Sunday, April 26, 2009

உன்னையே நீ அறிவாய் ! (1969 மே 13க்கு பின்) - பாகம் 8



1969 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி

1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி மலேசியர்கள் யாரும் மறக்க முடியாத ஒரு நாள். இங்குள்ள இந்தியர், மலாய்க்காரர், சீனர் அனைவரது தலை எழுத்தும் என்றென்றும் நிரந்தரமாக மாறும் வகையில் ஒரு சோக வரலாற்று நிகழ்வு நடந்த நாள்.

பெரும்பான்மை மலாய் இனத்தவருக்கும், அடுத்த பெரும்பான்மை சீன இனத்தவருக்கும் இடையில் ஒரு பயங்கர இனக் கலவரம் நடந்தது அன்றுதான். கலவரத்தை தொடர்ந்து அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைத்து அவசரகால ஆட்சிமுறையை அமல் படுத்தியது.


புதிய பொருளாதாரக் கொள்கை

அதை தொடர்ந்து தான் இன்றுள்ள பூமிபுத்ரா பாலிசி அமுல் படுத்தப் பட்டது. அதாவது "மலாயா மண்ணுக்கு உரிமையாளர்களான மலாய் இனத்தவர்கள், அவர்கள் நாட்டிலேயே பொருளாதார பலத்தை மற்ற இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டு, ஒன்றும் இல்லாத ஒரு ஏழ்மையான அவல நிலையில் இருக்கின்றனர். இந்த நிலை நீடிக்கும் வரை மலாயாவில் நிரந்தர அமைதியை எதிர் பார்க்க முடியாது" என்ற கூற்றை மலாய் இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட அன்றைய அரசாங்கம் முன் வைத்ததோடு அல்லாமல், "NEW ECONOMIC POLICY" என்ற ஒரு புதிய மலேசிய பொருளாதாரத் கொள்கையை நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பித்தது.

இத்திட்டத்தின் கீழ் 1970 ல் தொடங்கி 20 வருடங்களுக்கு மலாய் இனத்தவருக்கு பலவிதமான பிரதான சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்பதும், இந்த காலக் கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் பங்குரிமை 30% எட்ட எல்லா முயற்சிகளும் மேற்க் கொள்ளப் படவேண்டும் என்பதும் அரசாங்க கொள்கையாக்கப் பட்டது.

இக் கொள்கை / திட்டம் வேலை வாய்ப்பு, பல்கலைக் கழகப் படிப்பு, தொழில்துறை உரிமங்கள், பூமிபுத்ராக்களை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடு யாவற்றையும் உள்ளடிக்கிய ஒரு காம்ப்ரிஹன்சிவ் மாடலாக உருவெடுத்தது. அதே நேரத்தில் இத்திட்டத்தோடு வேறு ஒரு துணைத் திட்டமும் பார்லிமெண்டின் முன் சமர்ப்பிக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

அதாவது, மலாய்காரர்களின் நிலையை மேம்படுத்த முனையும் அதே வேலை, இனப்பாகுபாடு அன்றி மலாயாவில் உள்ள எல்லா எழை மக்களின் நிலைகளையும் மேம்படுத்துவது அரசாங்கத்தின் தலயாய குறிக்கோள் என்பதுதான் அந்த துணைத் திட்டம்.

ஆனால், இருபது வருடங்களுக்கு மட்டும் என்று ஆரம்பிக்கப் பட்ட புதிய பொருளாதார கொள்கை சொன்ன காலத்தில் முடிவடையாமல், வெவ்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டு, அவ்வப்போது பெயர் மாறறம் கண்டு, இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இனப் பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பதாகச் சொன்ன கூற்றில் மலேசிய அரசாங்கம் ஒர் அளவுக்கு முனைப்பு காட்டி இருந்தாலும், வேறு எல்லா அரசாங்க திட்டங்களையும் மீறி, மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே அரசாங்கத்தில் சகல நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறியுள்ள நிலைப்பாடு, வேறு யாரையும் விட இந்த நாட்டில் உள்ள இந்தியர்களை (குறிப்பாக மலேசிய தமிழர்களை) வெகுவாக பாதித்திருக்கிறது. "எப்படி?" என்று கேட்கிறீர்களா?

இந்த "எப்படி?" என்கிற கேள்விக்கான பதில் தனி ஒரு பதிவாகவே அமையும் என்று நினைக்கிறேன். ஆதலால் அதை நாம் இப்போது தொட வேண்டாம். இந்த தொடரின் அடுத்த பதிவை இந்த கேள்விக்கு பதிலாக எழுதுகிறேன்.


தமிழர்களின் தோட்டப்புற வாழ்க்கை முறை

1957 ஆம் ஆண்டு மலாயாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது மலேசிய இந்தியர்களில் 20 விழுக்காட்டினர் தான் பட்டனங்களில் வாழ்ந்தனர், பிற யாவரும் தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர். ஆனால் 1990 க்குள் 80 விழுக்காட்டு இந்தியர்கள் பட்டனங்களிலும், வெறும் 20 விழுக்காட்டினர் மட்டுமே தோட்டங்களிலும் வாழ்க்கிறார்கள் என்ற நிலை உருவானது. இந்த நிலையில் "தோட்டத்திலிருந்து பட்டனத்திற்கு" என்ற மாறுதலுக்கு மலேசிய இந்தியர்கள் தங்களை தயார் படித்திக் கொண்டு வந்தார்களா என்றால், "இல்லை".

மலேசிய இந்தியர்களில் 80 விழுக்காட்டினர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டப்புற சூழ்நிலையிலேயே வாழ்ந்தவர்கள். சீனர்களைப் போன்று தம் வாழ்க்கையை தொழில்துறை, வியாபாரம் போன்றவற்றின் மூலம் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்ற வேட்கையால் ஊந்தப் பட்டு அவர்கள் பட்டனங்களுக்கு வரவில்லை. பட்டன வாழ்விற்கு புலம்பெயர்ந்த பெரும்பாலோர், தோட்டபுறங்களை விட்டு வேறு வழியில்லாமல் வெளியேறியவர்கள் தான்.

உண்மையை அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்றால், பட்டன வாழ்க்கை தோட்டங்களில் இருந்து வந்த அன்றைய தமிழர்களை வெகுவாக பயமுறுத்தி இருக்க வேண்டும். "ஏன்?" என்று கேட்கிறீர்களா?

இந்த தொடரின் முதல் பாகத்தில் நான் கூறியிருப்பது போல, இந்த நாட்டிற்கு வந்த இந்திய தமிழர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் பட்டவர்கள் இங்கு கூலி வேலைக்காக வந்தவர்கள்தான். இவர்களிடம் படிப்பறிவு இல்லாததோடல்லாமல், சாதியம் என்ற அந்த நாளைய சமூக இயல்பின் அடி மட்டத்தில் இருந்தவர்கள் தான் மலாயாவிற்கு வந்தவர்களில் பெரும்பாலோர்.

சுருங்க சொன்னால், சொந்த நாட்டில் வாழ வழி தெரியாது தோற்றவர்கள் தான் இங்கு வந்து சேர்ந்த தமிழர்கள். மலாயாவில் கால் பதிப்பவதற்கு முன்பே, நம் இனத்தவர் அவர்களின் சொந்த நாடான இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான வருடங்களாக பிற்பட்டவர்களாகவும், அடிமைப் படுத்த பட்டவர்களாகவும் தான் இருந்திருக்கிறார்கள்.

அப்படி பட்டவர்களுக்கு மலேசிய தோட்டத்துறை வாழ்க்கை முறை ஓரளவுக்கு பொருத்தமானதாகவும், ஏற்புடையதாகவும் தான் இருந்திருக்கின்றது. மலேசிய தோட்டங்களில், அன்றைய வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாக இருந்திருந்தாலும், கூட்டமாக ஒரே இடத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என்று உறவினர்களோடு வாழும் வாழ்க்கை படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய நிலையில் இருந்த தமிழ் இனத்திற்கு வெகுவாக பொருந்தி தான் இருந்திருக்கின்றது.

கூலிவேலையானாலும், அவர்களுக்கு என்று ஒரு நிரந்தர வேலை, தோட்ட நிர்வாகம் கட்டிக் கொடுத்திருந்த வீடு, பிள்ளைகள் படிப்பதற்கென்று எஸ்டேட்டிலேயே ஒரு தமிழ் பள்ளிக்கூடம், அவர்களாகவோ எஸ்டேட் நிர்வாகத்தின் துணையுடனோ கட்டிக்கொணட ஒரு சிறு கோவில், அருகாமையிலேயே ஒரு கள்ளுக்கடை, ஒரிரு பலசரக்குக் கடைகள், வாரம் ஒரிரு முறை செயல் பட்ட ஒரு மருத்துவ நிலையம், ஒரு 10-20 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பட்டினம், அதற்கு மாதம் ஒர்இரு முறை போய்வர பேரூந்து வசதி, போழுது போக்கிற்கு எஸ்டேட் நிர்வாகம் திரையில் போட்டுக் காட்டிய தமிழ் படங்கள், வருடத்திற்கு ஓரிரு முறை நடந்த கோவில் திருவிழாக்கள், பிறகு அவர்களுக்கிடையே நடந்த கல்யாணம், காது குத்து, இறப்பு, பிறப்பு என்று ஏதோ ஒரு மாதிரியாக, சிறிது சுவாரஸ்யமாகத் தான் எஸ்ட்டேடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டு இருந்திருக்கிறது.

மேலும் சீனர்களைப் போலோ, மலாய்காரர்களை போலோ நம் இனத்தார் "இன்றைய, இப்போதைய" என்கிற நிலையை தாண்டி யோசிக்காத ஒரு கூட்டம். கண்ணதாசன் பாடிச் சென்றதை போல "நாளைப் பொழுதை இறைவனுக்கு அழித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி நாடு" என்ற கொள்கையுடன் செயல படுபவர்கள் நாம். இத்தகைய மக்களுக்கு தோட்டத்துறை வாழ்க்கை பொருத்தமானதாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், என்று சூழ்நிலையால் உந்தப்பட்டு தமிழர்கள் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு மாநகரங்களுக்கு வரத்தொடங்கினார்களோ அன்றே அவர்களின் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கை நிலை மாறி, மாநகரங்களின் கீழ் மட்ட வாழ்க்கையின் இயல்பான தாக்கம் அவர்களையும் பாதிக்க தொடங்கி விட்டது.


தமிழர்களின் பட்டனப் பிரவேசம்

தோட்டப்புறங்களில் இருந்த வரை தமிழர்களுக்கு நிலையான ஒரு வேலை இருந்தது. தோட்ட நிர்வாகம் கட்டி கொடுத்திருந்த வீட்டு வசதி இருந்தது. சுற்றங்களின் கண்காணிப்பும் அரைவனைப்பும் இருந்தன. அந்த சிறு தோட்ட சமூகத்தில் தான் ஒரு அங்கத்தினன் என்கிற சமூதாய அங்கீகாரம் இருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளத் தேவையான சிறிதளவு மலாய் மொழி ஆற்றலும், தமிழ் மொழி ஆற்றலும் இருந்தன.

ஆனால் தோட்ட துண்டாடல் காரணமாக, இந்தோனீசிய கள்ள குடியேறிகளுக்கு தோட்ட வேலைகள் கைமாறியதின் காரணமாக, மாநகரங்களை ஒட்டிய தோட்டங்கள் அழிக்க பட்டு குடியிருப்பு திட்டங்கள் அறிமுக படுத்தப் பட்டதின் காரணமாக என்று தமிழர்கள் நகர்புறங்களுக்கு குடியேறினார்களோ, அன்றே அவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆண்டாண்டு காலமாக இருந்த பல சமூக அனுகூலங்களை சிதைத்து கொண்டுள்ளனர்.

இப்படி பட்டனங்களுக்கு வந்து சேர்ந்த பெரும்பாலோர் சேரிகளுக்கு ஒப்பான, வசதி குறைந்த பட்டண விளிம்புகளிலும், ரயில் பாதைகளின் ஓரத்திலும் கள்ளத்தனமாக அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து சிறு சிறு குடிசைகளைக் கட்டிக் கொண்டு இன்றும் வசித்து வருகிறார்கள்.

தோட்டபுறத்தில் இருந்ததைப் போல் இவர்களுக்கு பட்டனங்களில் வீட்டுக்கு அருகாமையிலேயே வேலைகள் கிடைப்பது இல்லை, கிடைக்கும் வேலைகளில் இருந்து வரும் ஊதியம் குடும்பத்தை ஒர் அளவுக்காவது நிம்மதியாக காப்பாற்றக் கூடிய அளவில் இருப்பதும் இல்லை, தோட்டப்புறத்தில் இவர்களுக்கு சுற்றமும் சூழலும் கொடுத்த சமூகத் தோழமை பட்டனத்தில் இவர்களுக்கு கிடைப்பது இல்லை, சமுதாய அங்கீகாரம் என்பது சிறிதளவும் இருப்பது இல்லை, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு தேவையான கூடுதலான மலாய், ஆங்கில மொழி அறிவு சிறிதும் இருப்பது இல்லை.

அத்தோடு உறவுகளோடு ஒன்றாய் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை சிதைந்து போகும்போது கேட்பாரற்ற சூழ்நிலை இயல்பாக ஏற்படுத்தும் தான்தோன்றித் தனமும், ஒழுக்கமின்மையும் மலேசியத் தமிழ் இனத்தில் மிகப் பரவலான பிரச்சனையாக உருவாகியுள்ளன. இது குறித்து நாம் யாரையும் குறை சொல்ல முடியாது. இப்படித் தான் நிகழ்வுகள் நடந்தேறும். அதுதான் இயற்கையான சமூகவியல் நியதி.

மலாய்காரர்களும் நம்மைப் போல் கிராம சூழ்நிலைகளில் இருந்து பட்டனங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் தான் என்றாலும், அவர்களின் மனோ இயல்பு வேறு நம் இனத்தின் இயல்பு வேறு. ஒரு மலாய் மாணவன் பள்ளியில் ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்ளும் போது அவன் வகுப்பு ஆசிரியரோ, தலமை ஆசிரியரோ அவனை அழைத்து பதினைந்து நிமிடம் அரிவுறை செய்தால் போதும், உடனே அம் மாணவன் அடங்கி, மன்னிப்பு கேட்டு, போய் இருக்கையில் அமர்ந்து விடுவான். ஆனால், நம் இனத்தில் பிரச்சனை கொடுக்கும் பிள்ளைகள் எவருக்குமே அடுங்குவதில்லை. மாறாக அறிவுறை சொல்லும் ஆசிரியருக்கே மிறட்டல் விடுவார்கள். (இது குறித்து இங்கு ஆசிரியர் பதவிகளில் இருக்கும் வாசகர்கள் தங்கள் அனுபவங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்).

அத்தோடு மலாய் இனத்தவர் வழி தவறாமல் நன்னெறியில் செல்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு எத்தனையோ சமூக இயக்கங்களும், சாதனங்களும், குழுமங்களும் உள்ளன. அவர்களைச் சுற்றி நடப்பன யாவும் மலாய்காரர்களின் சமய, மொழி, கலாச்சார பின்னனியில் அவர்களின் சொந்த இனத்தவரால், அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப் படுகின்றன. நமக்கு அப்படி எந்த அமைப்பும் இல்லை. ஆதலால், மலாய் இனத்தவரோடு நம் தமிழ் இனத்தை ஒப்பிட்டு பார்ப்பது அர்த்தமில்லாத வேலை. அவர்கள் வேறு. நாம் வேறு.

மலாயா என்பது மலாய்காரர்களின் நாடு. சீனரைப் போல் நீங்கள் இங்கு பிழைப்பு தேடி வந்தவர்கள். அவ்வளவுதான். மேலும் உங்களை இங்கு கொண்டு வந்தவர்கள் மலாய் இனத்தவர்கள் அல்ல. தங்களின் சொந்த தேவைக்காக உங்களை இங்கு கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்து தங்கள் காலனித்துவ நாடுகளில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் வந்த போது "என்னடா பண்ரது. லட்ச்சக்கணக்கான இந்தியர்களையும், சீனர்களையும் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கோமே. நாம போவதற்கு முன்பு இவர்களுக்கு ஏதாவது வழி பண்ணனுமே" என்று குழம்பிய நிலையில், "இவர்களுக்கு குடியுரிமை கொடுங்கள், ஆனால் என்றென்றும் மலாய் இனத்தவருக்கு மற்ற இனத்தவரை காட்டிலும் சிறப்பு சலுகைகள் இந்த நாடு உள்ளவரை வரை இருக்கும் என்று மலேசிய அரசியல் சாசனத்தில் விரிவான சில ஸரத்துக்களை எழுதிக் கொள்வோம்" என்று ஆங்கிலேயர்கள் பரிந்துரைத்ததை அன்றைய மலாய் தலைவர்கள் வேண்டா வெறுப்பாய் ஏற்றுக் கொண்டு உங்களையும், சீனர்களையும் இந்த நாட்டு பிரஜைகள் ஆக்கினர். இதுதான் உண்மை.

இன்று மலாய்காரர்கள் எல்லாவற்றையும் தங்களுடையது என்று மார்போடு இழுத்து அனைத்து கொள்கிறார்கள் என்றால், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். மேலும் அவர்கள் வெறும் 7.5 விழுக்காடே ஜனத்தொகையை உடைய உங்களை நினைத்து, உங்கள் திறமைக்கு பயந்து அப்படி நடந்து கொள்ள வில்லை.

மாறாக, மலாய்காரர்களின் இன்றைய சுயநல நினைப்பிற்கும், செயலுக்கும் காரணம் "நாம் சிறிது கண் அயர்ந்தால், சீனர்கள் எல்லாவற்றையும் விழுங்கி விடுவார்கள்" என்கிற பயம் தான். மலேசிய இந்தியர்களான நாம், அவர்கள் இனத்தை தாண்டி சென்றுவிடுவோம் என்கிற பயம் எல்லாம் அவர்களுக்கு சுத்தமாக கிடையாடு. நம்ம வண்டவாலம் தான் உலகறிந்த விஷய்ம ஆச்சே !! நாம் அவர்களுக்கு வெறும் "ஜுஜுபி". ஒரே விழுங்கில் நம்மை அவர்கள் விழுங்கி விடுவார்கள்.

ஆதலால், இந்தியர்கள் இங்கு "ஆ....ஊ..." என்று ஒரு புறம் அரசியல் முழக்கம் இடத்தான் வேண்டும். இட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அழுகிற குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் இந்த இன்றைய நிகழ்வுகளுக்கும், சமுதாய சூழ்நிலைகளுக்கும் இடையில் சீன இனத்தவரைப் போல் நாம்தான் நம்முடைய நிலைப் பாட்டை தற்காத்து, மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து, அதற்கு தகுந்தாற்போலும் நாம் நடக்க வேண்டும். செயல் பட வேண்டும்.


துருப்புச் சீட்டு

எது எப்படி இருந்தாலும் சரி. யார் என்ன சொன்னாலும் சரி. இந்த நாட்டை விட்டுச் செல்லும் முன்பு ஆங்கிலேயர்கள் நமக்கு ஒரு நல்லதைச் செய்து விட்டுத்தான் சென்று இருக்கிறார்கள். மலாய்காரர்களிடம் பேரம் பேசி நமக்கு ஓட்டுரிமை வாங்கி கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள் அல்லவா?

இன்று இந்த ஓட்டுரிமை தான் நமக்கான "துருப்புச் சீட்டு". இதை உருப்படியாக பயன் படுத்தும் ஜாலத்தை கற்றுக் கொண்டோமானால் நாம் பல வகையில் நன்மை அடையலாம். இந்த விஷயம் குறித்து பிரிதொரு பதிவில் தீவிரமாக யோசிப்போம்.

2 comments:

ஆதவன் said...

//இந்த நாட்டிற்கு வந்த இந்திய தமிழர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் பட்டவர்கள் இங்கு கூலி வேலைக்காக வந்தவர்கள்தான். இவர்களிடம் படிப்பறிவு இல்லாததோடல்லாமல், சாதியம் என்ற அந்த நாளைய சமூக இயல்பின் அடி மட்டத்தில் இருந்தவர்கள் தான் மலாயாவிற்கு வந்தவர்களில் பெரும்பாலோர்.//

மலேசியத் தமிழர்களின் இன்றைய தாழ்ந்த நிலைக்கான முகாமையான காரணம் இதுதான்.

இன்னும் சொல்லப்போனால், இந்தியத் தமிழர்களாகிய நாம் இனமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள். சாதியாக.. சிறு சிறு கூட்டமாகச் சேர்ந்துகொள்வோமே தவிர, ஒட்டுமொத்தத் தமிழ் இனமாகச் சிந்திக்காதது மாபெரும் குறைபாடாகும்.

ஓர் இனமாகச் சிந்திப்பதை, ஈழத்தமிழர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சாமான்யன் said...

வாருங்கள் ஆய்தன்,

வந்தமைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

நம் இனத்தை நான் அடி முட்டாள்கள் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தாலும், நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் முட்டாள்கள் அல்ல. நம் இனத்தில் எத்தனையோ அசகாய சூரர்களை எல்லாம் நான் என் வாழ்நாளில் சந்தித்திருக்கிறேன். என்ன, அப்படி சந்தித்து பழகிய யாவரும் பிற நாட்டு தமிழர்கள்.

இதில் குறிப்பாக சென்னையில் நான் ஒரு ஆடிட்டரை சந்தித்து பழக எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது. முதலில் அவருடன் தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட நட்புறவு, பிறகு தனிப்பட்ட தோழமையாக உருப் பெற்றது. ஒரு முறை அவர் என்னை அவரது வீட்டில் நடந்த திருமணத்திற்கு அழைத்திருந்தார். நானும் சென்றேன். அங்கு அவர் குடும்பத்தை பார்த்து நான் மலைத்து செயலற்று நின்று விட்டேன்.

அவரும், அவர் மனைவியும் சார்ட்டட் அக்கவுண்டண்ஸ். அது போக அவர் தாய், தந்தையரோடு கூடப் பிறந்த சகோதர, சகோதரிகளின் வாரிசுகள் மொத்தம் 43 பேர். அனைவரும் 25 கும், 45 கும் இடைப் பட்ட வயதுள்ளவர்கள். அந்த 43 பேரில், ஒரே ஒரு பெண்மணி மட்டும் வேலை செய்யாது இல்லத்தரசியாக இருந்தார். பிற 42 பேர்களும் டாக்டர், லாயர், என்ஜினியர், ஆர்கிடெக்ட், அக்கவுண்டண் என்று பெரிய, பெரிய பதவிகளில் இருந்தார்கள்.

இது எப்படி சாத்தியமானது என்றால், அந்த குடும்பம் ஒரு பிராமணக் குடும்பம். அவர்கள் தாத்தா காலத்திலேயே அவர்கள் குடும்பத்தில் இரண்டு நீதிபதிகள் இருந்திருக்கிறார்கள். ஆக இதில் இருந்து என்ன தெரிகிறது? பாரம்பரியமாக நீங்கள் நல்ல விதையை விதைத்து, அதை பக்குவமாக உரம் தூவி, தண்ணீர் பாய்ச்சி, கண்காணித்து வந்தால் அதற்கான பலனை நிச்சயம் அடைவீர்கள் என்பதுதான்.

ஆனால், அதற்கு முன்பு "இது தான் பாதை, இது தான் பயணம்" என்பதை நாம் உணர வேண்டும். பிரச்சனை என்னவென்றால் இதை முழுமையாக நாம் உணர்வதற்கு முன்னறே நமது "பாதை நின்று விடும், பயணம் முடிந்துவிடும்".

ஆனால், மேற்கூறியவர்களை போன்று, பாரம்பரியமாக வாழ்க்கையை வெற்றி கொண்டு வருபவர்களுக்கு பாதையும் நன்கு தெரிகிறது, பயணமும் நன்கு புரிகிறது.

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. மலேசிய தமிழர்கள் இந்த அளவு பின்னடைவு கண்டு திக்கும் தெரியாமல், திசையும் தெரியாமல் தவிப்பதற்கான அடிப்படை காரணம் சாதியத்தின் தாக்கம் தான்.

சாமான்யன்

Post a Comment