Sunday, May 17, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சமுதாய மாற்றம் என்பதன் இயல்பு) - பாகம் 10



மெல்ல, மெல்ல தான் சமுதாய மாற்றங்கள் வரும்

30, 40, 50 வருடங்கள் என்பது எல்லாம் தனி மனித அளவில் மிகப் பெரிய காலக் கட்டங்கள் தான். ஆனால் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் இன வளர்ச்சி, மொழி வளர்ச்சி, சமுதாய மேம்பாடு என்கிற கணக்கீட்டை முன் வைத்து பார்த்தால் இந்த கால நிலவரைகள் யாவும் கண் சிமிட்டும் நேரப் பொழுதுகளே.

ஒரு சமுதாயத்தை மாற்றி அமைக்கும் எந்த நிகழ்வும் 'உடனே, இப்போது, இன்றே' என்கிற நிலையில் என்றுமே நடந்தேறுவது கிடையாது. சமுதாய மாற்றம் எல்லாமே சிறிது சிறிதாக,மெது மெதுவாக, அதற்கான காலம் கனிந்து வரும்போது தான் (வந்தால் மட்டுமே) நடந்தேறும்.

இந்த நாட்டில் மலாய்காரர்கள் இன்று இவ்வளவு கம்பீரமாகவும், செழிப்பாகவும் இருக்கிறார்களே, மலாயாவை இவர்கள் முழுமையாக, ஆழும் உறிமையை பெற எவ்வளவு காலம் காத்திருந்தார்கள் என்று வாசகர்களான உங்களின் யாருக்காவது தெரியுமா?

அன்றைய மலாயாவில் மகானத்திற்கு, மாகானம் சுல்தான்கள் இருந்தார்கள் என்றாலும், 1511 ஆம் ஆண்டு மலாக்கா சுல்தானிய சமஸ்தானத்தை போச்சுகீஸ்தியர்கள் வீழ்த்தியதிலிருந்து, 1957 ஆம் ஆண்டுஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்றது வரை மலாயா தீபகற்பம் போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் என்று வெவ்வேறு கால கட்டத்தில், வெவ்வேறு மேல் நாட்டவரின் ஆழுமையில் தான் இருந்து வந்துள்ள்து.

நாம் தற்போது பார்க்கும் மலேசிய நாட்டின் வளர்ச்சி, மலாய்காரர்களின் கம்பீரம், சொகுசு வாழ்க்கை எல்லாம் இப்போது .... ஒரு 52 வருடங்கள் இடைவேளியில் நடந்தவை தான். அதற்கு முன்பு பாவம் மலாய் இனத்தவரும் ஒரு அடிமைப் பட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்தவர்கள் தான்.

அவர்கள் சொந்த நாட்டையே தங்களுடையது என்று பெறுமையோடு சொல்லிக் கொள்ள மலாய் இனத்தவர் 446 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்திருந்தால், கடல் கடந்து கூலி வேலைக் கென்று வந்த நாம், நமது உறிமை என்று நாம் நினைப்பதை நிலை நாட்டி கொள்வது அவ்வளவு எழிதாக நடக்க கூடிய விஷயமா?

இதன் உண்மையை நாம் சரியாக புரிந்து கொளவதற்கு நமது சரித்திர பின்னனியில் இருந்தே வேறு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

திராவிடரின் சிந்து நதிக் கலாச்சாரம் 5,000 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. திருக்குறளும், கம்பராமாயணமும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதப் பட்டிருக்கின்றன. அதுபோக மகா பாரதம், இதிகாசங்கள் என்று எத்தனையோ பிரம்மிக்கத் தக்க, சமுதாயத்தை நல்வழிப் படுத்தும் அறிவுக் கலஞ்சியங்கள் தமிழில் எழுதப் பட்டு நம்மிடையே ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வந்திருக்கின்றன.

அப்படி இருந்தும் சுத்த திராவிடர்களான நம் பாட்டன், பூட்டன்கள் எல்லாம் எப்போது 'அ, ஆ, இ, ஈ .....' யை தெரிந்து, எழுத படிக்க ஆரம்பித்தார்கள்? மிஞ்சி, மிஞ்சிப் போனால் ஒரு 150 வருட இடைவேலைக்குள் தானே! ஏன்? அது அப்படித்தான் அய்யா!

சமூக வியல் நிகழ்வுகள் அப்படித் தான் நடந்தேறும். அன்றைய சமூக அமைப்பில், நாம் பிற்பட்ட வகுப்பினர், நமக்கு படிப்பு சொல்லி கொடுக்க வேண்டும் என்று பிற யாருக்கும் தோன்றவில்லை, நாம் அடிமைப் பட்டு இருப்பதுதான் பிறருக்கு நல்லதாக இருந்தது.

ஏறக்குறைய அன்றைய இந்தியாவில் இருந்த நமது பாட்டன், பூட்டன் நிலைதான் இன்றைக்கு நம் இனத்திற்கு மலேசியாவில் இருக்கும் நிலை. மலேசிய சமூக வியலில் நாம் ஒரு கீழ்மட்ட வகுப்பினர். நம்மை உயர்த்தி விட வேண்டும் என்று முக்கிய பொருப்பில் இருக்கும் யாருக்கும் எண்ணம் இல்லை.

"தமிழர்கள் நழிந்து போய், கீழ்மட்டத்தில் இருக்கிறார்களா? இருக்கட்டுமே, ஒரு சமுதாயத்தில் எல்லோரும் மேல் மட்டத்தில் இருக்க முடியாது தானே, யாராவது கீழ் மட்டத்தில் இருக்கத் தானே வேண்டும்" என்பது பிற இனத்தவரின் நிலைப் பாடு.

"நாங்கள் எல்லாம் எப்படி முன்னேறினோம்? கடின உழைப்பும், முயற்ச்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். இங்கு எல்லா வசதியும் வாய்ப்பும் எல்லோருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு அதை முறையாக பயன் படுத்த தெரியாவிட்டால், அதற்கு யார் பொருப்பு?" என்று ஏதோ ஒரு வகையில் முன்னுக்கு வந்துவிட்ட பிற இந்தியர்கள், அவர்கள் நம்மோடு சம்பந்தப் படாதவர்கள் என்பதை பிற இனத்தினர் உணர வேண்டும் என்பதற்காக சொல்வர்.

ஆக உண்மை என்னவென்றால், இன்றைய சூழ்நிலையில் நாம் வேண்டாத, தேவையில்லாத, அதனால் கண்டுகொள்ளப் படாத ஒரு இனம். இது தான் அய்யா நடைமுறை உண்மை.

கடைசியில் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தீர்களென்றால், "நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது". வழியில் போகும் வேறு யாரும் நம்மை தூக்கிவிடப் போவது இல்லை. நாம் தான் நமது கையை ஊன்றி கரணம் பாய வேண்டும். இன்றைய உலக நடைமுறையில், இதை தவிர நமக்கு வேறு எந்த வழியும் கிடையாது. சொல்வது புரிகிறதா ?

அதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு - மலேசிய சீனர்கள். அவர்களும் நம்மை போல் கூலிகளாக வந்தவர்கள் தான், இப்போது அவர்கள் என்ன கம்பீரத்துடன் இருக்கிறார்கள், பார்த்தீர்களா? யாருடைய தயவையும் எதிர்பார்த்தா சீனர்கள் இருக்கிறார்கள்?



அரசாங்க பிரதிநித்துவம்

இருந்தாலும் இது ஜனநாயக நாடு என்பதனால், நமது நலன்களை பாது காப்பதற்கு நம்மிலேயே ஒரு சிலரை தேர்ந்தெடுத்து, நமது பிரதிநிதிகளாக நியமிக்கும் தேர்தல் எனும் ஒரு சாதனம் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. அதன்படி நாமும், 52 வருடங்களாக செய்து வருவது போல நம்மில் யாராவது சில பருப்புக்களை தேர்ந்தெடுத்து நமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம்.

அவர்களும் YB என்ற போர்வையை போர்த்தி கொண்டு, நம்மை பிரதிநிதிப்பதாக கூறிக் கொண்டு, அரசாங்கத்தில் அங்கம் பெறுவர். அதில் ஒருவர் மந்திரி சபையில் இடம் பெருவார்.

அவரும் ஆரம்பத்தில் தன் இனத்திற்கு உதவ வேண்டும் என்கிற முனைப்போடு தான் கடமையை ஆற்றுவார். ஆனால், பாருங்கள் கால ஓட்டத்தில் அவரும் "போகப் போகப் மாமியார் கழுதைபோல ஆனாள்" என்கிற பழமொழியை ஒததவராக ஆகி விடுவார்.

காரணம் நமது இனத்தின் சூழ்நிலை அப்படி. அரசாங்கத்திடம் இருந்து அடித்து, பிடித்து அவர் 10 லட்ச்ச ரிங்கிட் பெற்று வந்தால், இங்கு 50 லட்ச்சத்திற்கு தேவைகள் இருக்கும்.

நம் இனத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்கிற முனைப்போடு மனுஷன் நாயாப் பேயா அழைந்து திரிந்து, மந்திரி சபையில் இருக்கும் பிற மந்திரிமார்களுடம் கெஞ்சி, கூத்தாடி அனுமதிகளைப் பெற்று, மலாய்கார அரசாங்க அதிகாரிகளிடம் அடித்து பிடித்து, சண்டை போட்டு அன்றைய பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்த்து இரவு 11.00 மணிக்கு சோர்ந்து போய வீடு வந்து சேர்வார், அப்போது தான் ஒரு 20 பேர் வீட்டு கேட் முன்னால் நின்று கொண்டு காரை மறித்து "அய்யா, எங்கள் வீடுகள் எல்லாம் நெருப்பில் எறிந்து போச்சு, நீங்க தான் காப்பத்தனும் !!" என்று காலில் விழுவார்கள்.

இது என்றைக்காவது ஒரு நாள் நடைபெறும் நிகழ்வு என்றால் பாதகம் இல்லை. ஆனால், விடிந்தால் எந்திரித்தால் ஒரு மனுஷன் இந்த மாதிரி சூழ்நிலைகளையே பார்க்க நேரிட்டால், அவனும் என்ன ஆவான்.

நாளடைவில் அவர் மன நிலையும் "ச்சீ" என்று போய், ஏதோ அவரால் முடிந்த சில இனப் பிரச்சனைகளை கலைவதோடு நிருத்தி கொண்டு, தன் கட்சி / அரசாங்க பதவிகளை நிலை நிருத்தித் கொள்ளும் வேலைகளில் மும்முரம் காண்பிக்க ஆரம்பித்து விடுவார.

கடைசியில் இன அளவில் இங்கொன்றும், அங்கொன்றுமாய் சில பிரச்சனைகள் தீர்க்கப் பட்டாலும், நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகள தீர்க்கப் படாமலேயே இருக்கும். இதற்கிடையில் மனுஷனுக்கு மந்திரி பதவியின் சொகுசு ஒரு சிறு மயக்கத்தை கொடுத்திருக்கும், அத்தோடு சிறிது பணம் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அவர் வழியில் வந்திருக்கும். அவரும் பணம் பார்த்திருப்பார்.

இதற்கிடையில் "தலைவர் வாழ்க" என்று கரகோஷம் எழுப்பும் ஒரு ஜாலரா கூட்டம் நம்ம ஆளைச் சுற்றி எப்பவும் கூடி நிற்க்கும். கால ஓட்டத்தில், அரசியல் நடைமுறைப் படி இந்த ஜாலராக் கூட்டத்திற்கு 'ஏதாவது செய்து கொடுக்க வேண்டும்' என்கிற நிலைப் பாட்டிற்கு நம்ம ஆளும் தள்ளப் பட்டிருப்பார். (அப்படி அவர் செய்ய தவறினால், இரவோடு இரவாக ஜாலராக்கள் எல்லாம் எதிர் அனிக்கு தாவி நம்ம ஆளின் கட்சி பதவியே பறி போகும் நிலை ஏற்பட்டாலும் ஏற்பட்டு விடும் ).

பிறகு என்ன, "பெர்லீஸ் மாகான கட்சி தலைவர் குப்புசாமியா! சரீ ...... அரசாங்கத்தின் குறைந்த விலை வீட்டுடமை திட்டத்தின் கீழ் உங்கள் மாகானத்தில் இந்தியர்களுக்கு 150 வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதை உங்கள் மூலம், உங்கள் பரிந்துரையின் பேரில், நீங்கள் சொல்பவருக்கு வழங்கும்படி ஏற்பாடு செய்துள்ளேன்" என்று முதுகைத் தட்டி கொடுத்த வாறு, சிரித்த வண்ணம் தலைவர் சொல்லி விட்டு போவார்.

பிறகென்ன, ஆரே மாதங்களில் சாதாரண குப்புசாமி லட்ச்சாதிபதி குப்புசாமி ஆகிவிடுவார். ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து ஓட்டு போட்ட நமக்கு ஒரு "ஆப்பு" !

கேட்கிறது, கேட்கிறது "முன்பைப் போல் அல்ல. நாங்கள் இனிமேல் தேர்ந்தெடுக்கும் அரசியல் தலைவர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். மக்கள் தொண்டை தலைமேல் கொண்டு நடப்பவர்களை மட்டும்தான் நாங்கள் சமுதாய தலைவர்களாக ஏற்றுக் கொள்வோம்" என்று வாசகர்கள் கூறுவது எனக்கு நன்றாக கேட்கிறது.

இருந்தாலும் என்ன செய்வது - பத்துமலையில் இருக்கும் காக்காய் மட்டும் "முருகா, முருகா" என்றா கூவுகிறது. அதுவும் 'கா...கா, கா ...கா" என்றுதானே கூவுகிறது. ஏன் ? அதன் இயல்பு அப்படி அய்யா !

அதே மாதிரி தவறுகள் செய்வது, தப்புக்கள் பண்ணுவது மனிதனின் அடிப்படை இயல்பு ! நாம் யாரை தலைவராக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினாலும், முதலில் முறையாக சமூகப் பணி புரியும் அவர் கால ஓட்டத்தில் "அதே குட்டையில் ஊறிய மட்டை" என்று தான் ஆவார். அந்த நிலைப் பாட்டில் இருந்து யாரும் தப்ப முடியாது. இது தான் அய்யா வாழ்க்கையின் தன்மை.

ஆதலால், நாம் நம்மை பிரதிநிதிக்கும் சமுதாய தலைவர்களை என்றைக்கும் சாதாரண மனிதர்களாக மட்டுமே பார்க்க பலகி கொள்ள வேண்டும். அப்படி பார்க்க ஆரம்பித்தால் மட்டுமே சூல்நிலை நம்மை மிஞ்சிப் போகிற நேரத்தில், தலைவர்களின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் தைரியம் நமக்கு வரும். அவர்களும் பொது ஜனம் சட்டையை பிடிப்பார்கள் என்கிற பயத்தோடு நடந்து கொள்வார்கள்.


இந்த தொடரை முடிப்பதற்கு இன்னும் ஒரு ஆயிரத்து ஐந்நூறு வார்த்தைகளின் இருந்து இரண்டாயிரம் வார்த்தைகளை கொண்ட பதிவை நான் எழுத வேண்டியுள்ளது. இந்த பாகத்தோடு அதை சேர்த்து எழுதினால், இது மிக நீண்ட பதிவாக ஆகி விடும். ஆதலால், இந்த 10 வது பாகத்தை இத்தோடு நிறுத்தி கொள்கிறேன். என் அடுத்த பதிவு கீழ்கண்டவையை மையமாக கொண்டிருக்கும்:

- தனி மனித அளவில் நம் நிலையை மாற்றிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.

- தமிழ் இனத்தின் ஒரு உறுப்பினனாக, நம் பங்குக்கு மற்றவர்களோடு சேர்ந்து இன அடிப்படையில் நாம் என்ன செய்ய முடியும்.

- தனி மனித அளவில் நமது அரசியல் பங்கு என்னவாக இருக்க வேண்டும்

- அரசியல்வாதிகள் ந்ம் இன பிர்ச்சனைகளை எங்கனம்அனுகலாம்

- அரசாங்கத்திடம் இருந்து என்னென்ன சலுகைகளை நாம்கேட்க வேண்டும்

- அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கிட்டை எங்கனம்பெறலாம்

- சாமானியனான நான் கடந்து வந்த சில வாழ்க்கை பாதைகள்

- செட்டியாரிடம் படித்த பாடம் எனும் ஒரு அறிவுறை துனுக்கு


அத்தோடு இந்த தொடரை முடித்து கொள்வேன்.

8 comments:

சிவனேஸ் said...

வணக்கம், ஐயா முதலில் அருமையான தங்கள் கருத்துக்களுக்கு நன்றி, இரண்டாவது "இனிப்பு இருக்கும் இடத்தை எறும்புக்கு சொல்லத்தேவையில்லை, அது தானாகவே அதை நாடிச்செல்லும்" அதுபோலவே நல்ல கருத்துக்கள் அடங்கிய தங்கள் படைப்புக்களையும் தமிழ் மக்கள் நிச்சயம் படித்துப் பயனடைவர், அதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். தரமான தங்கள் படைப்புக்கள் தொடர என் வாழ்த்துக்கள்.

சாமான்யன் said...

வாருங்கள் சிவனேஸ்,

ஏது என்னுடைய தீவிர ரசிகர் ஆகி விட்டீர்கள் போல தெரிகிறது :-)).

மறுபடியும் பின்னூட்டம் வழி என்னை உற்சாகப் படுத்துவதற்கு மிக்க நன்றி.

சாமான்யன்

குமார் said...

வணக்கம் தோழாரே,
நீண்ட நாட்கள் தொடர்புக் கொள்ளாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். உங்களது கடைசி மூன்று பதிவுகளை இப்பொழுதுதான் படிக்க நேரம் கிடைத்தது. அருமையான பதிவுகள். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தமிழ் பதிவுகளைத் தேடிப் படிப்பது எனது பொழுதுபோக்கு. நான் விரும்பி படிக்கும் சில பதிவுகளில் உங்களுடையப் பதிவும் ஒன்று. மற்ற பதிவர்களைக் காட்டிலும் நீங்கள் அதிக வித்தியாச படுகிறீர்கள். சினிமா, படித்ததை மறுபதிவு செய்வது, படித்ததைத் தங்களது பார்வையில் பார்ப்பது என ஏராளமான பதிவர்கள் இருக்கையில்,சொல்ல வந்த விசயத்தைச் சொந்த ஆய்வுக்கு உட்படுத்தி அதை செவ்வனே நீட்டி தெளிவாக கொடுப்பது உங்களைப் போன்ற ஒரு சிலர்தான். பதிவைக் குறைவானவர்களே வாசிப்பதால் கவலைக் கொள்ள தேவையில்லை.தான் வாழ் நாளில் இரண்டே இரண்டு ஓவியத்தை மட்டும் விற்ற ஓவியர் வான்கா ஓய்ந்து போகாமல் தொடர்ந்து வரைந்ததால்தான் உலகப் புகழ் பெற்றார். இன்று நீங்கள் எழுதும் ஒவ்வொரு குறிப்பும் நாளை ஆவணங்களாக ஆகப்போவது தெளிவு. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கப்போகும் நமது குழந்தைகள் ஆரம்பக்கால மலேசிய இந்தியர்களின் வாழ்க்கை நிலையைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் உங்கள் எழுத்துகளைப் படித்தே தீரவேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

சாமான்யன் said...
This comment has been removed by the author.
சாமான்யன் said...

வாருங்கள் குமார்,

நெஞ்சை தொடும் வகையில் அமைந்துள்ள தங்களின் பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்தேன். நன்றி நண்பரே.

சாமான்யன்

Ram Prakash said...

தங்கள் கருத்துகள் நன்று...
ஆயினும்.. 'நீங்கள் , உங்கள்' எனும்
சொற்களின் பயன்பாடு கட்டுரையின்
சிறப்பைச் சற்று குறைத்துள்ளது

சாமான்யன் said...

வாருங்கள் ராம் பிரகாஸ்,

தாங்கள் கூறுவது உண்மைதான்.

இதற்கு முன்பு இந்த பதிவில் இருந்த எல்லா 'உங்கள், தங்கள், நீங்கள்' என்கிற வார்த்தைகளையும் நீக்கிவிட்டு, அவற்றுக்கு பதிலாக 'நம், நாம், நமது' என்கிற வார்த்தைகளை புகுத்தியிருக்கிறேன். மற்றொரு முறை படித்து பாருங்கள்.

பின்னூட்டம் வழி குறைகளை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி.

சாமான்யன்

Ram Prakash said...

சாமான்யரே,
தங்களின் எளிமை மனதை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்கிறது.நன்றி.

Post a Comment