குள்ளே குழுமும் எல்லா இடங்களிலும், கூட்டங்களிலும் "நம் இனத்தின் துரித மேம்பாட்டிற்கான வழிகள் என்ன?", "மலாய்காரர்களின் முன்னுறிமையை எப்படி காலங் காலத்திற்கும் நிலை நாட்டுவது?", "மலாய் இன ஆழுமைக்கு பிறகு தான் பிற எல்லாம்" என்பதை தான் திரும்ப திரும்ப பேசுகிறார்கள், ஆராய்கிறார்கள். அப்படி எந்த மலாய்கார தலைவராவது 'மலாய் இன மேம்பாட்டு குறிக்கோளை' முதன்மையாக தம் பேச்சின் சாராம்சமாக அமைத்து அடித்து, மேசையை குத்தி, உறக்க கூவி அப்பட்டமாக சூழுரைக்காது விட்டால், அவரால் அம்னோவில் தன் கட்சி பதவியை தற்காத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இதனால், பிரதமர் பொருப்பில் உள்ள மலாய் தலைவர் வரை "UNTUK BANGSA, AGAMA DAN NEGARA" என்று பல இன, பல மத மக்கள் வாழும் நாட்டில் 'இனத்தையும், மதத்தையும்' முதலில் குறிப்பிட்டு விட்டு, எல்லா குடிமக்களுக்கும் சம உறிமை உள்ள, சம ஈடுபாடு உள்ள, ஒரு மக்களாக ஐக்கியபடக் கூடிய 'நாடு' என்கிற அம்சத்தை கடைசியில் வைத்து தான் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பின் போதே பேசுகிறார்.


ஹிந்திராவ்

இத்தகைய அரசியல் சூழ்நிலையில், ஒரு அப்பட்டமான் இஸ்லாமிய நாட்டில், ஹிந்திராவ் காரர்கள் 'ஹிந்து ஆக்ஸன் ப்வோர்ஸ்' என்று தங்கள் சமூக அமைப்பிற்கு பிற ஒரு சமயத்தின் பெயரை சூட்டிக் கொண்டது அடி முட்டாள் தனங்களில் எல்லாம் பெரியதொரு முட்டாள்தனம்.

இந்த 'ஹிந்து' எனும் வார்த்தையை அவர்கள் தம் அமைப்பின் பெயரில் சேர்த்த அன்றே நமது ஹிந்திராவ் தலைவர்கள் பாதி தோற்று விட்டனர். அதன் பிறகு, உதயகுமார் / வேதமூர்த்தி இருவரும் என்று தங்கள் சமூக அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்தார்களோ அன்று ஹிந்திராவ் எனும் இயக்கம் முழுவதுமாக தோற்றுவிட்டது.

'சமுதாய மேம்பாடு' என்பது சில வினாடிகளில் ஓடி முடிக்கும் 100 மீட்டர் விரைவோட்டம் அல்ல. அது வெகு காலத்திற்கு, வெகு தூரத்திற்கு தொடர்ந்து நாம் ஒடிக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு 'தொடர் மராத்தன் ஓட்டம்'.

அதை வெற்றிகரமாக ஓடுவதற்கு நமக்கு சுய தெம்பும், ஆற்றலும் மட்டும் போதாது. அவற்றோடு, மலேசியாவில் உள்ள பிற இன மக்களுடைய நட்புறவும், புரிந்துணர்வும் நமக்கு மிக, மிகத் தேவை. அந்த புரிந்துணர்வை நாம் மற்ற இனத்தவரின் சட்டையை பிடித்து, அடிதடியில் இறங்கி எல்லாம் பெற முடியாது.

அதை நாம் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, பேசி, பழகி, உணர்த்தி, கருத்தொருமித்து, அதன் பிறகு தான் பெற முடியும். அதற்கு அடிப்படையில் நம் சமூக / அரசியல் இயக்கங்களில் சம்மந்த பட்ட தலைவர்கள் உணர்ச்சி என்பதை ஒதுக்கி வைத்து விட்டு காரியத்தில் குறியாக உள்ள புத்திசாலிகளாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் நம் ஹிந்திராவ் தலைவர்கள் புத்திசாலிகளா?? ஒரே குறிக்கோளுக்காக ஐந்து பேர் ISA சட்டத்தின் கீழ் சிறை சென்றனர். ஆனால், இன்று அவர்களுக்கிடையே மூன்று கட்சிகள் உருவாகியுள்ளன. இது புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடா?

சம்மந்தப் பட்ட ஹிந்திராவ் தலைவர்கள் இப்படியெல்லாம் நிகழ்வுகள் நடக்கும் என்பதை ஆரம்பத்திலேயே அறியவில்லையா? எத்தனையோ பிற இன அரசியல் ஆய்வாளர்கள் இப்படி தான் சம்பவங்கள் ஹிந்திராவில் அடுத்தெடுத்து நடந்தேறும் என்பதை வெகு நாட்களுக்கு முன்பே கூறியிருந்தார்களே! அவர்கள் சிந்தனையில் மட்டும் நாளை நடகக இருப்பவை என்ன என்பது எப்படி முன்கூட்டியே தெரிந்தது?

இனி போகப் போக என்ன நடக்கவிருக்கிறது என்று பாருங்கள். ஹிந்திராவ் தலைவர்களுக்கு தனி மனித அளவில் வேண்டுமானால் எதாவது முன்னேற்றம் ஏற்படலாமே ஒழிய, இந்திய சமுதாயத்திற்கு ஹிந்திராவ் சம்மந்தப் பட்ட கட்சியினரால் இனி எதுவும் ஆகப் போவது கிடையாது என்பது என் கருத்து


தலைவனுக்கு தேவை: தூரநோக்கும் இயல்பு / புத்திசாலித்தனம்

"பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போடத் தெரிந்தவன் மட்டும்தான் உண்மையான தலைவன் ஆக முடியும்" என்பது என்னுடைய ஆழமான கருத்தும் கூட. அதுவும் பத்திரிக்கைகளைக் கூட படிக்காமல், அஸ்ட்ரோவில் சீரியலையும், சினிமாவையும் வெட்டியாக பார்த்து கொண்டு வீணாக பொழுதைக் கழிக்கும் நம்மைப் போன்ற ஒரு அடி முட்டாள் இனத்திற்கு தலைவனாக விளைகிறவர், ஆழமாக சிந்திக்க கூடிய, தூர நோக்கு இயல்புடைய அட்டகாசமான சிந்தனைவாதியாகவும், புத்திசாலியாகவும் இருக்க வேண்டும்.

தன் அளவில், தன் கட்சியில், அரசாங்கத்தில், தன் சுய முன்னேற்றத்தில், தன் நிலையை ஸ்தர படுத்திக் கொள்வதில், அவர் ஒரு மிக பெரிய திறமைசாலியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தன் ஒட்டு மொத்த இனத்தையும் விடியலை நோக்கி எப்படி பயணிக்க வைப்பது என்பதற்கான 'தேடலுக்கு' தெளிவான விடைகளையும், வழிவகைகளையும் கோடிட்டு காண்பிக்க கூடிய அறிவாளியாகவும் இருக்க வேண்டும்.

அப்படிபட்ட ஒரு திறமைசாலி நம்மிடையே தலைவராக தோன்றினால் ஒலிய, நம் தமிழ் இனத்திற்க்கு இந்த நாட்டில் விடியல் என்பது நாம் தலைகீழாக நின்றாலும் ஏற்படாது என்பது என்னுடைய ஆழமான கருத்து.

"அப்படியென்றால் ஒரு அதி புத்திசாலி நமக்கு தலைவராக வந்தால்நம் இனத்திற்கு விடிவு காலம் உடனே வந்துவிடுமா?" என்றால், அதுவும் இல்லை! இன்று,இப்போது, உடனே என்கிற அளவில் எந்த சமூகத்திலும், எந்த மாறுதலும் இதுவரை வந்ததும் கிடையாது, இனி வரப்போவதும் கிடையாது.

ஒரு பிற்பட்ட சமூகம் விருத்தி அடையும் நிலைக்கு வரும் முன், அந்த சமூகத்தின் சராசரி மனிதனிடம் சில அடிப்படை மாறுதல்களும், விழிபுணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.

அதனால் எவ்வளவு அபாரமான மனிதர் நம்மிடையே சமூக தலைவராக வந்தாலும் உண்மையான சமூக மாறுதல் என்பது நம் இனத்திடம் வந்து சேர்வதற்கு வெகு காலம் ஆகும். ஆனால், தூர நோக்கு இயல்புடைய ஒரு நல்ல மனிதர் நமக்கு தலைவராக அமைந்தால், நம் இனத்திடம் தொடர்ந்து நடந்து வரும் 'சமூக பின்னடைவு' என்பது அடுத்த ஒரு 10 வருடங்களுக்குள் நிச்சயமாக பேரளவுக்கு தடுத்து நிறுத்தப் படலாம்.

இன முன்னேற்றம் என்பது, நம்மிடையே பரவலாக உள்ள சமூக பின்னடைவு சீர் செய்ய பட்டதன் பிறகு நடைபெற வேண்டிய ஒரு அடுத்த கட்ட நிகழ்வு. அதற்கு, விஷேச யுக்திகள் மூலமாகவும், திட்டங்கள் மூலமாகவும், அரசாங்க வழிப் பயிற்ச்சிகளின் மூலமாகவும் தனி மனித அளவில் நம்மிடையே பல மாற்றங்களை நமக்கு சமூக தலைவராக தேர்ந்தெடுக்க படுபவர் முதலில் ஏற்படுத்த வேண்டும்.

தலைவனுக்கு தேவை: அடிப்படை நேர்மை

மலேசிய சீனர் சங்கத்தில் அறு, ஏழு வருடங்களுக்கு முன்பு 'லிங் லியொங் சிக்' என்று ஒரு கட்சி தலைவர் இருந்தார். அவருக்கு 'துன்' பட்டம் வழங்கப் பட்டு, இப்போது கட்சிக்கு ஆலோசனைகள் வழங்கும் மூத்த தலைவராக இருக்கிறார். அவர் சீனர்கள் இந்த நாட்டில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசும் போது அடிக்கடி ஒரு இரண்டு வரி அறிவுரை ஒன்றை கொடுப்பார்.

அது என்னவென்றால் "நாம் இந்த நாட்டில் ஒரு சிறுபாண்மையினர். சிறுபாண்மையினர், சிறுபாண்மையினரைப் போலத்தான் நடந்து கொள்ள வேண்டும். ஓவராக சவுண்டு விடக் கூடாது" என்பது.

பல வருடங்களுக்கு முன்பு இதே துன் லிங் லியோங் சிக்கிடம் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த லிம் கிட் சியாங், நாடாளுமன்றத்தில் "நீங்கள் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மருத்துவராக இருந்து, பிறகு அரசியலுக்கு வந்தீர்கள். ஆனால், 26 வயதில் உங்கள் மகன் பெயரிலும், அவர் சம்மந்த பட்ட வரையிலும், மலேசிய பங்கு சந்தையில் 1,000 மில்லியன் ரிங்கிட்டை தாண்டி பங்குச் சொத்து இருக்கிறதே, அது எப்படி?" என்று கேட்ட கேள்விக்கு, அந்த சீனப் பெருந்தலைவர் கூறிய பதில் "சிறு வயதானாலும் என் மகன் மிக, மிக கெட்டிகாரர். அவர் திறமையை கொண்டு அவன் சம்பாதித்து சேர்த்தது அவ்வளவும்" என்றார்.

அவர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதெல்லாம் வேறு விஷயம். சீனர்கள் தம் தலைவர்கள் இந்த மாதிரி கூறும் காரணங்களை ஏற்று கொள்கிறார்களோ, இல்லையோ .... ஆனால், நம் இனத்தில் நம் தலைவர்களில் ஒருவர் இப்படி கூறினால், அதை யாரும் நம்புவார்கள் என்று நினைக்கிறார்களா?

உண்மையில் அந்த சொத்து எப்படி சேர்க்க பட்டிருக்கும் என்பதை சாலை ஓரத்தில் வடை சுட்டு விற்க்கும் பாட்டியுடன் நின்று, பொட்டலம் போட்டு கொடுக்கும் பொக்கை வாய் தாத்தாவை கேட்டாலும் "அட ஏ..ம்..ப்பா ! வக்..*&** ... **%*# ...' என்று கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்த பிறகு, அந்த பணம் எப்படி சம்பாதிக்கப் பட்டிருக்கும் என்பதை விளாவாரியாக விளக்கி சொல்வார்.

இப்படி தன்னிடம் இருக்கும் தனம் தனக்கு எங்கிருந்து வந்தது என்பதை முறையாக விவரித்து கூற இயலாத நிலையில் ஒரு தலைவன் இருந்தால், அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி பருப்பாக இருந்தாலும் இந்த நாட்டு சூழ்நிலையில் அவரால் தன் இனத்திற்கென்று பெரிதாக ஒன்றும் வெட்டி முறிக்க முடியாது.

நன்றாக யோசித்து பாருங்கள். இப்படி பட்டவர் தன் கழுத்தில் தானே ஒரு சுருக்கு கயிற்றை மாட்டி கொண்டு, கயிற்றின் மறு நுனியை பிற இனத்தவரிடம் கொடுக்கும் ஒரு அரை வேக்காட்டு சுயநலவாதி. இப்படி நடந்து கொள்பவர் நாளை எங்கனம் தன் இனத்திற்கு என்று இந்த நாட்டு அரசியல் சூழ்நிலையில் சவுண்டு விடுவார்?

ஏதோ வெளிப் பாவனைக்கு வேண்டுமானால் அவரால் அவ்வப்போது ஏதாவது அறிக்கை விட முடியுமே அல்லாது, தன் இனத்திற்கென்று ஒன்றும் பெரிதாக அவரால் எந்த காலத்திலும் சாதிக்க முடியாது.

நம்ம ஆளு மீசையை முறுககி, கட்ட பொம்மன் வசனம் பேசி "சென்று வருகிறேன். வென்று வருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு, பிற இன பெருந்தலைவரை காண 'டஸ்ஸ்ஸ்ஸ்' என்று காரில் கிளம்பிச் செல்லுவார். அங்கு போனால் நம்ம ஆளை நன்கு அறிந்த பிற இன பெருந்தலைவர், இவர் வண்டவாளங்களை குறித்த பற்பல 'பைல்களை' கையில் தயாராக வைத்து கொண்டு இருப்பார்.

அப்புறம் என்ன, 'ட்ஸ்ஸ்ஸ்ஸ்' என்று கிளம்பிய நம்ம ஆளுக்கு, பிற இன பெருந்தலைவர் அவர் முன் தூக்கி போட்ட 'பைல்களை' பார்த்த உடன், 'புஸ்ஸ்ஸ்ஸ்' என்று காற்றை புடுங்கி விட்ட நிலை ஏற்பட்டு விடும்.

இருந்தாலும், வெருங்கையை வீசிக் கொண்டு வந்தால், வெளியில் இமேஜ் கெட்டு விடும் என்பதற்காக "நான் பெருந்தலைவரிடம் பேசி விட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு விட்டார். இப்போதைக்கு நமக்காக உடனே மூன்று மில்லியன் ரிங்கிட் ஒதுக்கி உள்ளார்" என்று ஏதோ பெரும் வெற்றிச் சாதனை புரிந்து விட்டது போல் பாவனை செய்வார்.

நாம் தான் இழிச்சவாய் இனமாயிற்றே! "என்னடா முன்னூறு மில்லியன் பெற்று வருவார் என்று நினைத்திருந்தோம், இவர் மூன்று மில்லியன் என்கிறாரே?" என்றெல்லாம் நமக்கு யோசிக்க தோன்றாது. நம்ம புத்திக்கு "அரசி சீரியல்ல இன்னிக்கு என்ன நடக்கும்?", "இந்த தீபாவளிக்கு RTM ல் என்ன சினிமா படம் போடுவான்?" என்கிற அளவில் தான் புத்தி வேலை செய்யும்.

பிறகு என்ன? நம்ம ஆளுக்கு 'நேக்கா, டேக்கா' கொடுத்த பிற இன பெருந்தலைவர் ஜெயித்தவராவார், மூன்று மில்லியனாவது வாங்கி வந்த நம்ம ஆளும் ஜெயித்தவராவார், தலையில் இடியே விழுந்தாலும் அசராது சீரியல் பார்க்கும் நாமும் ஜெயிக்காவிட்டாலும், தோத்தவர்கள் ஆக மாட்டோம் (கிடைக்கும் என்று நினைத்த ஒன்று கிடைக்காமல் போனால்தானே தோற்றவர்கள் ஆவோம். நாம் தான் எதுவுமே நினைப்பது கிடையாதே). பிறகு யார்தான் தோற்பது என்கிறீர்களா?

வேறு யாரு? தம் முப்பாட்டன்களைப் போலவே, அவர்கள் காலத்தில் அங்கலாய்த்து தட்டு தடுமாறப் போகிற நம் இனத்தின் வருங்காலத் தலைமுறைதான் தோற்பவர்கள்!

இப்போது சொல்லுங்கள், தன்னிடம் உள்ள பணத்திற்கு முறையாக கணக்கு சொல்ல முடியாதவர்களை எல்லாம் நாம் தலைவராக ஏற்று கொள்ள முடியுமா? ஏற்றுக் கொள்ளலாமா?




Friday, September 11, 2009

உன்னையே நீ அறிவாய் ! ('தேடலை' தொலைத்த சாதியம்) - பாகம் 14


தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் பொருள் இருக்கும்

சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும், அடிப்படை வாழ்க்கை அனுகுமுறையில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. சீனர்கள் தங்கள் வாழ்க்கை தம் கையில் தான் உள்ளது, தம் மேம்பாடு தம் சுய உழைப்பை பொருத்தது என்று ஆணித்தரமாக நம்புபவர்கள்.

ஆனால், தமிழர்களோ 'விதியைப் பொருத்து தான் வாழ்க்கை' என்ற ஆழமான எண்ணத்தை உடையவர்கள். இப்படி தமிழர்களிடையே பிற்போக்காக எண்ண ஓட்டம் அமைந்ததற்கு இரண்டு முக்கிய சரித்திர பூர்வ காரணங்கள் உள்ளன.

ஒன்று - காலங்காலமாக தமிழர்களிடையே மத வழிபாட்டின் வழி ஆழமாக வேர் ஊன்றிவிட்ட "எல்லாம் அவன் செயல்" என்று எடுத்தற்கெல்லாம் ஆண்டவனை / விதியை சுட்டி காட்டும் அடிப்படை சமய இயல்பு.

இரண்டு - பண்டைய கால இந்திய சமூகவியலில் ஒவ்வொரு மனிதனுக்கும் "இது, இது தான் உன் பொருப்பு. இது, இதைச் சுற்றித் தான் உன் நிலைப்பாடு, வாழ்க்கை எல்லாம் உள்ளது. இதைத் தாண்டி உனக்கு பிற எந்த சமூக ஈடுபாடும் கிடையாது" என்று சாதியத்தை வைத்து வரையருக்கப் பட்ட சமூக நிலை.

ஒரு சலவைத் தொழிலாளியின் மகன் சலவைத் தொழில் மட்டுமே செய்ய முடியும். ஒரு குயவன் மகன் குயவனாக மட்டுமே இருக்க முடியும், ஒரு சிகை அலங்காரரின் மகன் அதே குலத் தொழிலைத் தான் தொடர முடியும், ஒரு போர் வீரனின் மகனும் போர் வீரனாக தான் இருக்க வேண்டும் என்கிற சமூக நிலைப்பாடு ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மிடையே இருந்ததால், நம் பாட்டன் பூட்டன்களில் பெரும்பாலோர் வாழ்க்கையில் எந்த 'தேடலும்' இல்லாமலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடிந்து விட்டிருந்தனர்.

தன் நிலையை உயர்த்தி கொள்வதற்கான, அல்லது மாற்றிக் கொள்வதற்கான அடிப்படை 'வாய்ப்பு' என்பது ஒன்று இருப்பதாக ஒருவன் தன் அளவில் உணர்ந்தால் தானே, தன்னை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனும் 'தேடல் உணர்வு அவன் மனதில் எழும்பும் !! அப்படி ஒரு வாய்ப்பே இல்லா பட்ச்சத்தில், அவன் என்னத்தை 'தேடி' என்ன ஆக போகிறது !!!

"
என்னய்யா உளறுகிறீர்கள், நீங்கள் கூறும் இந்த நிலை சில நூறு வருடங்களுக்கு முன்பே நம் இனத்தவரிடையே மாறிவிட்டது. இன்றைய நிலையில் சீனர்களைப் போல் தமிழர்கள் இடையேயும் 'தேடல்' என்பது பேரளவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது" என்று கூறுகிறீர்களா? பொடலங்காய் !!! நம்மில் பாதி பேருக்கு மேல் 'தேடல்'' என்பதற்கான அர்த்தம் கூட தெரியாதவர்கள் தான்.

(
இதை தங்களுக்கு தெளிவு படுத்த கீழே சில பாராக்கள் தாண்டி பத்திரிக்கை படித்தல் குறித்தும், அஸ்ட்ரோ பார்த்தல் குறித்தும் சில குறிப்புகளை கொடுத்துள்ளேன். அவற்றை படித்து விட்டு சீனர்களுக்கு ஒப்ப தமிழர்களிடம் 'தேடல்' எனும் இயல்பு பரவலாக உள்ளதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)

என் சீன நண்பர்களோடு நான் சந்தித்து அலாவும் போதெல்லாம், அவர்கள் சிந்தனையில், பேச்சில் தங்கள் நிலையை மேம்படுத்தி கொள்ளூம் பொருட்டு, ஒரு 'தேடுதல்' கோடு எப்பவும் ஓடிக் கொண்டே இருக்கும். "புதிதாக ஒரு சாப்பிங் மால் வந்திருக்கிறதே பார்த்தாயா? அங்கு மூன்றாவது மாடியில் ஒரு உணவருந்தும் பகுதி திறக்க உள்ளார்கள். அதில் ஒரு ஸ்டாலின் வாடகை மூவாயிரமாம், அங்கு ஒரு பீசா ஸ்டாலைத் திறந்தால் லாபகரமாக ஓடும் என்று நினைக்கிறாயா?", "நான் வசிக்கும் இடத்தில், தங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் சிலர் தினமும் காலை ஏழு மணிக்கு குழுமி ஒன்றாக உடற்பயிற்சி செய்கிறார்கள். நானும் அதில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நீயும் வருகிறாயா?", "எனக்கு கணினியில் பவர்பாயிண்ட் எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. உனக்குதான் அது நன்றாக தெரியுமே, ஒரு இரண்டு மணி நேரம் ஒதுக்கி எனக்கு அதை சொல்லித் தருகிறாயா?", இப்படித்தான் சீனர்கள் ஒன்றாக குழுமும் போது தங்களுக்குள்ளே பேசிக் கொள்வார்கள்.

தமிழர்கள் ஒன்றாக குழுமும் போது குடும்ப விஷயங்களை பேசுவோம், அரசியலைப் பேசுவோம், சினிமாவைப் பற்றி பேசுவோம், கோவில் திருவிழாக்களைப் பற்றி பேசுவோம், அவன் இதைச் சொன்னான் இவன் அதைச் சொன்னான் என்று பேசுவோம். அனால், நாம் பேசும் எந்த பேச்சிலும் சீனர்களைப் போன்று மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான 'தேடல்' என்பது பெரும்பாலும் இருக்காது.

வாயளவில் நாம் "நம் வாழ்க்கை நம் கையில்" என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டாலும், அந்த கூற்றை நாம் ஆணித்தரமாக நம் மனதில் ஏற்றிக் கொள்வதில்லை. காரணம், காலங்காலமாக நாம் மதியை விட விதியைத் தான் அதிகம் நம்பி வந்துள்ளோம்.

சரி, இனி நான் மேற்கூறிய பத்திரிக்கை / அஸ்ட்ரோ குறிப்புக்களுக்கு வருவோம். இந்த நாட்டு ஜனத்தொகையில் இந்தியர்கள் 7.4 விழுக்காடு இருக்கிறோம். அதில் தமிழர்களின் விகிதாச்சாரம் ஒரு 6.0 விழுக்காடு இருக்கும். இதே போல் மொத்த ஜனத்தொகையில் சீனர்கள் 23.5 விழுக்காடும், பூமிபுத்ராக்கள் 65 விழுக்காடும் இருக்கிறார்கள். சரியா !!


தேடல் என்பதன் பொருள்

சரி, இப்போது 'தேடல்' என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
தேடல் என்பதை 'அறிய அல்லது, அடைய முயற்ச்சித்தல்' என்று கூறலாம். ஒரு மனிதன் எந்த ஒரு துறையிலும் தனது இன்றைய நிலையை மாற்றிக் கொள்ள விரும்பினால், விளைந்தால், அதற்காக அவன் எடுக்க கூடிய முதல் முயற்ச்சி அவன் விரும்பும் மாற்றத்தை எங்கனம் செயல் படுத்தலாம் என்று அறிந்து கொள்வதற்காக அவன் உள்ளும் புறமும் கேட்கும் கேள்விகளும், எடுக்கும் முயற்ச்சிகளும் தான். அதை தான் நான் 'தேடல்' என்று பொருள் கொள்கிறேன்.

சரி, நாம் இளகுவில் அடையாளம் கண்டுகொள்வதற்கு இந்த 'தேடல்' என்பதற்கு எதுவும் குறியீடு உள்ளதா? அதன் முக வெளிப்பாடு எப்படி இருக்கும்? ஒரு சமூகம் 'தேடல்' என்பதன் தன்மையில் ஆலமாக ஈடுபட்டிருக்கிறது என்பதை நாம் எங்கனம் அடையாளம் கண்டு கொள்வது? என்பன போன்ற கேள்விகளுக்கு என் பதில் இதுதான்.


பத்திரிக்கை, இணையம், தொலைக்காட்சி ஆகியவையும் 'தேடலும்'

ஒரு சமூகம் பத்திரிக்கை படிப்பதில், சஞ்சிகைகள் படிப்பதில், இணையத்தை உபயோகிப்பதில் எவ்வளவு சிறத்தை காண்பிக்கிறார்கள் என்பதை பொருத்து அவர்கள் மனதில் 'தேடல்' என்பதற்கு எவ்வளவு முன்னுறிமை கொடுக்கிறார்கள் என்று கண்டு பிடித்து விடலாம். காரணம் 'தகவல் சேகரித்தல்' தான் தேடல் என்பதற்கான முதற் கட்ட நடவடிக்கையே.

அந்த வகையில் நம் இனத்தவரிடம் உள்ள பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை முதலில் பார்ப்போம். மலேசியாவில் வெவ்வேறு மொழி தினப் பத்திரிக்கைகளின் விற்பனை நிலையை சிறிது ஆராய்ந்தாலேயே, மற்ற இனங்களோடு ஒப்பிடும் போது தமிழர்களின் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் என்ன என்பது தெள்ளத் தெளிவாகி விடும்.

அரசாங்க கணக்கீடுகளின் படி மலேசியாவில் நாள் ஒன்றுக்கு எத்தனை தமிழ் பத்திரிக்கைகள் விற்பனை ஆகின்றன என்று நினைக்கிறீர்கள்? வெறும் 28,000 ல் இருந்து 33,000 பிரதிகள் தான் நமது மூன்று தமிழ் தினப் பத்திரிக்கைகளுக்கும் ஆன மொத்த அன்றாட விற்பனை.

அதே நேரத்தில் நம்மை விட நான்கு மடங்கு ஜனத்தொகையை மட்டுமே கூடுதலாக கொண்ட சீனர்கள் மத்தியில் 760,000 சீன மொழிப் பத்திரிக்கைகள் சராசரியாக அன்றாடம் விற்பனை ஆகின்றன. ஆங்கிலம், மலாய் மொழிப் பத்திரிக்கைகள் சராசரி 1,200,000 பிரதிகளுக்கு குறையாமல் விற்பனை ஆகின்றன.

இதன் அர்த்தம் என்ன? தழிழர்களில் பலர் ஆங்கில, மலாய் மொழி பத்திரிக்கைகளைப் படிக்கிறார்கள், அதனால் தமிழ் பத்திரிக்கைகள் குறைவாக விற்பனை ஆகின்றன என்று பொருள் கொள்ளலாமா ?

ஹா..ஹா..ஹா..ஹா !! அதெல்லாம் ஒரு டுபுக்கும் கிடையாது. தமிழர்களில் ஒரு 10 விழுக்காட்டினரும், சீனர்களில் ஒரு 20 விழுக்காட்டினரும் ஆங்கில / மலாய் பத்திரிக்கை படிப்பவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான். உண்மை என்ன வென்றால், நம் தமிழ் மக்களில் முக்கால் வாசிக்கும் மேல் பட்டவர்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கமே கிடையாது.

சரி இனி இணையத்தை நம் மக்கள் எத்தனை பேர் உபயோகிப்பார்கள் என்பதை பார்ப்போம் - அரசாங்க கணக்கீட்டின் படி மலேசியாவில் சராசரி நான்கு குடும்பங்களுள் ஒரு குடும்பம் இணைய தொடர்பு உள்ளவர்களாக உள்ளார்கள். இதில் தமிழ் குடும்பங்களின் இணைய பயனீடு எத்தனை விழுக்காடு என்பது எங்குமே துள்ளிதமாக தெரிவிக்க பட்வில்லை. ஆனால், என் சுய சிந்தனைப் படி தமிழர்களில் பத்து குடும்பங்களுள் ஒரு குடும்பத்தில் மட்டும் தான் இணைய தொடர்பு இருக்கும் என்பது என் கணிப்பு.

ஆக இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள கூடியது என்னவென்றால், மலேசியாவில் உள்ள நம் மறத் தமிழர்கள் அவர்களின் முப்பாட்டன்களைப் போல் இன்னமும் 'தேடல்' எனும் இயல்பு குறைந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

'
இவன் என்னடா நம் இனத்தை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான்' - "குறைசொல்லி குறைசொல்லி தலைமுறை பல கழித்தோம்; குறை களைந்தோமில்லை" என்று பாரதிதாசன் பாட்டை யாரும் பின்னூட்டமாக கொடுத்து எனக்கு நினைவுறுத்தும் முன், நம் இனத்தின் அடிப்படை தன்மையை தாங்கள் முறையாக புரிந்து கொள்வதற்கு உகந்தவாறு மற்றுமொரு முக்கிய விஷயத்தை தங்கள் முன் உதாரணமாக வைக்கிறேன்.

அதையும் படித்து விட்டு 'நாம் யார்? நமது தன்மை என்ன? நாம் எவ்வளவு பின்னடைவில் இருக்கிறோம், இன்றைய உலகில் பிறருக்கு ஈடுகொடுத்து வாழ்வதற்கு நாம் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? அங்கு நாம் செல்ல முடியாது நம்மை தடுப்பது மற்றவர்களா? விதியா? நம் சோம்பேரித்தனமா? அலட்ச்சியமா? அல்லது வெற்றிக்கான அம்சங்கள் நம்மிடைய குறைவாக உள்ளனவா? அப்படியானால் அவற்றை நாம் பெருவது எப்படி? என்று யோசித்து பாருங்கள். அதன் பிறகு நான் இதுவரை கூறி வந்தவை சரியா, தவராக என்பதை கூறுங்கள். ஓ. கே. ..யா ?!

நம் மக்கள் பத்திரிக்கை படிக்காதவர்களாகவும், இணையத்தை பயன் படுத்தாதவர்களாகவும் இருந்தாலும், விகிதாச்சாரப் படி மலேசிய இனங்களுள் 'அஸ்ட்ரோ' தொடர்பு வைத்துள்ளவர்களில் நாம் தான் 'நம்பர் ஒன்'.

சென்ற வருடம் அஸ்ட்ரோ தலைமை அதிகாரி ஸ்டார் பத்திரிக்கைக்கு கொடுத்த நேர்காணலின் படி மலேசியாவில் உள்ள மலாய் இல்லங்களுள் 37 விழுக்காட்டினரும், சீன இல்லங்களுள் 48 விழுக்காட்டினரும், இந்திய இல்லங்களுள் 68 விழுக்காட்டினரும் அஸ்ட்ரோ சந்தாதாரர்களாக இருக்கிறார்கள்.

இதன் அர்த்தம் என்ன? நம் முப்பாட்டன்கள் காலத்தில் கோவில் திருவிளாக்களை ஒட்டி நம் கேளிக்கைகளுக்காக நடத்தப் பட்ட 'கூத்துக்களையும்', நாட்டியங்களையும், கச்சேரிகளையும் பார்த்து கொண்டு காலத்தை கடத்தினோம், அதன் பிறகு நம் பாட்டன்கள் காலத்தில் எஸ்டேட் நிர்வாகம் நமக்காக திரையில் போட்டு காட்டிய சினிமா படங்களையும், திருவிளாக்களின் போது நடந்த புலி ஆட்டம், மயில் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை பார்த்து பொழுதை கடத்தினோம், இப்போது நம் காலத்தில் சாவகாசமாக சோபாவில் உட்கார்ந்தவாரே அஸ்ட்ரோவில் சீரியல்களையும், சினிமாவையும் பார்த்து கொண்டு காலத்தை கடத்துகிறோம். நம் பேரன் பேத்தி காலத்தில் அவர்கள் எப்படி காலத்தை கடத்த இருக்கிறார்களோ?! ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.


ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், இன்றைய மலேசிய சீனர்களின் பேரன், பேத்திகள் இப்போதுள்ள தலைமுறையை விட தங்களை முன்னேற்றி கொள்ளும் பொருட்டு 'தேடல்' என்பதில் இன்னும் ஆக்ககரமாக ஈடுபடுவார்கள் என்பதை மட்டும் அடித்து சொல்லலாம். காரணம், அவர்களின் வம்ச இயல்பு அப்படி.

தன்னை தலைவன் என்று கூறி கொள்பவன் எல்லோரும் தலைவனா ?

நாம் எவ்வளவு குட்டிகரணம் அடித்தாலும் 'ஒட்டுர மண் தான் நம் மீது ஒட்டும்'. நம்மில் பலரிடம் என்ன சொன்னாலும் விழுப்புணர்ச்சி ஏற்பட்டு அவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. சிலருக்கு யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. உலக நடைமுறையைப் பார்த்து, பார்த்து தாங்களாகவே தங்களை மாற்றிக் கொண்டு, வாழ்க்கையில் பீடு நடை போடுவதற்கு வழிமுறைகளை கண்டு பிடித்து விடுவார்கள்.

சரி, இனி இன்றைய மலேசிய அரசியல் சூழ்நிலையில் எங்கனம் ஒரு தலைவனை நாம் தேர்ந்தெடுப்பது என்பதை பார்ப்போம்.
இதுவரை இந்த நாட்டில் நமக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவம் என்ன? ம.இ.கா. எனும் ஒரு கட்சி, ஐ.பீ.எப். எனும் ஒரு கட்சி, கிராக்கான் எனும் ஒரு கட்சி, பி.பி.பி. எனும் ஒரு கட்சி, பீ.கே.ஆர். எனும் ஒரு கட்சி, டி.ஏ.பீ. எனும் ஒரு கட்சி, அது போக முத்துகருப்பன் ஆரம்பித்த கட்சி, பிறகு இந்திராவ் காரர்கள் ஆரம்பித்த மூன்று கட்சிகள்.

ஏன்ய்யா, ஜனத்தொகையில் வெறும் 7.4 விழுக்காடு இருக்கும் இந்தியர்களுக்கு எத்தனை கட்சிகள் அய்யா !! சரி, இத்தனை கட்சிகளும் நமக்காக என்ன வெட்டி முறித்தார்கள்? இது வரையிலும் ஒரு மண்ணும் இல்லை. இனியும் ஒரு மண்ணும் முறிக்கப் போவதும் இல்லை. ஏன் இப்படி கூறுகிறேன் என்று கேட்கிறீர்களா?

அரசியல்வாதிகள் நமக்கு முறையாக எதுவும் செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு நம் மீது சிறிது பயம் இருக்க வேண்டும். அப்படி பிறர் மனதில் பயத்தை ஏற்படுத்துவதற்கு நாம் முதலில் ஒரு புத்திசாலி இனமாகவும், கருத்து ஒருமித்த ஒரு இனமாகவும் இருக்க வேண்டும். நாம் புத்திசாலிகளா? ஒருமித்தவர்களா? ஏன்ய்யா !!!!

மலையாளிகளைக் கண்டால் தமிழர்களுக்கு ஆகாது, தமிழர்களைக் கண்டால் யாழ்பாணத்தார்களுக்கு ஆகாது, யாழ்பாணத்தாரை கண்டால் தெலுங்கர்களுக்கு ஆகாது, இவர்கள் யாருக்கும் வட இந்தியர்களுக்கு ஆகாது, வட இந்தியர்களுக்கு இவர்கள் யாரையுமே ஆகாது. இந்திய முஸ்லீம்கள் நாங்கள் இந்தியர்களே இல்லை என்கிறார்கள். இதற்கு நடுவில் உலகில் வேறு எந்த இனத்திடமும் இல்லாத சாதியம் எனும் ஒரு சாபம் ஒவ்வொரு இந்தியர் முதுகிலும் வாழ்நாள் குத்தகை எடுத்து, ட்டெண்டு போட்டு உட்கார்ந்து இருக்கிறது.

அம்னோவைப் பொருத்தவரை, இன்னும் ஒரு பத்து இந்தியக் கட்சிகள் ஆரம்பிக்க பட்டாலும் நல்லது தான். கட்சிக்கு 3 - 4 விழுக்காடு ஒட்டுக்களை வாங்கி கொண்டார்களேயானால், இந்தியர்களின் ஒட்டுக்கள் ஒரு மண்ணுக்கும் ஆகாமல் போய்விடும் அல்லவா !!