Saturday, June 27, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சுருங்கி வரும் ஜனத்தொகை) - பாகம் 13

மலாய் இனத்தையும் இஸ்லாமிய மதத்தையும் பெரும்பாண்மையாக கொண்ட மலேசிய நாட்டில், இந்தியாவில் இருந்து வந்த நாம் வேறொரு இனத்தையும், பிற மதங்களையும் சார்ந்தவர்கள். ஜனத்தொகையில் நமது தற்போதைய 7.7 விழுக்காடு என்பது 13 மலேசியர்களில் ஒரு இந்தியர் என்கிற கணக்கு.


ஜனத்தொகை கணக்கெடுப்பு கூறும் உண்மைகள்


நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஜனத்தொகையில் 12.0 விழுக்காடாக இருந்த நாம், மேல்நிலை இந்தியர்கள் பேரளவுக்கு மலேசியாவில் இருந்து பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்ததாலும், அண்டை நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறி எப்படியோ மலேசிய குடியுறிமை பெற்ற லட்ச்சக் கணக்கான இந்தோனீசிய, பிலிப்பீன்ஸ் நாட்டு இஸ்லாமியர்களின் வருகையினாலும், மலாய் இனத்தவரின் கூடுதல் ஜனத்தொகை பெருக்கத்தினாலும் மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இன்று வெறும் 7.7 விழுக்காட்டாக குறைந்துள்ளோம்.

சரி, மலேசியாவில் இந்தியர்களின் இந்த ஜனப்பெருக்க சரிவு இதோடு நிற்க்குமா என்றால், நிற்க்காது. ஜனத்தொகை கணக்கீடுகளின் படி இன்னும் 11 ஆண்டுகளில், அதாவது 2020 ஆம் ஆண்டு ஜனத்தொகை கணக்கெடுப்பின் போது மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் வெறும் 6.4 விழுக்காடு மட்டுமே இருப்போம் (மலேசியாவில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஜனத்தொகை கணக்கெடுப்பு நடத்த படுகின்றது) .

இந்த ஜனத்தொகை கணக்கெடுப்பின் தொடர் நிலையை ஆராய்ந்து பார்த்தால், 2050 ஆம ஆண்டு வாக்கில் மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் வெறும் 3.6 விழுக்காடு மட்டும் தான் இருப்பார்கள் (28 மலேசியர்களில் ஒரு இந்தியர் என்கிற நிலைப்பாட்டில்).

அன்றய நிலையில் இந்த நாட்டு அரசியலில் இந்தியர்களுக்கு இன்று உள்ளதுபோல் மலேசிய மந்திரி சபையில் பிரத்தியேக பிரதினித்துவம் எதுவும் இருக்காது என்பது என்னுடைய கணிப்பு. மிஞ்சிப் போனால் நம் இனத்திற்கென்று ஒரு துணை அமைச்சர் பதவி கொடுக்கப் பட்டிருக்கும். எல்லா அன்றாட நிலைகளிலும் இன்று உள்ள 'இந்தியர்கள்' எனும் தனி வகுப்பீடு போய், 'லயின் லயின்' எனும் கெட்டகரியில் கடாசான், இபான், மூருட் போன்ற பிற இனங்களோடு இந்தியர்களும் சேர்க்கப் பட்டிருப்பார்கள்.

ஆக இந்த நாட்டில் தமிழர்களின் வருங்காலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அதி முக்கிய உண்மை என்னவென்றால், இன அளவில் நாம் என்ன குட்டி கரணம் அடித்தாலும் மலேசியாவில் இன்று நமக்கு இருக்கும் ஏதோ ஓரளவு அரசியல் பலம் அடுத்த ஒரு 20 வருடங்களுக்கு மட்டும்தான் நிலைத்திருக்கும் என்பதை.

அதற்கு பிறகு மலேசிய அரசாங்கமோ, மலாய் இனமோ நம்மை ஒரு பொருட்டாக மதித்து நடத்த வேண்டிய நிர்பந்தமே இருக்காது. ஓட்டுறிமை எண்ணிக்கையில் நமக்கு இருக்கும் பலம் சிறிது, சிறிதாக கரைந்து மொத்தமாக சரிவு கண்ட நிலையில், மலாய்காரர்கள் நம்மை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ?

இந்த உண்மையை புரிந்து கொள்ளாது, 'காற்று உள்ள போதை தூற்றிக் கொள்ளாது', நம் நிலையை மேம்படுத்தி கொள்வதற்கு தேவையான எந்த தனி மனித முயற்ச்சியும் செய்யாது, நமது பெண்கள் அஸ்ட்ரோவில் நாள் ஒன்றுக்கு பத்து பதினைந்து சீரியல்களைப் பார்த்து கொண்டு, நமது பிள்ளைகள் பள்ளீயில் படிப்பை கோட்டை விட்டு விட்டு, நமது வாழிபர்கள் வேலை இடத்தில் எந்த துறையிலும் எந்த உருப்படியான நிபுணத்துவமும் பெறாது காலத்தை வீணடித்து, சமுதாய அளவில் நாம் அர்த்தமுள்ள பிற இன தொடர்புகள் எவற்றையும் ஏற்படுத்திக் கொள்ளாது, நமது மக்கள் தமிழ் மொழி பேசும் இந்தியர்களுடன் மட்டுமே பழகிக் கொண்டு, எந்த குறிக்கோளும் முனைப்பும் அற்ற ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டு, நன்றாக தின்று கொழுத்து அருவருக்கத் தக்க அளவு உடல் பருமனை கூட்டிக் கொண்டு, முறையாக உடை உடுத்த கூட தெரியாத பின் தங்கிய நிலையில், வியர்வை நாற்றமும் வெட்டப் பட்டிராத மீசையும் தாடியுமாக 'என்னலா .... கைங்களெல்லாங் ... பன்னாஸ் ஆகி.... தூருன் பாடாங் ... பண்ணிட்டாங்க லா" என்று தமிழும், மலாயும் கலந்த ரெண்டுங்கெட்டான் பாஷை ஒன்றை பேசிக் கொண்டு, ஆண்களில் பலர் காதில் கடுக்கன்களையும், சிலர் மூக்குத்திகளையும் மாட்டிக் கொண்டு அடி முட்டாள்களைப் போலவும், கேணக் கிருக்கன்களைப் போலவும் சுற்றி திரிந்தார்களேயானால், 2050 ஆம் ஆண்டு வாக்கில் இந்த நாட்டில் தமிழன் என்பவன் பலங்காலத்து இந்தியாவில் இருந்த ஹரிஜனனின் நிலைக்கு ஒப்ப, யாராலும் தீண்டப் படாத ஒரு இழிநிலைக்கு தள்ளப் பட்டிருப்பான் என்பதை அடித்து கூறலாம். என் சுய புத்திக்கு இன்னும் 40 - 50 ஆண்டுகளில் மலேசியாவில் சராசரி தமிழனின் நிலை இப்படித்தான் இருக்கப் போகிறது என்று மிக ஆழமாகப் படுகின்றது.

"என்னடா இவன் இவ்வளவு பெரிய குண்டை தூக்கி போடுகிறான்?!" என்று குழம்புகிறீர்களா? நான் கூறுவது நூறு விழுக்காடு உண்மை அய்யா ! இருந்தாலும் என் கூற்றுக்களை இங்கு யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீங்களே உங்கள் அளவில் சுயமாக கணக்குகளை போட்டு பாருங்கள். சிறிது சிறமப் பட்டு மலேசிய அரசாங்க ஜனத்தொகை கணக்கெடுப்புக்களை தேடிக் கண்டுபிடுத்து நான் கூறுபவை உண்மையா, இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்து பாருங்கள். உண்மை என்னவென்பது உங்களுக்கே புரியும்.


"சரி, அப்ப்டியானால் நம் இனத்திற்க்கு என்னதான் விமோச்சனம்?" என்று கேட்கிறீர்களா? நான் அரசியல்வாதியாக இருந்தால் " நமக்கு இன்னமும் காலம் இருக்கிறது. இந்த நாட்டில் தமிழர்களின் வருங்காலம் மிகப் பிரகாசமாக உள்ளது. நாம் முயற்ச்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. மரத்தமிழர்களான நாம் வெறுமனே களங்களாமா? தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே! " என்று மேடை ஏறி "ஆய்... ஊய்" என்று உறத்த கூவி விட்டு, தன்னளவில் "நமக்கென்ன காசா, பணமா ஏதோ கேக்கிறவன் காதுக்கு குளுர்ச்சியா, ஆதரவா, நாலு வார்த்தைகளை கோர்வையாக சொல்லிவிட்டு போவோமே! எல்லாமே பூஜியமா தெரியுதுடான்னா பிறகு எவன் தான் நமக்கு ஓட்டு போடுவான்?" என்று எண்ணுவேன்.


ஆனால், இந்த தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு நான் கூறியதைப் போல், நான் சமுதாய உணர்வு கொண்ட ஒரு சாதாரண மனிதன். எனக்கு யாரிடமும் பாலிஸாக பேசி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற தேவை எல்லாம் கிடையாது. என் மனதிற்கு சரி என்று படுவதை, என் பாணியில் 'ஆணி அடித்தாற்ப் போல்' எழுதுகிறேன். படிக்க விருப்பம் இருப்போர் படியுங்கள்.

இப்படி ஏட்டிக்கு போட்டியாகவே நினைப்பவன் பிறகு எதற்காக சமுதாய மேம்பாட்டை பற்றி எழுதி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா!? காரணமாகத் தான். நான் இந்த தொடரில் எத்தனையோ தடவை கூறி உள்ளதைப் போல், தமிழர்களில் பத்து பேர்களில் இருவரால் மட்டும்தான் ஏதோ முண்டி அடித்து பிற இனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேற முடியும் என்பது என்னுடைய ஆழமான கருத்து.


நான் இங்கு எழுதுவதெல்லாம், மிஞ்சிப் போனால் அந்த பத்தில் இரண்டு அல்லது மூன்று பேர்களின் விழிப்புணர்ச்சிக்கு மட்டும்தான் பயன் படும். அதை தாண்டி அடுத்த 20 - 30 ஆண்டு இடைவேலையில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயம் என்கிற அளவில் என்ன காரணத்திற்காகவும், எந்த உருப்படியான சமுதாய மாற்றமும் நம்மிடையே நிகழப் போவதாக என் சுய புத்திக்கு படவில்லை.


சரி, வேறு என்ன புத்திசாலித்தனமான அரசியல் அனுகுமுறைகளை நாம் கடைப் பிடிக்கலாம் என்பதை பார்ப்போம்:-


தன் நிலை அறிதல்

சமுதாய நிலையில் நமது பிரச்சனைகள் தான் என்ன என்பதை, பிற யாருக்கும் நாம் புரிய வைப்பதற்கு முன்பு, நம் அளவில் நாம் அவற்றை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு அரசியல் சார்பற்ற ஸ்தாபனம் இந்த நாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்கும் இந்திய மாணாக்கர்களின் துணை கொண்டு நாடு தழுவிய நிலையில் நுனுக்கமான, பரவலான நேர்முக ஆய்வுகளை மேற் கொண்டு சமுதாய அளவில் நமது இனத்தின் உண்மை நிலை என்ன என்பதை கண்டறிய வேண்டும்.

இந்த மாதிரி நாடு தழுவிய சமுதாய அளவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு நிறைய பணம் செலவாகும். ஆனால் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறதே என்கிற பயத்தில் இந்த வேலையை தேசிய முன்னணியிடமோ, அதன் இந்திய உருப்புக் கட்சிகளிடமோ விட்டோமேயானால் நம் இனத்தை பற்றிய அப்பட்ட உண்மைகள் நமக்கு என்றுமே தெரியாமலேயே போய்விடும்.

இன்றைய நிலையில், இந்த வேலையை முறையாக செய்ய கூடிய சமுதாய அங்கீகாரமும், அதற்கு தேவையான பணத்தையும் ஆள் பலத்தையும் ஒன்று திரட்டக் கூடிய ஒரே சமூக அமைப்பு ஹிந்திராவ் மட்டும் தான். ஆனால், இந்த இயக்கத்தின் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்தார்கள். பிறகு பிரிட்டீஸ் தூதரிடம் மகஜர் கொடுப்பதறகாக ஒரு பேரணியை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் எதிர்பார்த்ததை மிஞ்சி கூட்டமும் கூடியது, குழப்பமும் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் இசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார்கள். பிறகு விடுவிக்கப் பட்டார்கள்.

அதில் ஒருவர் அகில உலக அளவில் இங்குள்ள இந்தியர்களின் அவல நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டினார். இந்திய அரசாங்கம் வரை நமது பிரச்சனைகளின் தீவிரம் தெரியப் படுத்தப் பட்டது. இதற்கிடையில் இந்த நாட்டு ஜனத்தொகையில் 66.0 விழுக்காடு இருக்கும் மலாய்காரர்களுக்கு ஹிந்திராவ்வின் செய்கை பேரளவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. இதனால், பக்கத்தான் ராக்யாட்டில் உள்ள மலாய் தலைவர்கள் இந்திய பிரச்சனைகளை முன்னெடுத்து பேசுவதற்கு தயங்கி, தயங்கி மென்று முழுங்கி கொண்டிருக்கிறார்கள். சிலர் மலாய்காரர் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்றும், மலேசிய இஸ்லாமிய கட்சியும், அம்னோவும் கூட்டு புரிந்துணர்வு பேச்சு வாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரைகூவல் விடுத்து கொண்டுள்ளார்கள்.

இதற்கெல்லாம் நடுவில், தேசிய முன்னணி அரசாங்கம் ஹிந்திராவ் இயக்கத்தை ஒரு பொருட்டாக மதிப்பதாகவே தெரியவில்லை. இதுவரை ஹிந்திராவ் குறித்த தேசிய முன்னணியின் போக்கு "ஒனக்கும் பெப்...பே ஒங்க அப்பனுக்கும் பெப்...பே" என்கிற அளவில்தான் உள்ளது. இந்த நிலையில் ஹிந்திராவ் தலைவர்கள அடுத்து என்ன செய்ய விருக்கிறார்கள்?

நான் அடிக்கடி கூறி வருவது போல் "பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போட்டு, எதிர்வரும் சூழ்நிலைக்கு உகந்தாற்போல் தன்னை தயார் படுத்தி கொள்ளத் தெரிந்தவன் வாழ்க்கையை வெழ்பவன். அது தெரியாதவன் தோற்பவன்". இந்த நாட்டில் உள்ள தமிழ் இனம், இந்த கணக்கை சிறிதளவு கூட போடத் தெரியாதவர்கள்.

சமுதாய தலைவர்களாக உருவெடுத்திருக்கும் உங்களுக்கு இந்த கணக்குகள் எல்லாம் மிக நன்றாக போடத் தெரியும். அடுத்தடுத்து எடுக்க வேண்டிய முடிவுகளை முறையாக எடுத்து இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் அவல நிலையை துடைப்பதற்கு வழிவகைகள் கண்டு பிடித்து விடுவீர்கள் என்கிற எண்ணத்தில்தான், ஹிந்திராவ் தலைவர்களான நீங்கள் இட்ட அறைகூவல்களுக்கு மதிப்பளித்து 2007 நவம்பர் 25 ல் கோலாலம்பூரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சாலை பேரணியில் ஈடுபட்டனர்.

ஆனால் இன்றைய நிலையை பார்த்தால், ஹிந்திராவ் தலைவர்களான உங்களுக்கும் இந்த 'பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும்" என்கிற தூர நோக்கு கணக்கு போடத் தெரியாது போல தோன்றுகிறது. அப்படியானால், தலைவர்கள் என்று மலேசிய தமிழர்கள் நினைத்தவர்களும் வெறும் தொண்டர்கள்தானா?

பார்ப்போம். சுருக்கென்று ஒரு கேள்வியை கேட்டுள்ளோம். ஹிந்திராவ் சம்மந்தபட்ட சிலர் இந்த தொடரை படித்து வருகிறார்கள். பதில் ஏதாவது வருகிறதா என்று பார்ப்போம் !!

- தொடரும் -

Friday, June 12, 2009

உன்னையே நீ அறிவாய் ! (கடைக்கொள்ள படவேண்டிய சமூக / அரசியல் அனுகுமுறை) - பாகம் 12

மற்றவர்களின் பார்வைக்கு மலேசிய தமிழர்களான நாம் படிப்பறிவு அற்றவர்களாக, கூலிக் கூட்டமாக, கருப்பர்களாக .... எப்படி வேண்டுமானாலும் தென்படலாம், ஆனால் அரசியல் கண்ணோட்டத்தில் தீபகற்ப மலேசியாவில் உள்ள 165 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 தொகுதிகளிலும், 445 சட்ட மன்ற தொகுதிகளில் 133 தொகுதிகளிலும் இந்தியர்கள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 10.0 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குறிமையை பெற்றுள்ளோம். இதில் 80 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் தமிழர்களான நாம் தான்.




1).
நமக்கான அரசியல் 'துருப்புச் சீட்டு'

மலேசிய அரசியலில், இந்த வாக்குறிமை நிலைப் பாடு ஒன்றுதான் நம் இனத்திற்கான 'துருப்பு சீட்டு'. ஓட்டுறிமையில் இந்த அளவு நிலைப் பாடு இருப்பதனால் தான் நம்மையும் ஒரு சிறு பொருட்டாக இந்த நாட்டு அரசாங்கம் நினைத்து ஓரளவுக்காவது மதித்து நடத்துகின்றது, நம் இனத்திற்கென்று அமைச்சரவையில் ஏதோ ஒரு மந்திரி பதவியாவது நிலைத்து நிற்கின்றது.


7.7 விழுக்காட்டு மக்கள் தொகையை கொண்ட இந்தியர்கள் 2008 க்கு முன்பு நமது ஓட்டுக்களை தேசிய முன்னணிக்கு தான் போட்டு வந்தோம். ஆனால் 2008 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பிறகு நமது ஓட்டு குவியல் மொத்தமுமாக எதிர்கட்சியினருக்கு செல்ல ஆரம்பித்து விட்டது.


நடைமுறையில் இதன் தாக்கம் என்னவென்றால், இந்தியர்களின் இந்த எதிர்பாராத அரசியல் திருப்பம் மேற் குறிப்பிட்ட அந்த 50 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 133 சட்ட மன்ற தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணீக்கையில் தேசிய முன்னணிக்கு 20 விழுக்காட்டிற்கும் அதிகமான சரிவை ஏற்படுத்தி விட்டது ( தேசிய முன்னணிக்கு நம்மிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்க பட்ட, ஆனால் கடைசியில் வராமல் போன வாக்கு எண்ணிக்கை 10 விழுக்காடு, எதிர்கட்சிகளுக்கு நம்மிடம் இருந்து புதிதாக வழங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மற்றுமொரு 10 விழுக்காடு).




2). இனி வேண்டாம் இனவாரி சாலை மறியல் / பேரணி


ஆனால் இந்த துருப்புச் சீட்டை (வாக்குறிமையை) நாம் புத்திசாலித் தனமாக பயன் படுத்த வேண்டும். அதற்கு முதலில் சமயத்தின் பெயரை சொல்லிக் கொண்டு, மகாத்மா காந்தியின் படத்தையும், பிரிட்டீஸ் அரசியாரின் படத்தையும் தாங்கி கொண்டு "ஆ...ஊ" என்று சாலை மறியலில் ஈடுபடும் தப்பான அனுகுமுறையை நாம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.


நான் இந்த தொடரின் முதல் பாகத்தில் கூறியது போல "மலேசிய மக்கள்தொகையில் 93 விழுக்காடு உள்ள மற்ற இனத்தாரின் புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லாது நமது இனப் பிரச்சனைகளுக்கு மலேசியாவில் எந்த தீர்வும் ஏற்பட போவது இல்லை".


2008 ஆம் ஆண்டு பொது தேர்தலில் மலேசிய சீனர்களும் நம்மோடு சேர்ந்து எதிர்கட்சியினருக்கு வாக்களித்தார்கள் என்றாலும், நெடுங்கால அரசியல் ஓட்டத்தில் இஸ்லாம் அல்லாத வேறொரு மதத்தின் பெயரை உயர்த்தி பிடித்து, அரசாங்கத்திற்கு எதிராக நாம் கொடி பிடிக்க விளைந்தால், "சீனர்கள் நம்மோடு தொடர்ந்து எதிர் அணியில் நிற்பார்களா?" என்றால், அதற்கு "நிச்சயமாக இல்லை" என்பதுதான் பதில்.


தலைவர்களாக இருந்தாலும், தொண்டர்களாக இருந்தாலும் தமிழர்களான நாம் எல்லா காலங்களிலுமே நம் நுனிமூக்கு தூரத்தை தாண்டி சிந்திக்க தெரியாத முட்டாள்களாகத் தான் இருந்து வந்திருக்கிறோம்.


ஆனால், சீனர்கள் அப்படி அல்ல. பாரிசான் நேஷனல் அரசாங்கத்தை பெரும்பாலான சீனர்களுக்கு பிடிக்காவிட்டாலும், 1999 ஆம் ஆண்டு தேர்தலில் அன்வார் இப்ராஹிம் சர்ச்சையின் பொருட்டு மலாய் இனத்தவருக்குள் ஆழமான பிளவுகள் ஏற்பட்டு மலாய் ஓட்டுக்கள் பேரளவில் பாஸ் கட்சிக்கு போய்விடும் என்கிற நிலை ஏற்பட்ட போது, சீன சமூகம் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு தேசிய முன்னணிக்கு ஒட்டு போட்டு தேசிய முன்னணியை ஜெயிக்க வைத்தார்கள்.


அந்த தேர்தலில் டீ.ஏ.பி யின் லின் கிட் சியாங், கர்ப்பால் சிங் உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் தோற்கடிக்கப் பட்டனர். ஆனால், அதே தேர்தலில் தான் அதுவரை கிளந்தான் மாகாணத்தை மட்டுமே ஆட்சி புரிந்து வந்த பாஸ் கட்சி திரங்கானு மாகாணத்தையும் கைப்பற்றிய்து.


பிறகு 2008 ஆம் ஆண்டு இந்திய சமூகத்தின் ஹிந்திராவ் பேரணி ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தின் தன்மையை புரிந்து கொண்டு, "தேசிய முன்னணிக்கு பாடம் புகட்ட இது தான் சரியான தருணம்" என்கிற முனைப்போடும், பெரும்பாலான சீனர்கள் பக்கத்தான் ராக்யாட்டிற்கு தங்கள் ஒட்டுக்களை போட்டனர். அதன் விளைவு, அன்வார் இப்ராஹிம் தலைமையில் களம் இறங்கிய எதிர்கட்சி அணிக்கு 2008 ஆம் ஆண்டு தேர்தலில் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 82 தொகுதிகளில் வெற்றி கிட்டியதோடு, பேராக், பினாங்கு, கெடா, சிலாங்கூர் ஆகிய மாகாணங்களின் ஆட்சி உறிமையும் எதிர்கட்சி கூட்டணியின் வசம் கை மாறியது.


ஆனால், நாம் ஏற்படுத்திய அரசியல் தாக்கம்தானே மலேசிய அரசியலில் இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. நாம் உள்ளபடியே 'பெரிய பருப்புக்கள் தான்' என்கிற தப்பு கணக்கை போட்டு கொண்டு மற்றொரு முறை சாலை மறியல் போராட்டத்தில் இந்தியர்கள் குதித்தால், நாம் விடும் அம்பு எப்படி திரும்பி, யார் மேல பாயும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மலாய் இனத்தவரும், சீன இனத்தவரும் நம்மை விட அரசியல் ஞாணத்திலும், அரசியல் அனுபவத்திலும் பல மடங்கு கைதேர்ந்தவர்கள்..


ஏதோ 2007 லில் இந்தியர்கள் ஏற்படுத்திய அரசியல் தாக்கம் தங்களுக்கு சாதகமாக அமைந்ததால், எல்லா எதிர்கட்சி தலைவர்களும் "மக்கள் சக்தி, மக்கள் சக்தி" என்று இரண்டு தமிழ் வார்த்தைகளைக் கூவி கொண்டும் இந்தியர்களின் உதவியோடு 2008 நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றனர்.


ஆனால் நீண்ட கால அரசியல் கணிப்பில் இந்து சமயத்தின் பெயரை உபயோகித்து இந்தியர்கள் தாவிக் கொண்டும், கூவிக் கொண்டும் இயங்குவதை இந்த நாட்டில் எந்த மலாய்காரராவது பொருத்து கொள்வாரா என்றால், அதற்கான பதிலும் "நிச்சயமாக இல்லை" என்றுதான் வரும்.


இனவாரியாக பிற்படுத்தப் பட்டதால், பல காலமாக நம் இனத்தாரின் மனங்களில் கொதி நிலையிலேயே இருந்த வந்த வெறுப்பையும், ஆத்திரத்தையும் எந்த வகையிலாவது அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டும் என்று பலரும் நினைத்திருந்த வேலையில், ஹிந்திராவ் இயக்கத்தினர் இன அளவில் அதற்கான பெரிய தொரு தளத்தை நமக்கு ஏற்படுத்தி கொடுத்தனர். அதை பயன் படுத்திக் கொண்டு நாமும் நம்மை பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்ளும் இந்திய கட்சி தலைவர்களுக்கும், தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் 2007 ஆம் ஆண்டு பேரணியின் மூலம் நம் நிலைப் பாட்டை அப்பட்டமாக தெரிவித்தோம். சரி, பிரமாதம்! அட்டகாசம்! அசத்தி விட்டோம்!


ஆனால், இத்தோடு இந்த இன அடிப்படையிலான சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி கொள்வோம். காரணம், இந்த இன வாரி சாலை மறியல் போராட்டம் என்பது மகாபாரத்தில் வருகிற கர்ணனின் நாகாஸ்திரம் போன்றது. அதை ஒரே ஒரு முறைதான் பயன் படுத்தப் பட முடியும். அதைத் தாண்டி 2007 சாலை பேரணி மறியலைப் போல் மற்றொரு மறியலில் ஈடுபட நம் இன சமூக / அரசியல் தலைவர்கள் யாராவ்து நினைத்தால் அதைவிட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.


"10 படிகளுக்கு முன்பே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போடத் தெரிந்தவன் வாழ்க்கையை வெல்பவன். அந்த கணக்கை போடத் தெரியாதவன் தோற்பவன். இது தான் வாழ்க்கையின் ரகசியம் என்பது என் கருத்து" என்று இந்த தொடரின் முதல் பாகத்தில் பின்னுட்டம் வழி நான் கூறியிருந்த கருத்து தான் இன்னமும், ( எப்போதும்) என் தனி மனித நிலைப்பாடு.


சரீ ...... சாலை மறியல் பேரணியை நடத்தினோமே, அதிலிருந்து நமக்கான நண்மைகள் எவற்றையாவது இதுவரை பெற்றுள்ளோமா? இல்லை ! இவ்வளவு பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட மூல காரணமாக இருந்த இந்தியர்களுக்கு அவர்கள் நடத்திய பேரணியின் மூலம் இதுவரை எந்த ஒரு பிரத்தியேகமான நண்மையையும் கிட்ட வில்லையே. ஏன்? ஏன் என்றால், பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை யாரும் யோசித்து அதற்கு தகுந்த வழியில் தங்களை தயார் படித்திக் கொள்ள வில்லை !


"ஆ...ஊ" என்று உணர்ச்சி வசப் பட்டு கூவுவது, தாவுவது வேறு, புத்திசாலித்தனமான அனுகுமுறை கொண்டு நம்மைச் சுற்றி உள்ள சுழ்நிலைகளை நமக்கு சாதமாக மாற்றி அமைத்து கொண்டு வாழ்க்கையை வெழ்வது என்பது வேறு (உணர்ச்சி வசப் படுவதைத் தான் நம் கொள்ளுப் பாட்டனுக்கு, கொள்ளுப் பாட்டனுக்கு, கொள்ளுப் பாட்டன் காலத்தில் இருந்து பட்டு கொண்டிருக்கோமே! ).




3). சமூக / அரசியல் அனுகுமுறை


இந்த வாதத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு, சமூக அரசியல் அளவில் நாம் எடுக்க வேண்டிய சில அடிப்படை முயற்ச்சிகளை பார்ப்போம்.



3a). வாக்காளர் பதிவு


ஒவ்வொரு வீட்டிலும் 21 வயதுக்கு மேல் உள்ள அத்தனை இந்தியரும் வாக்காளராக பதிந்து கொண்டிருக்க வேண்டும். 'சமூக சேவை.. சமூக சேவை' என்று குரல் கொடுக்கும் இயக்கங்களும், இந்திய சமுதாயத்தை தூக்கி நிமிர்த்தப் போவதாக கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமுதாய உணர்வு கொண்ட ஒவ்வொரு மலேசிய இந்தியரும் வேறு எதையும் பெரிதாக நம் இனத்திற்காக செய்யா விட்டாலும், இந்த ஒரு அடிப்படை செயலை ஒரு இனச் 'சேவை' யாக நினைத்து, அவர்களுக்கு தெரிந்த 21 வயதுக்கு மேல் உள்ள அத்தனை இந்திய இளைஞர்களையும் வாக்காளர்களாக பதிவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.



3b). இந்தியர் முன்னேற்ற கொள்கையைப் பொருத்து தான் எங்கள் ஓட்டு


மலேசியாவின் பல இன அரசியல் சூழ்நிலையில், ஜனத்தொகையில் நாம் வெறும் 7.7 விழுக்காடு மட்டும் இருந்தாலும், இந்தியர்கள் தீபகற்ப மலேசியாவின் மேற்கு திசை மாகாணங்களில் பரவலாக குடிபுகுந்திருப்பதால், தேர்தல் என்று வரும்போது இந்த நாட்டு அரசியல் நிலைப் பாட்டில் நாம் நம் ஜனத்தொகையை மீறிய ஒரு அரசியல் பலத்தை பெற்றுள்ளோம் என்பது ஆணித்தரமான உண்மை.


பெரும்பாலும் மேற்குறிப்பிட்ட அந்த 50 நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் போடும் வாக்குகளைப் பொருத்து தான் வெற்றி, தோல்வியே நிரணயமாகும். அதே போல பேராக், பினாங்கு, சிலாங்கூர், கெடா, நெகிரி செம்பிலான் ஆகிய மாகாணங்களில் நாம் ஒட்டு போடாமல் எந்த கட்சியும் எழிதில் ஆட்சி அமைக்க முடியாது.


ஆக உண்மை என்னவென்றால், இந்த நாட்டு அரசியலில் இந்தியர்களுக்கு (குறிப்பாக தமிழர்களுக்கு) உண்மையிலேயே அவர்களின் சிறு எண்ணிக்கையை மீறிய அசாத்திய பலம் ஒன்று உள்ளது. ஆனால், ஒற்றுமை இன்மையினாலும், நம் இன அரசியல் தலைவர்களின் சுயநலப் போக்காலும், நம் இனத்தின் ஒட்டுமொத்த அடி முட்டாள்தனத்தாலும் அந்த பலத்தை நாம் இதுவரை பயன்படுதாமலேயே இருந்து விட்டோம்.


இனிவரும் காலங்களிலாவது நாம் நம் அரசியல் பலத்தை உணர்ந்து நடந்து கொள்வோமா, மாட்டோமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இந்த தொடரை வைத்து நான் நம் இன மேம்பாட்டிற்காக எவ்வளவோ சொல்லி விட்டேன், இந்த அரசியல் ஆராய்ச்சியையும் என் சுய புத்திக்கு எட்டிய அளவு முடித்து கொண்டு, நான் சொல்ல வேண்டியவற்றை சொல்லிவிட்டி செல்கிறேன்.


எல்லா கட்சி தலைவர்களும் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதையும், இந்தியர்களின் பால் சிறப்பு கவனம் செலுத்தப் பட வேண்டியது அவசியம் என்பதையும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அறிந்தே உள்ளார்கள். ஆனால் மற்ற இனங்கள் சிறிதும் பதட்டப் பட்டுவிடாத வழியில், இந்தியர்களின் பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து, அவற்றை எப்படி கலைவது என்கிற அமுல் திட்ட அளவில்தான் முட்டு கட்டையே உள்ளது என்பது என்னுடைய கருத்து.


ஆக எது எப்படி இருந்தாலும் இனிமேல் இன அளவில் நமது நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றால், " இந்தியர்களின் பிரச்சனைகளை களைவதில் பக்கத்தான் ராக்யாட், பாரிசான் நேஷனல் ஆகிய கூட்டணிகளில் எந்த கூட்டணி அதிக முனைப்பு காட்டுகிறதோ, அந்த கூட்டணிக்கு தான் இந்தியர்களின் ஓட்டு என்று நாம் இப்பொழுதிலிருந்தே பரை சாற்றிக் கொண்டு வர வேண்டும். இன்றைய அளவில் இதை இன அங்கீகாரத்தோடு செய்யக் கூடிய ஒரே அரசியல் / சமூக அமைப்பு 'ஹிந்திராவ்' மட்டும்தான்.


அவர்கள் அதை முறையாக செய்வார்களா? பாரிசான் நேஷனலின் பலமும் அதிகம், பணமும் அதிகம், அரசியல் அனுபவமும் அதிகம். 'ஹிந்திராவ்' இயக்கத்தில் சம்மந்தப் பட்டவர்களுக்கு சமுதாய உணர்வு என்பது அதிகம் தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. "உணர்ச்சி என்பது வேண்டும்" என்று பாரதி பாடிச் சென்றது போல் ஹிந்திராவ் தலைவர்களுக்கு 'உணர்ச்சி' எனப்து நிறம்பவே உள்ளது. ஆனால் உணர்ச்சி ஒன்றை மட்டுமே வைத்து இங்கு எந்த சமுதாய மாற்றத்தை யாரும் ஏற்படுத்திவிட முடியாது. சம்மந்த பட்டவர்கள் சிந்தித்து செயல் படுவார்கள் என்று நம்புவோம்.



- தொடரும் -

Saturday, June 6, 2009

உன்னையே நீ அறிவாய் ! (தனி மனித மாற்றங்கள்) - பாகம் 11


மற்ற இனங்களுக்கும் இந்திய தமிழர்களான நமக்கும் தனி மனித அளவில் அனுகு முறையிலும், குண நலன்களிலும் அடிப்படையிலேயே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதில் நாம் எழிதில் மாற்றிக் கொள்ள முடியாத, உலக நடைமுறைக்கு முறன்பாடான, பல இன சூழ்நிலைக்கு ஒவ்வாத சில குணாதிசயங்களும் உள்ளன.



1).
மாற்றிக் கொள்ள முடியாத குணநலன்கள்


உதாரணத்திற்கு சீன கலாச்சாரத்தில் 'FACE' (முகம் கொடுப்பது) என்பது மிக மிக முக்கியமானதொரு சமூகவியல் அம்சம். பொதுவாகச் சொன்னால் FACE என்பது 'நடைமுறை வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் மரியாதை / கௌரவம்'.


இது ஒரு தனி மனிதனுடைய கௌரவமாகவும் இருக்கலாம், அல்லது ஒரு குடும்பத்தினுடைய, ஸ்தாபனத்தினுடைய, இனத்தினுடைய, நாட்டினுடைய கௌரவமாகவும் இருக்கலாம். LOSING FACE (நடைமுறை கௌரவத்தை இழப்பது) என்பது சீன கலாச்சாரத்தில் சகித்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளக் கூடாத உன்று.


இந்த 'நடைமுறை கௌரவத்தை' காப்பாற்றிக் கொள்வதற்காக, அல்லது பெறுவதற்காக, அல்லது பெருக்கிக் கொள்வதற்காக சீனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். எதையும் செய்வார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடுவார்கள்.


இந்த FACE என்பது அன்றாட வாழ்க்கையில் தனி மனித அளவில் பல ரூபங்களில் வெளிப்படும். உதாரணத்திற்கு பலர் பார்க்க ஒருவரை திட்டுவது, பிறர் பார்க்க ஒருவரின் கருத்துக்கு அப்பட்டமாக எதிர் கருத்து தெரிவிப்பது, விருந்திற்கு அழைக்கப் பட்டால் 'வர இயலாது' என்று சுருக்கமாக ஒற்றை வரியில் பதில் உறைப்பது, ஊர் பார்க்க தடுமாறும் அளவுக்கு மது அருந்தி விடுவது யாவும் 'நடைமுறை கொளரவத்தை இலப்பதாக' (LOSING FACE) ஆக கிரகிக்கபடும்.

இதனால் சீனர்கள் தொழில், வியாபாரம் போன்றவற்றில் 'அப்படி, இப்படி' என்று சிறிது முறைகேடாக நடந்து கொண்டார்களே ஆனாலும், தனி மனித 'மனிதனுக்கு மனிதன்' என்கிற அன்றாட அனுகு முறையில் ஒவ்வொரு சீனரும் இந்த முகம் (FACE) என்பதற்கு முன்னுறிமை கொடுத்துதான் நடப்பார். அதே போல் பிறரும் தனக்கு முகம் கொடுத்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சீன சமூகத்தில் இந்த 'முகம் கொடுக்கும்' விஷயத்தில் ஒருவர் எவ்வளவு முறையாக நடந்து கொள்கிறார் என்பதை பொருத்து தான் ஒரு மனிதனின் தராதரமே நிர்ணயமாகிறது..


அதே போல் மலாய்காரர்களும் தங்கள் அரசியல், சமூக தலைவர்களை, ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களை, சமுதாயத்தில் உள்ள மூத்தவர்களை, வயதால் பெரியவர்களை சாதாரண காரணுங்களுக்காக புறக்கணித்தோ, அவமதித்தோ நடக்கவே மாட்டார்கள். அவர்கள் கலாச்சாரத்தில் அப்படி நடப்பது காட்டுமிராண்டித் தனத்திற்கு ஒப்பான ஒரு அனுகு முறை.


அந்த வகையில் இந்திய தமிழர்களான நாம் இந்த இரு இனத்தவருக்கும் நேர் மாறானவர்கள். நமது கலாச்சாரத்தில் "நியாயத்தை தட்டி கேட்பது" என்பது எல்லாவற்றையும் மிஞ்சிய ஒரு அடிப்படை சமூக இயல்பு. காரணம் நமது பாரம்பரிய கூறு அப்படி. "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். அதனால் எல்லோரோடும் வம்பு. எல்லாவற்றிகும் சண்டை.


"நீ எப்படி அப்படி பேசலாம் ! நீ பேசியது தப்பு ! நீ யாராக இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தப்பு, தப்புத்தான்! மன்னிப்பு கேள்! " - இப்படி சீனர்களோ, மலாய்காரர்களோ எப்போதாவது பேசி பார்த்திருக்கிறீர்களா ? இந்த நாட்டில் இப்படி பேசுபவர்கள் தமிழர்கள் மட்டும்தான்.


மற்ற இனத்தவர் நம்மை 'காட்டான்கள்' என்று நினைப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆக இந்த மாதிரியான நடைமுறைக்கு ஒவ்வாத பல குணநலன்கள் நம் இனத்திடம் ஆழப் பதிந்து கிடக்கின்றன. என்ன செய்வது? இவை ஆண்டாண்டு காலமாக நம் இனத்தின் நாடி நரம்புகளோடு ஐக்கியமான இயல்புகள் என்பதால், இவற்றை எல்லாம் நாம் எளிதில் மாற்றிக் கொண்டுவிட முடியாது.




2). மாற்றிக் கொள்ளக் கூடிய குணநலன்கள்

ஆனால் தனி மனித அளவில் நாம் இளகுவில் மாற்றிக் கொள்ள கூடிய இதர சிறு சிறு பிளைகளை நாம் திருத்தி கொள்ளலாம். திருத்தி கொள்ளத் தான் வேண்டும. அவற்றில் சிலவற்றை இங்கு பார்போம்:-



2a). குரலை உயர்த்தி உறையாடுதல்

நம் இளைஞர்களில் பலர் பொது இடத்தில் பிறரிடம் உறையாடும்போதும் சரி, தங்களுக்குள்ளாக பேசிக் கொள்ளும்போதும் சரி, குரலை உயர்த்தியே பேசுவர். அது ஏன்? பல இன சூழலில் அடுத்தவர் சங்கோஜப் படாத அளவில் நமது நடவடிக்கைகளை வைத்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது ?! பொது இடங்களில் நாம் பேசும் போதும், பலகும் போதும் நாசுக்காக, சாந்தமாக பேசிப் பலகிக் கொள்ளலாமே!



2b). எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப் படுதல்


எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படும் இயல்பை நாம் நிச்சயமாக மாற்றி கொள்ள வேண்டும். பொதுவாக வாழ்க்கையில் தோற்றபவர்கள் தான் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப் படுவார்கள். ஜெயிப்பவர்களின் பல குணாதசங்களில், உணர்ச்சியை கட்டுப் பாட்டுக்குள் வைத்து கொள்ளும் திறமையும் ஒன்று.


அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் பிர்ச்சனை இல்லாத இடத்தில் கூட பிரச்சனை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சண்டை, வம்பு என்று கிழம்புவார்கள். இது குறித்து இங்கு ஒரு உதாரணத்தை கூறி செல்லலாம் என்று நினைக்கிறேன்.


என் இள வயதில் நான் வேலை செய்த காரியாலயத்தில் என்னோடு வேலை செய்து வந்த என் வயதை ஒத்த சீன நண்பர் ஒருவர் என்னை அவ்வப்போது "ஏய் கிலிங்" என்று கூப்பிடுவார். அதை நான் என்றுமே தவறாக பார்த்ததில்லை. காரணம் அவர் என் நண்பர். "நீ என் நண்பன்" என்கிற நினைப்பில் அவர் என்னிடம் சற்று அதிகமாகவே உறிமை எடுத்து கொண்டார். அவ்வளவுதான். மூடு வந்தால் "ஓய் ச்சினா குய்" என்று நானும் உறத்தகூவி அவரை அழைத்துள்ளேன். அதனாலோ என்னவோ 25 வருடங்கள் கடந்தும், இன்றும் நாங்கள் நண்பர்களாகவே இருந்து வருகிறோம்.



2c). உடை உடுத்தல்


நாம் போதுவாக உடை உடுத்தலில் பிற இனத்தவரை விட மிகவும் பின் தங்கியவர்கள் தான்.


முதலாவதாக, மற்ற இனத்தவரை விட குறைவாகத் தான் நாம் துணிமணிக்கென்று செலவு செய்வோம். அதனால் பொதுவாக மற்றவர்களை விட நம்மிடம் உடுத்தி கொள்வதற்கு எப்பவும் குறைவான துணிமணிகள் தான் இருக்கும்.


இரண்டாவதாக, நாம் நமது உடைகளை அடிக்கடை மாற்றி உடுத்த வேண்டும் என்பதை உணராதவர்கள் . இந்த நாட்டு சீதோஷன நிலையில் நாம் ஒரு சட்டையை தொடர்ந்து இரணடு நாட்கள் உடுத்தினோமானால் இரண்டாம் நாள் மதியமே நம்மிடம் இருந்து வியர்வை நாற்றம் வீச ஆரம்பித்து விடும். பிற இனத்தவர் யாரும் இதை நம்மிடம் திறந்து சொல்லாவிட்டாலும், இது ஒரு அப்பட்டமான, நடைமுறை உண்மை. ஆண் பெண் என்கிற வித்தியாசம் இல்லாமல் நம் இனத்தவரில் ஐந்தில் ஒரு இரண்டு பேரிடம் இருந்தாவது வியர்வை நாற்றம் வீசத் தான் செய்கிறது.


மூன்றாவதாக, நம் நிறத்திற்க்கு பொருத்தமான வர்ணத்தில் நம் உடை இருக்க வேண்டும். நம் இளைஞர்களில் பெரும்பாலோர் அவர்களின் கருமை நிறத்திற்க்கு சற்றும் பொருந்தாத கருப்பு, கனத்த நீலம், கனத்த சாக்லெட் ஆகிய நிறங்களில் உடை உடுத்தி கொள்வது சகிக்க முடியாதபடி, பார்ப்பதற்கு சற்றும் பொருத்தமில்லாமல் தோன்றுகிறது.


மற்றவர்கள் நம்மை மதித்து நடக்க வேண்டும் என்றால், முதலில் நமது தோற்றம் அவர்களை அச்சுருத்தாத வகையிலும், அருவருக்க வைக்காத வகையிலும் இருக்க வேண்டும். பல இன சூழ்நிலையில் நமது தோற்றத்திற்கு அப்புறம் தான் மற்ற விஷயங்கள் எல்லாம் என்கிற அப்பட்டமான உண்மையை நாம் ஆணி அடித்தாற்போல் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.



2d). சுய தோற்ற மெருகேற்றல்


சீனர்களையும் மலாய்காரர்களையும் விட இந்தியர்களுக்கு முகத்தில் முடி முலைப்பது மிக அதிகம் என்பது யாவரும் அறிந்த உணமை. அதனால் நம்மோடு சக வேலை செய்யும் ஒரு சீனரோ, மலாய்காரரோ ஒரு வாரத்திற்கு முகத்தை சவரம் செய்யாது இருந்தால் கூட அவர்களைப் பார்க்கும் போது ஒருவருக்கு எந்த வித்தியாசமும் தெரியாது.


ஆனால் ஒரு இந்திய ஆண் மூன்று நாட்களுக்கு முகத்தை சவரம் செய்யாதிருந்தால் அவர் முகத்தில் முடியின் அடர்த்தி அப்பட்டமாக தெரிய ஆரம்பித்து விடும். அத்தோடு அவர் மீசை வைத்தவராக இருந்தால், பொதுவாக ஒரு காரியாலய சூழ்நிலையில் அவரை பார்ப்பதற்கே ஒரு சிறு அருவருப்பு தட்டும்.


இதை எல்லாம் நம்மோடு வேலை செய்யும் மற்ற இனத்தவர் யாரும் நம்மிடம் வந்து அப்பட்டமாக எடுத்துச் சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர்கள் மனத்தில் "இவர்கள் எல்லாம் இப்படித் தான். தன்னளவில் தன் தோற்றத்தையும், சுய சுகாதாரத்தையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாதவர்கள், வேறு என்னத்தை பெரிதாக வெட்டி முறிக்க போகிறார்கள்?" என்று நம்மைப் பற்றி ஒரு முறன்பாடான கருத்து அவர்கள் மனங்களில் ஏற்பட்டு விடும்.


நமக்கு காதால் கேட்க பிடிக்கிறதோ இல்லையோ, நம்மை பற்றிய சில உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். நம் இனத்தவரை பிற இனத்தவர் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளாமல் ஒதுங்கி போவதற்கான பல காரணங்களில் ஒன்று, நம் இனத்தின் கருமை நிறம் தான் என்பது என் கருத்து.


ஏன் நாமே நம அளவிலேயே கருமை நிறம் கொண்டவர்களை சற்று தாழ்வாகத் தானே பார்க்கிறோம். இதே நிலைதான் வெளிநாடுகளில் இருந்து இங்கு படிக்க வரும் ஆப்பிரிக்க நாட்டவருக்கும். இங்குள்ள எந்த இனத்தவரும் மலேசியாவிற்கு படிக்க வரும் ஆப்பிரிக்க மாணவர்களை வரவேற்ப்பு உணர்வோடு அனுகுவதே கிடையாது. அவர்கள் வலது பக்கம் நடந்து வ்ந்தால், இங்குள்ளவர்கள் இடது பக்கமாக ஒதுங்கிப் போய்விடுவார்கள். ஆக, உலகம் முலுவதிலும் கருமை நிறம் கொண்டவர்களுக்கு வரவேற்ப்பு குறைவுதான். இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் வேண்டாம்.


உலக நிலை இப்படி இருக்க, நம் உருவத்தை, தோற்றத்தை மெருகேற்றிக் கொள்ளும் பொருட்டு 'சவரம்' போன்ற அடிப்படை சிறத்தையை கூட நாம் எடுக்காமல் இருந்தால், பிறகு "எங்களை பிற இனத்தவர் மதிக்கவில்லை", "சீனர்கள் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை" என்று முட்டாள்தனமாக சவுண்டு விடுவதில் என்ன அர்த்தம் உள்ளது?.


(நம் இனத்திடம் உள்ள குறைபாடுகளும், பிரச்சனைகளும் எவ்வளவு ஆழமானவை எனபதை இப்போதாவது உணர்கிறீர்களா ? இன மேம்பாட்டு பாடத்தை நாம் 'செரைப்பதில்' இதில் ஆரம்பித்து சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதுதான் அய்யா நமது சமூகத்தின் நிலை. புரிகிறதா ?).


சீனர்களோடு நான் ஆழப் பழகியவன். சீனர்கள் நம் இன இளைஞர்களுக்கு ஏன் வேலை கொடுப்பதில்லை என்பதை தலையங்கமாக வைத்து நான் எழுத ஆரம்பித்தால், இந்த பதிவைப் போன்று மூன்று பதிவுகளையாவது என்னால் எழுத முடியும். சீனர்கள் பார்வையில், நம் இன இளைஞர்களிடம் அவ்வளவு குறைபாடுகள் உள்ளன.



2e). மலாய் மொழியை முறையாக கற்றல்


இந்த நாட்டில் நாம் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்குவதில் இருந்து, கோர்ட்டுக்கு போய் கேஸ் போடுவது வறைக்கும் எல்லாவற்றிக்கும் மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும். மலாய் தெரியாமல் இங்கு நாம் எந்த விஷயத்திலும் ஈடுபட முடியாது. அதனால், ஓரளவுக்காவது வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள் அதற்கான முதற் படியாக மலாய் மொழியை முறையாக கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் மட்டுமள்ள, அத்தியாவசியமும் கூட.



2f). குறிக்கோளுடனான வாழ்க்கை வாழ்தல்


சில தினங்களுக்கு முன்பு நான் பெட்டாலிங் ஜெயாவில் என் காருக்கான உபரி பாகங்கள் வாங்க வேண்டி நான் வாடிக்கையாக செல்லும் கார் ஸ்ப்பேர் பார்ட்ஸ்' கடைக்கு சென்றேன். அங்கு எப்போதும் கல்லாவில் உற்காந்திருக்கும் கடை முதலாளியை காணவில்லை. அவர் இடத்தில் எனக்கு நன்கு பரிச்சயமான என் இள நண்பன் 'ஆ செங்' இருந்தான்.


நான் முதன் முதலில் இந்த கடைக்கு 1990 ல் கார் உபரிப் பாகங்கள் வாங்க வேண்டி போன போதுதான், 15 வயது நிறம்பிய இந்த 'ஆ செங்' எடுபிடி பையனாக வேலைக்கு வந்து சேர்ந்திருந்தான். அதன் பிறகு கால ஓட்டத்தில், ஆயிரக்கணக்கான கார் உபரி பாகங்களின் பெயர்களையும், நுனுக்கங்களையும், விலைகளையும் ஒவ்வொன்றாக அனுபவத்தில் படித்து தெரிந்து கொண்டு அக் கடையிலேயே 'சேல்ஸ் மேன்' ஆக வேலை செய்தான்,


அதன் பிறகு சிறிது வருட உழைப்பிற்கு அப்புறம் அதே கடைக்கு 'ஆ செங்' மானேஜர் ஆனான், அதற்கு அப்புறம் இரண்டு வருட்ங்களுக்கு முன்பு, 'ஆ செங்' சொந்தமாக வியாபாரம் ஆரம்பிக்க நினைப்பதை அறிந்த கடை முதலாளி, தன் கடையிலேயே 'ஆ செங்கை' ஒரு பங்குதாரர் ஆக்கி கொண்டார்.


இப்போது கடை முதலாளி நோய் வாய் பட்டு விட்டதால், அவர் தன் கடையை 'ஆ செங்' இடமே விற்று விற்றார். இப்போது, 20 வருட கடின உழைப்பிற்கு பிறகு, தன் 35 ஆவது வயதில் ' செங்' ஒரு கடைக்கு முதலாளி.


இதே நிலைப் பாடுதான் என்னுடையதும். 17 வயதில் ஆரம்பித்து 21 வருடங்கள் பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஏற்றுமதி ஆர்டர்களை என் கைகளாலேயே முன்னின்று நடத்தி முடித்து ஆழமான அனுபவத்தை பெற்று கொண்டு, என் 38 வது வயதில் தான் நான் எனக்கென்று ஒரு சிறு ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பித்தேன்.


சினிமாவில் மட்டும்தான் 6 நிமிடங்கள் கூட வராத ஒரே பாட்டில், கதாநாயகன் மாட்டு வண்டி நிலையில் இருந்து, கார், பங்களா, தோட்டம், துறவு என்கிற உயர்ந்த நிலைக்கு போய் விடுவார்.


நிஜ வாழ்க்கையில் எல்லாமே மெது, மெது வாகத் தான் நடந்தேறி வரும். அந்த மெதுவான வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் நீங்கள் அடித்து பிடித்து முன்னேற வேண்டுமானால், எல்லாவற்றிக்கும் மேலாக முதலில் உங்களுக்கு ஒரு 'தூர நோக்கு குறிக்கோள் / லட்ச்சியம்' இருக்க வேண்டும். அது இல்லாமல் உங்களால் பெரிதாக ஒரு மண்ணையும் சாதிக்க முடியாது.


ஆதலால், நீங்கள் உங்களின் இளவட்ட நாட்களை முறையாக சிந்தியாது கோட்டை விட்டிருந்தீர்கள் ஆனாலும், உங்களின் பிள்ளைகளையாவது ஒரு 'தூர நோக்கு லட்ச்சியத்தின்' பால் திருப்பிவிட முயற்ச்சி செய்யுங்கள்.



- தொடரும் -